இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்


முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603)[1] இங்கிலாந்தின் அரசியாகவும், 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசி, குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும், கடைசியுமான ஆட்சியாளர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். இவருடைய 45 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரச் செழிப்பும், இலக்கிய மலர்ச்சியும் ஏற்பட்டன. இங்கிலாந்து உலகக் கடலாதிக்க நாடுகளுள் தலையாய இடத்தைப் பெற்றது.[2]

முதலாம் எலிசபெத்
இங்கிலாந்தினதும், அயர்லாந்தினதும் அரசி (more...)
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
ஆட்சி17 நவம்பர் 1558 – 24 மார்ச் 1603
முடிசூடல்15 ஜனவரி 1559
முன்னிருந்தவர்முதலாம் மேரி
பின்வந்தவர்முதலாம் ஜேம்ஸ்
வேந்திய மரபுடியூடர் இல்லம்
தந்தைஎட்டாம் ஹென்றி
தாய்ஆன் போலீன்
பிறப்பு7 செப்டெம்பர் 1533
கிரீன்விச், இங்கிலாந்து
இறப்பு24 மார்ச்சு 1603(1603-03-24) (அகவை 69)
ரிச்மண்ட், இங்கிலாந்து
அடக்கம்வெஸ்ட்மின்ஸ்டர் குருமடம்

பிறப்பும் மரபு உரிமையும்

1533 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்சில் பிறந்தார். எட்டாம் ஹென்றியின் மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். எலிசபெத்தின் பிறப்பு நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆனால் எலிசபெத்தின் தந்தை என்றி டியூடர் வம்சத்தில் தன்னைத் தொடர்ந்து அரசாள ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்ததனால் ஏமாற்றமடைந்தார்.[3] இவரது தாய் ஆன் போலீன், எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே மரண தண்டனை விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிைவத்த போதும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்றார். இவரது சகோதரர் ஆறாம் எட்வர்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். 1553 ஆம் ஆண்டில் ஆறாம் எட்வர்ட் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு லேடி ஜேன் கிரே என்பவர் 9 நாட்கள் ஆட்சி புரிந்தார். அதன் பிறகு முதலாம் மேரி ஆட்சிக்கு வந்தார். 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது ஒன்று விட்ட உடன்பிறந்த சகோதரியான இங்கிலாந்தின் முதலாம் மேரியின் மரணத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.[4] மேரியின் ஆட்சிக் காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் கலகக்காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.

எலிசபெத்தின் கல்வி

எட்டாவது ஹென்றியின் ஆறாவது மனைவியான கேத்ரின் பார் என்பவர் எலிசபெத்தின் மீது அன்பு செலுத்தி அவருக்கு சிறந்த கல்வி கிடைக்க வழிவகை செய்தார். எலிசபெத் கேம்பிரிட்சு கல்வியாளர்கள் ஜான் செக் (ஆறாவது எட்வர்டின் ஆசிரியர்) மற்றும் ரோஜர் அஸ்சாம் ஆகியோரிடமிருந்து மனித நேய அணுகுமுறை கொண்ட பரந்த கல்வியைப் பெற்றார். அவர் பிரெஞ்சு, இத்தாலி, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இலக்கியம், இசை, நாடகம் மற்றும் நடனத்தின் மீதான எலிசபெத்தின் ஈடுபாடு அவரின் இறப்பு வரை தொடர்ந்தது. அவர் தனது படைப்புகளான பல கவிதைகளை விட்டுச் சென்றுள்ளார். அரசி எலிசபெத்தின் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியரால் எழுதப்பட்ட பெரும்பான்மையான நாடகங்கள் எலிசபெத்தின் முன்னால் நடித்துக்காட்டப் பட்டவையாகும். எலிசபெத் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவராவார்.[5]

