மை லாய் படுகொலைகள்
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.
மை லாய் படுகொலைகள் My Lai Massacre | |
---|---|
இடம் | சோன் மை கிராமம், தெற்கு வியட்நாம் |
நாள் | மார்ச் 16, 1968 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | மை லாய் 4, மை கே 4 சிற்றூர்கள் |
தாக்குதல் வகை | படுகொலை |
இறப்பு(கள்) | 347 (அமெரிக்க இராணுவத் தகவலின் படி - மை கே படுகொலைகள் தவிர்த்து), வேறு தகவல்களின் படி 400 பேர் படுகொலை, ஏராளமானோர் காயம், வியட்நாமிய அரசுத் தகவலின் படி இரண்டு ஊர்களிலும் 504 பேர் படுகொலை |
தாக்கியோர் | அமெரிக்க இராணுவத்தின் அமெரிக்கல் பிரிவு, 2ம் லெப். வில்லியம் கேலி (குற்றவாளியாகக் காணப்பட்டார்) |
கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன[1]. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது[2],[3]. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான்.
இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.
நிகழ்வு
பின்னணி
டிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது.
அமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி கேணல் "ஒரான் ஹெண்டர்சன்" என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான்[7]. அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான்[8].
படுகொலைகள்
மார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்[9]. கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிராமத்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான்[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "மை லாய் படுகொலை" நினைவு கூறும் வியட்நாம் பரணிடப்பட்டது 2008-03-29 at the வந்தவழி இயந்திரம்
- ஓர் அமெரிக்க நிகழ்வு பரணிடப்பட்டது 2008-03-30 at the வந்தவழி இயந்திரம்
- மை லாய் நீதிமன்றுகள் 1970 பரணிடப்பட்டது 2003-04-16 at the வந்தவழி இயந்திரம்
- மை லாய் படுகொலைகள் பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம்
- 1969 டைம் கட்டுரை பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம்
- Vietnam massacre soldier 'sorry', பிபிசி