பாலைவன வெட்டுக்கிளி
பாலைவன வெட்டுக்கிளி (Desert locust, Schistocerca gregaria[1][2]; Gryllus gregarius[3]) என்பது வெட்டுக்கிளியின் ஒரு வகையாகும். உலகில் அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய இடம்பெயரும் பூச்சிகளில் இவையும் ஒன்றாகும். பயிர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட எந்த வகையான பச்சைத் தாவரங்களையும் பெரிய அளவில் இவை உண்ணக்கூடியவை. ஒரு பொதுவான வெட்டுக்கிளி திரளானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 15 கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்டிருக்கும். இவற்றால் ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும். ஒரு சதுர கிலோமீட்டர் போன்ற ஒரு சிறிய பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளி திரளால் கூட 35,000 மக்கள் ஒருநாளைக்குச் உண்ணக் கூடிய அளவு பச்சைத் தாவரங்களை உண்ண முடியும்.[4]
பாலைவன வெட்டுக்கிளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
உயிரிக்கிளை: | கணுக்காலி |
வகுப்பு: | பூச்சி |
வரிசை: | Orthoptera |
குடும்பம்: | Acrididae |
துணைக்குடும்பம்: | Cyrtacanthacridinae |
இனக்குழு: | Cyrtacanthacridini |
பேரினம்: | Schistocerca |
இனம்: | S. gregaria |
இருசொற் பெயரீடு | |
Schistocerca gregaria Forsskål, 1775 | |
வேறு பெயர்கள் | |
for subspecies S.g. gregaria:
|
பயிர்ச் சேதம்
இவை ஒரு நாளைக்குத் தங்கள் உடல் எடைக்குச் (2 கிராம்) சமமான பச்சைத் தாவரங்களை உண்கின்றன. இலைகள், தளிர்கள், மலர்கள், பழம், விதைகள், தண்டுகள் மற்றும் பட்டை எனப் பல விதமான உணவை உண்ணக் கூடியவை. கம்பு, மக்காச்சோளம், சோளம், வாற்கோதுமை, நெல், மேய்ச்சல் நிலப்புற்கள், கரும்பு, பருத்தி, பழ மரங்கள், பேரீச்சை, வாழை தாவரங்கள், காய்கறிகள் மற்றும் களைகள் என கிட்டத்தட்ட அனைத்து பயிர்கள் மற்றும் பயிரல்லாத தாவரங்களையும் உண்கின்றன.[5]
பாலைவன வெட்டுக்கிளிப் படையெடுப்புகள்
2019-20 கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் படையெடுப்புகள்
2020 ஆம் ஆண்டில் சனவரி மாதம் முதல் ஒரு மிகப்பெரிய அளவிலான பாலைவன வெட்டுக்கிளிகள் கென்யாவில் திரண்டன. விவசாய அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மேய்ச்சல் நிலம் மற்றும் பயிர் நிலம் இவற்றால் அழிக்கப்பட்டன. 2020 சனவரி 20 ஆம் தேதி நிலவரப்படி இப்பூச்சிகள் 10,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா, சோமாலியா, மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இதனால் பாதிப்பு அடைந்தன.[6] சனவரி மாதத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில், முக்கியமாக உகாண்டா மற்றும் கென்யாவில் இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவானது.[7]
பெப்ரவரி மாதத்தில் ஐ. நா., சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் கடந்த 25 வருடங்களில் ஏற்பட்ட வெட்டுக்கிளிப் படையெடுப்புகளில் இந்தத் திரள் தான் மிகப் பெரியது என்று கூறியது.[8] இந்தத் திரளானது போரால் பாதிக்கப்பட்ட யெமனில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்குப் பரவியது.[9] 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட கடும் மழையால் உருவான சாதகமான சூழ்நிலையால் இப்பூச்சிகள் பெருமளவில் உருவாயின. பெப்ரவரி 2ம் தேதிப் படி, வெட்டுக்கிளிப் படையெடுப்பால் அப்பகுதியில் முதன்முதலில் பூச்சித்தாக்குதல் சார்ந்த அவசர நிலை பிரகடனப்படுத்திய நாடாக சோமாலியா உருவானது [8]
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் தேதி பாக்கித்தானிய அரசு, பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கு எதிராகத் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது.[10]
இந்தியா
இந்தியாவுக்குள் வந்த திரளானது ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தது. குசராத்து மற்றும் இராஜஸ்தானில் இவற்றின் பரவல் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. திசம்பர் மாதத்தில் குசராத்தில் 17,000 எக்டேர் பரப்பளவில் இருந்த, பெரும்பாலும் சீரகப் பயிர்கள் சேதம் அடைந்தன. மேற்கு ராஜஸ்தானின் பகுதிகளில் குறைந்தது 3,50,000 எக்டேர் பரப்பளவில் இருந்த பயிர்கள் இவற்றால் அழிக்கப்பட்டன.[11][12] மே மாதத்தில் இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வெட்டுக்கிளி திரள்களால் மோசமாக பாதிப்படைந்தன. இத்திரள்கள் ஒரு கிலோ மீட்டர் அகலம் உடையதாக இருந்தன. இது கடந்த 27 ஆண்டுகளில் நடந்த வெட்டுக்கிளித் தாக்குதல்களில் மிக மோசமானதாகும்.[13][14]
காரணம்
இதன் தொடக்கமானது 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கியதாகும். அம்மாதம் மெகுனு சூறாவளி றுப்உல் காலீ என்று அழைக்கப்படும் தெற்கு அராபியத் தீபகற்பத்தின் ஒரு பெரிய மக்கள் வாழாத பாலைவனப் பகுதியைக் கடந்தது. அச்சூறாவளி மணல்திட்டுகளுக்கு இடையிலிருந்த இடைவெளிகளை குறுகிய காலம் மட்டும் இருக்கும் ஏரிகளாக நிரப்பியது. இதன் மூலம் வெட்டுக்கிளிகள் மனிதப் பார்வையில் படாமல் பெருகத் தொடங்கின. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட லுபன் சூறாவளியால் இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது.[15][16][17] இச்சூறாவளிகள் புவி சூடாதலால் உருவானவையாகும்.[17] இச்சூறாவளிகளால் அரேபியப் பாலைவனத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை சுமார் 8,000 மடங்கு அதிகமானது.
பரவலர் பண்பாட்டில்
வெட்டுக்கிளிகளின் பயிர்களை அழிக்கும் தன்மை காரணமாக, பல மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரங்களில் பஞ்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வெட்டுக்கிளிகள் பயன்படுத்தப்படுகின்றன. த மம்மி போன்ற திரைப்படங்களிலும் இவை காட்டப்பட்டுள்ளன.
கி. ராஜநாராயணன் தனது கோபல்ல கிராமம் புதினத்தில் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து எழுதியுள்ளார். தான் வெட்டுக்கிளி படையெடுப்பை பார்த்ததில்லை என்றும், தனது பாட்டி காலத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு நடந்ததாகவும், அதைப்பற்றி தன் பாட்டி தன்னிடம் கூறியதைக் கொண்டு தன் புதினத்தில் கையாண்டதாகவும் குறிப்பிடுள்ளார். மேலும் வெட்டுக்கிளி படையெடுப்பானது பஞ்சத்தின் அறிகுறி என்று தன் பாட்டி குறிப்பிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.[18]