2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்
2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள் லெபனானின் பெய்ரூத் நகரின் தெற்கு புறநகர் பகுதியான பூர்ஜ் எல்-பராஜ்னெயில் நவம்பர் 12, 2015 அன்று இரு தற்கொலைப் போராளிகள் குண்டுகளை வெடித்ததைக் குறிப்பிடுவதாகும். ஹிஸ்புல்லா ஆதிக்கத்தில் உள்ள இந்தப் புறநகர் பகுதியில் சியா முசுலிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.[2] இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37இலிருந்து[3] 43 வரை[1][2][4] மதிப்பிடப்படுகின்றது. இந்தத் தாக்குதலை நடத்தியதாக இசுலாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.[1][2]
2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள் | |
---|---|
பாலத்தீன ஏதிலி முகாமின் பூர்ஜ் எல்-பராஜ்னெ நுழைவாயில் | |
இடம் | பூர்ஜ் எல்-பராஜ்னெ, பெய்ரூத், லெபனான் |
நாள் | 12 நவம்பர் 2015 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சியா குடிகள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல்கள் |
இறப்பு(கள்) | 43 |
காயமடைந்தோர் | 200–240 |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | இரு அடையாளமில்லா இசுலாமிய அரசு போராளிகள்.[1] |
பின்னணி
2011 முதல் பக்கத்து நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வந்துள்ளது. உந்த உள்நாட்டுப் போர் தொடங்கிய சிறிது காலத்திலேயே லெபனானின் குழுக்கள் சிரியா போலவே தங்களுக்குள் பிளவுபட்டன. சிலர் போரில் ஈடுபட வேண்டும் என்றும் சிலர் லெபனானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் கொண்டிருந்தனர். சிரிய உள்நாட்டுப் போரில் 2014இல் ஐக்கிய அமெரிக்காவும் 2015இல் உருசியாவும் ஈடுபட்டன.
லெபனானில் ஏப்ரல் 2014 முதல் புதிய அரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதமானதால் அரசாண்மையில் வெற்றிடம் ஏற்பட்டது.[5]
குண்டுவெடிப்புகள்
பெய்ரூத்தின் புறநகர் வணிகப்பகுதியான பூர்ஜ் எல் பரஜ்னெயில் உசைனியா தெருவில் பொதுப் பாதுகாவலர் நிலையம் அருகே இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றன. அல்-மனார் தொலைக்காட்சியின்படி[6] இது சியா ஹிஸ்புல்லாவினர் வலிமையுடன் உள்ள இடமாகும்.[7] 18:00க்கு முன்னதாக முதல் குண்டுவெடிப்பு சியா இசுலாம் மசூதிக்கு வெளியே நடந்த சில நேரத்திலேயே இரண்டாவது அருகிலுள்ள அடுமனையின் உட்புறம் நடைபெற்றது.[8] முதல் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு பாதசாரிகள் உதவுமுன்னரே இரண்டாவது 20 மீட்டர் அப்பால் ஐந்து[6] முதல் ஏழு நிமிடங்களுக்குள் நடைபெற்றது. மூன்றாவது தற்கொலையாளர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கும் முன்னரே கொல்லப்பட்டார். குண்டிருந்த இடுப்புக் கச்சையை கட்டியவாறு கால்கள் கிழிக்கப்பட்டவராக இறந்து கிடந்தார்.[8] அடையாளப்படுத்திக்கொள்ளாத அரசு ஊழியர் மூன்றாம் போராளி இரண்டாம் குண்டுவெடிப்பிற்கு அருகில் இருந்ததால் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறினார். இந்த மூன்றாமவரைக் குறித்து அல் மயாதீனும் குறிப்பிடதோடு குண்டுள்ள கச்சைக் கட்டிய தாடியுடனான இளைஞரை தன் ஒளிதத்தில் காட்டியது. எசுபுல்லாவினரின் பிலால் ஃபர்காத்: "அவர்கள் குடிமக்கள், தொழுகையாளர்கள், ஆயுதமேந்தாதவர்கள், மகளிர், முதியோரைக் குறி வைத்துள்ளனர்..அப்பாவிகளைக் குறி வைத்துள்ளனர் ... [இது ஒரு] சாத்தானின், தீவிரவாத தாக்குதல்" எனக் கூறினார். லெபனானின் பாதுகாப்புப் படைகளும் எசுபுல்லா துப்பாக்கியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி வளைத்து விலக்கினர்.[5]