அரசியல், இராஜதந்திரம் மற்றும் குணநலன்கள்

முதலாம் எலிசபெத் நல்ல ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தியதுடன், பேர்க்லேயின் பாரனான வில்லியம் சிசில் என்பவரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் படி ஆலோசித்தே முடிவு செய்தார். அரசியானதும் அவர் செய்த முதல் வேலை, ஆங்கிலேயப் புரோட்டஸ்டண்ட் திருச்சபையை நிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார். ட்ரேக், வால்டர், ராலி, ஹாக்கின்ஸ் போன்றவர்களை உற்சாகப்படுத்தி கடல் ஆதிக்கத்தில் சிறந்து விளங்க செய்தார். பின்னர் எட்மண்டு ஸ்பென்சர், கிறிஸ்டோபர் மர்லோ, ஷேக்ஸ்பியர் போன்ற கவிதை, கதா சிரியர்களை ஊக்கப்படுத்தி இலக்கியம் வளரச் செய்தார் .தன் தந்தை எட்டாம் ஹென்றியின் கொடிய உள்ளத்தையும், தாய் ஆன் போலினின் சாகசப்பண்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தார்.[6] ஆசுதிரியாவின் சார்லசு, சுவீடன் மன்னர், இசுபெயின் நாட்டு இரண்டாம் பிலிப் இவர்கள் அரசியை மணக்க போட்டியிட்ட முக்கியமானவர்கள். எலிசபெத் இவர்கள் அனைவரையும் நம்பிக்கையோடு சில வருடங்கள் காத்திருக்க வைத்து வெற்றி கண்டார். இறுதியில் தான் எவரையும் மணந்து கொள்ளப் போவதில்லை என்றும் ,கன்னியாகவே காலம் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்து தன் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நாடாளுமன்றம் பல வேண்டுகோள்களை விடுத்தும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

எலிசபெத்தின் அயல்நாட்டுக் கொள்கை

எலிசபெத் அயல்நாட்டுக் கொள்கையைத் திறத்துடன் கையாண்டு வந்தார். அவர் 1560 ஆம் ஆண்டிலேயே எடின்பரோ உடன்படிக்கையைச் செய்தார். அதனால் இசுகாட்லாந்துடன் அமைதி ஏற்பட்டது. பிரான்சுடன் நிகழ்ந்து வந்த போரும் நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர்ந்தது. ஆயினும், நாளைடவில் இங்கிலாந்து இசுெபயினுடன் போரிட நேர்ந்தது. எலிசபெத் போரைத் தவிர்க்க முயன்றார். 16 ஆம் நுாற்றாண்டில் கத்தோலிக்க நாாடான இசுபெயின் போரார்வமுள்ளதாக இருந்ததால், இசுெபயினுக்கும், மறுப்புச் சமய நாடான இங்கிலாந்துக்கும் போர் நிகழ்வது தடுக்க முடியாததாக இருந்தது. எலிசபெத் போரை விரும்பாதவராக இருந்தாலும், ஆங்கிலேய மக்களும், அமைச்சர்களும், நாடாளுமன்றமும் அவரை விட போரார்வம் மிக்கவர்களாக இருந்தனர்.

பல ஆண்டுகளாக எலிசபெத் இங்கிலாந்தின் கடற்படையை வலுப்படுத்தி வந்தார். ஆயினும் இசுபெயின் மன்னரான இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் மேல் படையெடுப்பதற்காக விரைவில் ஒரு கப்பற்படையை உருவாக்கினார். "ஆர்மெடா" எனப்படும் இந்த கப்பற்படையில் இங்கிலாந்திடமிருந்த அளவிற்கு கப்பல்கள் இருந்தன. ஆயினும் அதில் கப்பலோட்டிகள் எண்ணிக்கை குறைவு. மேலும், ஆங்கிலேயக் கப்பலோட்டிகள் சிறந்த பயிற்சி பெற்றவர்கள். அவர்களுடைய கப்பல்கள் தரத்திலும் போர்த் தாக்குதலிலும் உயர்ந்தவை. 1588-இல் நடைபெற்ற பெரும் கடற்போரில் இசுபானிய ஆர்மெடா முற்றிலும் முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியின் பயனாக, இங்கிலாந்து உலகில் மிகச் சிறந்த கடலாதிக்க நாடாக உயர்ந்தது. 20 ஆம் நுாற்றாண்டு வரை இங்கிலாந்து இவ்வுயர் நிலையிலேயே இருந்தது.[7]

நாடாளுமன்றத்தின் நிலை

இஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக்காக போராடிய நாடாளுமன்றம், எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது. நாடாளுமன்றமானது முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது. மேலும், எலிசெபத் தமது விருப்பப்படியே அரசாண்டார். 1559 இல் எலிசபெத் தனது முதல் நாடாளுமன்ற அமர்வின் போது, மேலாதிக்கச் சட்டம் 1558 ஐ நிறைவேற்றினார். இச்சட்டமானது இவரது தந்தை எட்டாம் ஹென்றி இயற்றிய மேலாதிக்கச் சட்டம் 1534 ஐ மாற்றியமைத்ததாகும். அவர் இங்கிலாந்தின் தேவாலயத்தை மறுபடியும் நிறுவினார். மேலும், ஒரு புதிய மற்றும் பொதுவான பிரார்த்தனை புத்தகத்தை உருவாக்கினார். இதற்குக் காரணமாக ஒரே விதமான வழிபாட்டு முறையை வலியுறுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்தார். பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[8]

