உலக உணவுத் திட்டம்
உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு பிரிவு ஆகும். இது பட்டினியைப் போக்கவும், உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் பாடுபடும் உலக அளவில் மிகப்பெரும் மனிதநேய அமைப்பாகும்.[1] இவ்வமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் சராசரியாக 91.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவியை வழங்குகிறது.[2] தமக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்யவோ அல்லது பெறவோ முடியாத மக்களுக்கு உதவ இவ்வமைப்பு உரோமில் உள்ள இதன் தலைமையகத்திலிருந்தும், உலகெங்கிலும் உள்ள 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் அலுவலகங்களிலிருந்தும் செயல்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவின் ஒரு பகுதியாகும்.[3]
உலக உணவுத் திட்டத்தின் சின்னமும், உரோமில் அதன் தலைமையகமும் | |
சுருக்கப்பெயர் | WFP |
---|---|
உருவாக்கம் | 19 திசம்பர் 1961 |
வகை | அரசுகளுக்கிடையேயான அமைப்பு, ஒழுங்குமுறை அமைப்பு, ஆலோசனைக் குழு |
சட்டப்படி நிலை | செயலில் |
தலைமையகம் | உரோம், இத்தாலி |
தலைவர் | டேவிட் பீசுலி |
மேல் அமைப்பு | ஐக்கிய நாடுகள் பொதுச் சபை |
விருது(கள்) | அமைதிக்கான நோபல் பரிசு 2020 |
இணையதளம் | wfp.org |
பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்புகளுக்காகவும், போர் மற்றும் ஆயுத மோதல்களில் பட்டினியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும் இந்த அமைப்புக்கு 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]
வரலாறு
1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.
இலங்கையில் அதன் பணி
ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள்
- தாய் சேய் போஷாக்கு
- கல்விக்கான உணவு
- வேலைக்கான உணவு
- பயிற்சிக்கான உணவு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அதிகாரபூர்வ இணையதளம் உலக உணவுத் திட்டம் (ஆங்கில மொழியில்)
- போஷாக்கின்மைப் பிரச்சினை பற்றி உலக உணவுத்திட்ட அலுவலர் செல்வி சச்சிதானந்ததின் செவ்வி பிபிசியில்
- உணவுப் படை: கல்விசார்ந்த ஓர் விளையாட்டு பரணிடப்பட்டது 2006-03-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)