பாக்கு நீரிணை
பாக்கு நீரிணை (Palk Strait) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே உள்ள வங்காள விரிகுடாவை, தென்மேற்கே உள்ள பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. தமிழ்நாட்டின் வைகை உட்படப் பல ஆறுகள் இந்நீரிணையுடன் கலக்கின்றன. இந்தியாவில் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக (1755–1763) இருந்த இராபர்ட் பாக் என்பவரின் பெயரில் இந்நீரிணை அழைக்கபப்டுகிறது.[1]
பாக்கு நீரிணை | |
---|---|
பாக்கு நீரிணை | |
பாக்கு நீரிணைப் பகுதியின் ஆழ்கடல் அளவியல் | |
அமைவிடம் | இலட்சத்தீவுக் கடல்–வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 10°00′N 79°45′E / 10.000°N 79.750°E |
வகை | நீரிணை |
சொற்பிறப்பு | இராபர்ட் பாக்கு |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | இந்தியப் பெருங்கடல் |
வடிநில நாடுகள் | இந்தியா, இலங்கை |
அதிகபட்ச நீளம் | 137 கி.மீ. |
அதிகபட்ச அகலம் | 82 கி.மீ. |
குறைந்தபட்ச அகலம் | 53 கி.மீ. |
அதிகபட்ச வெப்பநிலை | 35 °C (95 °F) |
குறைந்தபட்ச வெப்பநிலை | 15 °C (59 °F) |
இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
வரலாறு
1914 ஆம் ஆண்டில் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு தொடருந்து மூலம் பயணம் செய்வது சாத்தியமானது. பின்னர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள மன்னார் தீவிற்கு படகில் சென்று, அங்கிருந்து கொழும்பு வரை செல்ல தொடருந்துகள் இருந்தன. 1964 இல் ஒரு புயல் தனுஷ்கோடி மற்றும் அதை இணைத்த இரயில் வழித்தடங்களை அழித்தது மற்றும் பாக்கு நீரினை மற்றும் விரிகுடாவின் கரையோரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.[2][3] இதற்கு பிறகு அந்த இரயில் இணைப்பு புனரமைக்கப்படவில்லை மற்றும் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து மகாவிலச்சியா வரையிலான ரயில்பாதை உள்நாட்டுப் போரின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 1970களில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே சிறிய படகு போக்குவரத்து மட்டுமே இருந்தது, ஆனால் இதுவும் பின்னர் நிறுத்தப்பட்டது.[4]
இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இந்த நீரிணை வழியாக கப்பல்கல் செல்ல ஏதுவாக ஆழப்படுவதற்கு 1860 இல் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை முன்மொழியப்பட்டது. பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த பல முறை முயற்சிக்கப்பட்டது. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.[5] இருப்பினும், இந்த திட்டம் பல்வேறு மத வட்டாரங்களில் இருந்து எதிர்ப்பை சந்தித்தது.[6] இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது பாக்கு நீரிணைக்கு கீழே கடலுக்கடியில் செல்லும்.[7]
புவியியல்
பாக்கு நீரிணை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே உள்ள வங்காள விரிகுடாவை, தென்மேற்கே உள்ள பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது.[8] இந்நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.[1]
பாக்கு விரிகுடாவின் தெற்கு முனையில் தாழ் தீவுக்கூட்டங்களாலும், ஆழமற்ற பவளப் படிப்பாறைகளாலும் பதிக்கப்பெற்று கூட்டாக ஆதாமின் பாலம் என அழைக்கப்படுகின்றது.[1] இது வரலாற்று ரீதியாக இந்து புராணங்களில் இராமர் பாலம் என்று அறியப்படுகிறது.[9] இந்த சங்கிலி தீவுத் தொடர் தமிழ்நாட்டின் பாம்பன் தீவில் உள்ள தனுஷ்கோடிக்கும் (இராமேசுவரம் தீவு என்றும் அழைக்கப்படுகிறது), இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையில் நீண்டுள்ளது. இராமேசுவரம் தீவு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணையில் எழும் அலைகளின் சராசரி உயரம் 0.5 மீட்டர் ஆகும்[10] இந்த நீரிணையில் பொதுவாக இராமர் பலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 1-3 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ளது, அதே சமயம் நீரிணையின் மையப் பகுதி சராசரியாக 20 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆழம் 35 மீட்டர் ஆகும்.[11] ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைந்ததால் இந்த பகுதி முழுவதும் வறண்ட நிலமாக கடலிலிருந்து வெளிப்பட்டது. பின்னர் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொது இந்த பகுதி மீண்டும் நீரில் மூழ்கியது.[11]