பிந்துலு மாவட்டம்
பிந்துலு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Bintulu; ஆங்கிலம்: Bintulu District; சீனம்: 民都鲁县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும்.
பிந்துலு மாவட்டம் | |
---|---|
Bintulu District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 03°01′01″N 113°19′59.99″E / 3.01694°N 113.3333306°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | பிந்துலு பிரிவு |
மாவட்டம் | பிந்துலு மாவட்டம் |
நிர்வாக மையம் | பிந்துலு நகரம் |
மாவட்ட அலுவலகம் | பிந்துலு |
உள்ளூர் நகராட்சி | பிந்துலு மேம்பாட்டு ஆணையம் Bintulu Development Authority |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,990.40 km2 (768.50 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,86,100 |
• அடர்த்தி | 93/km2 (240/sq mi) |
இனக்குழுக்கள் | |
• இபான் | 38.3% |
• சீனர் | 17.9% |
• மெலனாவ் | 11.4% |
• இதர மக்கள் | 32.4% |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 97000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 086 XXX |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QT |
பிந்துலு மாவட்டம்; கூச்சிங் நகரத்திற்கு வடகிழக்கே 610 கி.மீ. (380 மைல்); சிபு மாவட்டத்திற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரி மாவட்டத்திற்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.
சொல் பிறப்பியல்
16-ஆம் நூற்றாண்டின் போது, போர்த்துகீசிய கடலோடிகளால் "ரிவர் டி புருலு" (River de Burulu) என்று பிந்துலுவிற்குப் பெயரிடப்பட்டது. பிந்துலு என்ற பெயரில் பல புராணக் கதைகள் உள்ளன. புரூக் வம்சத்தின் ஆட்சியின் போது, சரவாக் பழங்குடியினரின் சமூகத்தில், தங்கள் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டையாடுதல் (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.[1]
பின்னர் வேட்டையாடிய தலைகளை கெமெனா ஆற்றில் (Kemena River) வீசி விடுவார்கள். அதன் பிறகு ஆற்றில் இறங்கி அந்தத் தலைகளைச் சேகரிப்பார்கள். தலைகளைச் சேகரிக்கும் நடைமுறையை "மெந்து உலாவ்" (Mentu Ulau) என உள்ளூர்ப் பூர்வீக மொழியில் அழைத்தார்கள்.[2]
இந்த மெந்து உலாவ் எனும் சொல்லில் இருந்து பிந்துலு எனும் சொல் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.[3]
வரலாறு
1861-ஆம் ஆண்டில் வெள்ளை ராஜா ஜேம்சு புரூக், பிந்துலு மாவட்டத்தைக் கையகப்படுத்தும் போது, அந்தப் பகுதி ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது. பின்னர் 1862-ஆம் ஆண்டில் ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். 1867-இல், முதல் பொதுக்குழு கூட்டம் (General Council); அதாவது அப்போதைய மாநில சட்டமன்றம் பிந்துலு நகரில் கூட்டப்பட்டது.
1969-ஆம் ஆண்டு, தென்சீனக் கடற்கரையில் எண்ணெய் எரிவாயு இருப்புக்கள் கண்டுபிடிக்கப்படும் வரையில், பிந்துலு ஒரு சின்ன மீன்பிடி கிராமமாகவே இருந்தது. எரிவாயு இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பிந்துலு நகரம், தொழில்களின் மையமாக மாறியுள்ளது.
சரவாக்கின் வெள்ளை ராஜா
ஜேம்சு புரூக், 1841-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தால் சரவாக்கின் வெள்ளை ராஜாவாக நியமிக்கப் பட்டார். அப்போது சரவாக் என்று அழைக்கப்பட்டது. இப்போது அந்தப் பகுதி கூச்சிங் என்று அழைக்கப்படுகிறது. இருபது ஆண்டுகள் கழித்து 1861-இல், பிந்துலு பகுதியையும் புரூணை சுல்தானகம் விட்டுக் கொடுத்தது.[4][5]
அந்தக் கட்டத்தில், பிந்துலு ஒரு சிறிய குடியேற்றப் பகுதியாக இருந்தது. பிந்துலு கிராமத்தில் கெப்பல் கோட்டை (Fort Keppel) எனும் ஒரு மரக் கோட்டை கட்டப்பட்டது. ராஜா ஜேம்சு புரூக் மற்றும் சார்லஸ் புரூக்கின் நெருங்கிய நண்பரான சர் என்றி கெப்பல் (Sir Henry Keppel) என்பவரின் பெயர் அந்தக் கோட்டைக்குச் சூட்டப்பட்டது.[6]
பொது
பிந்துலு மாவட்டத்தின் முதல் விமான ஓடுபாதைக் கட்டுமானம் 1934-இல் தொடங்கியது. நிதி சிக்கல்களின் காரணமாக 1938-இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது.
பின்னர் ஆங்கிலேயர்கள் அந்த விமான ஓடுபாதையை மீண்டும் கட்டினார்கள். 1955-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. 2002-இல், பழைய வானூர்தி நிலையத்திற்குப் பதிலாக புதிய பிந்துலு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது.
பிந்துலு மாவட்டத்தின் பொருளாதாரம், செம்பனை, வனத் தோட்டங்கள் (Forest Plantations), பாமாயில் பதப் படுத்துதல், மரக்கழிவு பதப் படுத்துதல் மற்றும் சிமெண்டு உற்பத்தி ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சரவாக் மாநிலத்தில் பிந்துலு துறைமுகம் மிகவும் பரபரப்பான துறைமுகமாகும்.