பாதுகாப்பான பாலுறவு
பாதுகாப்பான பாலுறவு என்பது எய்ட்சு போன்ற பால்வினை நோய்கள், மனிதர்களிடையே நிகழும் பாலுறவுச் செயற்பாடுகளால் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், முன்னெச்சரிக்கையுடன், செய்யப்படக் கூடிய பாதுகாப்பான முறையிலான பாலுறவு ஆகும்.[1] இது முக்கியமாக கருத்தடை உறைகள் பயன்பாட்டை குறிக்கும். இத்தகைய பாதுகாப்பான உடலுறவு நோய்த் தொற்றுக்களின் அளவைக் குறைக்குமே தவிர, முழுமையான பாதுகாப்பை வழங்குமெனத் தீர்மானிக்க முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
1980 ஆம் ஆண்டுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு எனும் எய்ட்ஸ் நோய் பரவத் தொடங்கிய பின்னர் பாதுகாப்பான பாலுறவு தொடர்பான பரவலான கவனம் ஏற்பட்டது. பாலியற் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இந்த பாதுகாப்பான பாலுறவும் உள்ளது. தீங்கைக் குறைக்கும் ஒரு உத்தியாக இந்த பாதுகாப்பான பாலுறவு என்ற விடயம் அறிமுகப்படுத்தப்படுகிறது.[2][3] தீங்கு குறைத்தல் என்பதை அறுதியிட முடியாது. எ.கா. எச்.ஐ.வி எனப்படும் எய்ட்சு நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணியைக் கொண்ட ஒருவர், ஆணுறை பயன்படுத்தாமல் பாலுறவு கொள்ளும்போதும், ஆணுறை பயன்படுத்தி பாலுறவு கொள்ளும்போதும் குறையக்கூடிய நோயின் சூழிடர், ஐந்தில் நான்கு பங்காக இருக்கும்.[4]
கணவன் மனைவிக்கு இடையிலான பாலுறவு மட்டுமே சரியான பாதுகாப்பு என்பது வலியுறுத்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில வேளைகளில் பிற பெண்களிடம் பாலுறவு கொள்ள விரும்பும் ஆண்கள் பாலுறவின் போது ஆணுறை அணிதல் அவசியம் என்பது குறித்த கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் பாதுகாப்பான பாலுறவுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு எனும் எய்ட்ஸ் நோய் வராமல் தவிர்ப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கிட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் வழியாகப் பல நிதியுதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பான பாலுறவு சில சமயம் குடும்பக் கட்டுப்பாடு வழிமுறைகளான கருத்தடை வழிகளில் ஒன்றாகவும் இருக்கலாம் எனினும், அநேகமான கருத்தடை முறைகள் நோய்ப் பாதுகாப்பை முழுமையாக வழங்குவதில்லை.