மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா (Gulf of Mannar) என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளையும் கற்பாறைகளையும் கொண்ட இராமர் பாலம் மன்னார் வளைகுடாவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையில் இருந்து பிரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
மன்னார் வளைகுடா | |
---|---|
ஆள்கூறுகள் | 8°28′N 79°01′E / 8.47°N 79.02°E |
வடிநில நாடுகள் | இந்தியா, இலங்கை |
அதிகபட்ச நீளம் | 160 km (99 mi) |
அதிகபட்ச அகலம் | 130–275 km (81–171 mi) |
சராசரி ஆழம் | 1,335 m (4,380 அடி) |
மேற்கோள்கள் | [1][2] |
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
வளைகுடாவில் உள்ள தீவுகள்
- வான்தீவு
- காசுவார் தீவு
- காரைச்சல்லி தீவு
- விலங்குசல்லி தீவு
- உப்புத்தண்ணி தீவு
- புலுவினிசல்லி தீவு
- நல்ல தண்ணி தீவு
- ஆனையப்பர் தீவு
- வாலிமுனை தீவு
- அப்பா தீவு
- பூவரசன்பட்டி தீவு
- தலையாரி தீவு
- வாழை தீவு
- முள்ளி தீவு
- முசல் தீவு
- மனோலி தீவு
- மனோலிபுட்டி தீவு
- பூமரிச்சான் தீவு
- புள்ளிவாசல் தீவு
- குருசடை தீவு
- சிங்கில் தீவு
இந்த தீவுகள் நிர்வாக காரணங்களுக்காக
- தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள்
- வேம்பார் குழுவில் 3 தீவுகள்
- கீழக்கரை குழுவில் 7 தீவுகள்
- மண்டபம் குழுவில் 7 தீவுகள்
என நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.