தமிழகக் கடலோரப் பகுதிகள்
தமிழகக் கடலோரப் பகுதிகள், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, இந்திய துணைக்கண்டம் ஆகியவற்றைச் சார்ந்து தென்கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. 1,076 கிமீ (669 மைல்கள்) நீளமுள்ள இப்பகுதி இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவது நீளமான கடலோரப் பகுதியாகும்.[1] வடக்கே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து ஆரம்பித்து, தெற்கே இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவை அமைந்துள்ள கன்னியாகுமரி வரையிலும் பரந்துவிரிந்துள்ளது.
இலங்கை, பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளையும் தன்னுடைய நீர்ப்பரப்பினால் சூழ்ந்துள்ளது. இக்கடலோரத்தில் 14 மாவட்டங்களும், 15 பெரிய துறைமுகங்களும், ஏரிகளும், நீர் நிலைகள், கடற்கரைகள் ஆகியவையும் உள்ளன.
புவியியல்
இக்கடலோரப் பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏழுதேசம் வரையிலும் சுமார் 1,076 km (669 mi) நீளத்தில் அமைந்துள்ளது.[2] இராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் தீவு, பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா, இலங்கையின் இராம சேது பாலம் ஆகியவற்றை இணைக்கிறது.[3] திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்கள் இக்கடலோரப்பகுதியில் அமைந்துள்ளன.
கடல் வணிகம்
தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்களாக சென்னைத் துறைமுகம், எண்ணூர் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம், நாகப்பட்டினம் ஆகியவை விளங்குகின்றன. இதுமட்டுமின்றி 11 சிறிய துறைமுகங்களும் உள்ளன.[4] சென்னைத் துறைமுகம், செயற்கையாக உருவாக்கப்பட்டது; இது இந்தியாவின் இரண்டாவது ஓய்வற்ற துறைமுகமாகும்.[5]
மீன்பிடிப்பும் மீன்வளர்ப்பும்
சுமார் 10.5 இலட்சம் மீனவர்களும் 3 பெரிய மீன்பிடி துறைமுகங்களும், 3 நடுத்தர மீன்பிடி துறைமுகங்களும், 363 மீன்பிடி நிலையங்களும் உள்ளன. இங்குபிடிக்கப்படும் மீன்கள் இந்தியாவின் மொத்த மீன்பிடிப்புகளில் 10-12 % அதாவது, 7.2 இலட்சம் டன் ஆகும். மீன்வளர்ப்பில், இறால், கடற்காய், கிளிஞ்சல், கடற்சாதாழை, ஆளி உள்ளிட்டவைகளும் அடங்கும்.[6]
தட்பவெப்பநிலை
வங்காள விரிகுடாவில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பல்வேறு தட்பவெப்ப மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றது. 26, திசம்பர், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சுமார் 10,000 நபர்கள் உயிரிழந்தனர்.[7]
கடற்கரை
தமிழக கடலோரப் பகுதிகளில் நிறைய கடற்கரைகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள மெரீனா கடற்கரை[8] 13 கிமீ (8.1 மைல்கள்)[9] நீளமானதாக உள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான இயற்கையான கடற்கரையாகும்.[10] உலகின் பதினொன்றாவது நீளமான கடற்கரையாகும்.[11]
செடிகளும் விலங்குகளும்
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான இது 21 சிறிய தீவுகளை கொண்டுள்ளது. இது மன்னார் வளைகுடா அருகிலும், தூத்துக்குடிக்கும் தனுஷ்கோடிக்கு மத்தியிலும் உள்ளது.[12] இப்பூங்காவில் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்களும், விலங்குகளும் உள்ளன.[13] மொத்தமுள்ள 2,200 இந்திய மீன்களில், சுமார் 510 (23%) வகையான மீன் வகைகள் இப்பகுதியில் உள்ளது.