நலத்துறை அமைச்சு குறைந்தது 43 நபர்களாவது உயிரிழந்திருக்கலாமென்றும் 239 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்தது;[9] ஆனால் சில காயமடைந்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என மதிப்பிட்டது. பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சமூகத்தின் லெபனான் கிளை 200 பேர் காயமடைந்ததாக அறிவித்தது.[8] எதிர்பாராத எண்ணிக்கையிலான நோயாளிகளின் எண்ணிக்கையினால் இப்பகுதியில் இருந்த மருத்துவமனைகள் குருதிக் கொடை தருமாறு மக்களைக் கோரினர். கூடியிருந்த மக்கள் முதலுதவி வண்டிகள் வருவதற்கு தடையாக இருந்தமையால் அவர்களை அவசரச் சேவைப் பணியாளர்கள் விலக்கினர்.[8]
பலியானவர்கள்
துவக்கத்தில் உயிரிழந்தவர்களில் பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைகழகத்தின் இரு பணியாளர்கள் அடங்குவர்.[5] மிச்சிகனின் டியர்போர்னின் மூன்று லெபனான்-அமெரிக்கவாசிகள்— 49-வயது-மாதுவும் இளம் இணையொன்றும்—கொல்லப்பட்டனர்; இணையரின் மூன்று வயது மகன் தீவிரமான காயமடைந்தார்.[10]
எசுபுல்லாவின் பாதுகாப்பில் மூத்த நபரான ஹாஜி உசைன் யாரி (அபு முர்தாதா) இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[11]
பெய்ரூத் வாசியான அடெல் டெர்மோசு குண்டு வெடிப்பதற்கு முன்னரே கொலையாளி ஒருவரை பிடித்துக் கொண்டதால் உயிரிழப்புகளைக் குறைக்க உதவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது; இந்தக் குண்டு வெடித்தபோது கொலையாளியுடன் டெர்மோசும் வெடித்துச் சிதறினார். சமூக வலைத்தளங்களில் டெர்மோசு ஓர் நாயகனாக கொண்டாடப்படுகின்றார்.[12]
புலனாய்வு
நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்குள்ளாகவே, குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்களாக ஐயத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் சிரியா நாட்டவர்கள், ஒருவர் பாலத்தீனர்.[13] லெபனானின் எசுபுல்லாத் தலைவர் சயீத் அசன் நசுரல்லா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர்களாக சிரிய, லெபனான் நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.[14]
தாக்குதல் நிகழ்த்தியவர்
இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக இசுலாமிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.[1][2] அடையாளம் காட்டாத டுவிட்டர் கணக்கிலிருந்து இடப்பட்ட பதிவில், இக்குழு இதில் ஒரு தாக்குதலை நடத்தியதற்கு பொறுப்பேற்றது; தங்கள் முகவர்கள் குண்டுபதித்த இருசக்கரத் தானுந்தை நடுச்சாலையில் வெடித்ததாக குறிப்பிட்டது.[8] மூன்றாவது கொலையாளியைக் குறிப்பிடாது வெளியிட்ட குழுவின் அறிக்கை இவ்வாறிருந்தது: "நபிகள் சாட்சியாக பழிதீர்க்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்பதை சியா துரோகிகள் அறிந்து கொள்ளட்டும்."[5] குறிப்பிடப்படாத இணைய அறிக்கை ஒன்றில் "கலீபகத்தின் படைவீரர்கள்" இத்தாக்குதலை நிகழ்த்தியதாக கூறியுள்ளது.[15]
இதனையும் காண்க
- நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல், இந்நிகழ்விற்கு ஒருநாள் பிந்தி பாரிசில் நடந்த தாக்குதல்; இதனையும் நிகழ்த்தியதாக இசுலாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
- மெட்ரோஜெட் விமானம் 9268