ஆட்சியின் இறுதிக்காலம்

எலிசபெத்தின் ஆட்சியின் இறுதிக்காலம் மிகவும் சிரமமான காலமாக இருந்தது. நாட்டில் பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் நாசம் ஏற்பட்டது. அயர்லாந்தில் உணவு பற்றாக்குறையும் மற்றும் கலகக்காரர்களால் கிளர்ச்சிகளும் நிரம்பியிருந்தன. எலிசபெத்தின் அதிகாரம் குறித்து பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவளுடைய விருப்பமிகு நபர்களில் ஒருவரான எசெக்சின் எர்ல் இராபர்ட் டீவாரக்ஸ், எர்சின் ஏர்ல் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. அவரை அக் ஓ நீல் தலைமையிலான குழுவுடன் கலகத்தை அடக்கும் பொருட்டு அயர்லாந்துக்கு அனுப்பியிருந்தார். மாறாக, எசெக்ஸ் எர்ல் இங்கிலாந்திற்குத் திரும்பி தானே சுயமாக ஒரு கிளர்ச்சியைத் தொடங்க முற்பட்டார். 1601 ஆம் ஆண்டில் அவர் துரோகமிழைத்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.

தன்னுடைய சக்தி மற்றும் வலிமை குறைவடைவதை உணர்ந்திருந்தாலும், எலிசபெத் தனது மக்கள் மீது பக்தியையும், அவர்களுக்காக பணிபுரிவதையும் தொடர்ந்தார். 1601 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தனது சிறப்பு மிகு உரையைப் பதிவு செய்தார். இந்த சிறப்பான உரையில் எலிசபெத் தனது நீண்ட ஆட்சிக்காலத்தை திரும்பிப் பார்க்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். அந்த உரையில் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் ”நான் ஒருபோதும் பேராசை கொண்டதில்லை, வீணில் செலவழிப்பவளாக இருந்ததில்லை. அணுகுவதற்குக் கடினமானவளாக இருந்ததில்லை. மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவளாக இருந்ததில்லை. என் இதயம் ஒருபோதும் உலகாயதப் பொருட்களின் மீது நாட்டம் கொண்டதில்லை. என்னுடைய நாட்டு மக்களின் நன்மையை மட்டுமே நான் கருதினே்” எனத் தெரிவித்திருந்தார்.[9]

எலிசபெத்தின் இறப்பு

1602 ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் வரை ராணி உடல்நலம் நல்ல முறையிலேயே இருந்தது. அவருடைய நண்பர்களின் தொடர்ச்சியான உயிரிழப்புகளால் கடுமையான எலிசபெத் மனத் தளர்வு அடைந்தார். பிப்ரவரி 1603 இல், அவரது உறவினர் மற்றும் நெருங்கிய நண்பரான லேடி நோலிஸ், நாட்டிங்காம் கவுண்டெஸ் ஆகியோரின் மரணம், அரசியிடம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எலிசபெத் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மிகவும் நீக்கமுடியாத, நிலையான துயரத்துடன் இயக்கமின்றி பல மணி நேரங்களாக ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார்.[10] இராபர்ட் செசில் நீங்கள் கட்டாயம் படுக்கைக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிய போது, ”சிறிய மனிதா, ஒரு அரசியிடம் கட்டாயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாகாது” என்று பதிலளித்து தனது அதிகாரத்தைப் பறைசாற்றினார்.[11]

எலிசபெத் தனது 69 ஆவது வயதில் ரிச்மாண்டு அரண்மனையில் 1603 மார்ச் 24 ஆம் நாள் மரணமடைந்தார். பல சாதாரண இலண்டன் நகரவாசிகள் எலிசபெத்தின் இறுதிப்பயணத்தைக் காண வீதிக்கு வந்தனர். கி.பி.1603 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் இராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடைபெற்றது, எலிசபெத் திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தைகளைக் கொண்டிராமலும் இருந்ததால், நேரடியான டியூடர் இன வாரிசு இல்லாமல் இருந்த நிலையில் இசுகாட்லாந்தின் அரசி மேரியின் மகன் ஆறாம் ஜேம்ஸ் அரசராக்கப்பட்டார். இங்கிலாந்தை 118 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த டியூடர் வம்ச ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை