கோமகட்ட மாரு சம்பவம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
நாள் | 23 மே 1914 |
---|---|
அமைவிடம் | வான்கூவர் |
விளைவு | கப்பல் மீண்டும் கொல்கத்தாவுக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டது |
இறப்புகள் | 20 |
கோமகட்ட மாரு சம்பவம் அல்லது "பட்ஜ் பட்ஜ் சம்பவம்" (Komagata Maru incident) என்பது சப்பானிய நீராவி கப்பலான கோமகட்ட மாரு சம்பந்தப்பட்டது. இதில் பிரித்தானிய இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழு ஏப்ரல் 1914 இல் கனடாவுக்கு குடிபெயர முயன்றது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு, பிரித்தானிய ஏகாதிபத்திய காவல்துறை குழுத் தலைவர்களை கைது செய்ய முயன்ற போது, ஒரு கலவரம் ஏற்பட்டது. அவர்கள் மீது காவல்துறையினர் சுட்டனர். இதன் விளைவாக 20 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கப்பல் பிரித்தானிய ஆங்காங்கிலிருந்து, சாங்காய், சீனா, சப்பானின் யோக்கோகாமா வழியாக கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் நகரை நோக்கி 1914 ஏப்ரல் 4 ஆம் தேதி பிரிட்டிசு இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து கோமகட்ட மாரு என்ற கப்பல் 376 பயணிகளை ஏற்றிச் சென்றது. பயணிகளில் 337 சீக்கியர்களும், 27 முஸ்லிம்களும் 12 இந்துக்களும், பிற பஞ்சாபியர்களும் பிரிட்டிசு குடிமக்களும் இருந்தனர். [1] இந்த 376 பயணிகளில், 24 பேர் கனடாவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மற்ற 352 பேர் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் கப்பல் கனடிய கடலில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆசிய வம்சாவளியில் குடியேறியவர்களை விலக்க கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியுரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த பல சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
பிரிட்டிசு இந்தியாவிலிருந்து குடியேற்றத்தை கட்டுப்படுத்த கனடிய அரசாங்கத்தின் முதல் முயற்சியாக சனவரி 8, 1908 அன்று ஒரு ஆணைக்குழுவை அமைத்தது. இது பிற நாட்டிலிருந்து வரும் நபர்கள் குடியேறுவதை தடைசெய்தது. நடைமுறையில் இந்த தொடர்ச்சியான பயண ஒழுங்குமுறை இந்தியாவில் தங்கள் பயணத்தைத் தொடங்கிய கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். கனடா ஏராளமான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இந்த விதிமுறைகள் வந்தன. 1913 ஆம் ஆண்டில் 400,000 க்கும் அதிகமானோர் வந்தனர். அவர்களில் அனைவரும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள்.
ஒரு சிங்கப்பூர் தொழிலதிபரான குர்தித் சிங் சந்து, கனடிய குடியுரிமைச் சட்டங்கள் பஞ்சாபியர்கள் அங்கு குடியேறுவதைத் தடுக்கின்றன என்பதை அறிந்து, கொல்கத்தாவிலிருந்து வான்கூவர் செல்ல ஒருகப்பலை வாடகைக்கு அமர்த்துவதன் மூலம் இந்த சட்டங்களை மீற அவர் விரும்பினார். கனடாவுக்கான முந்தைய பயணங்கள் தடுக்கப்பட்டிருந்த அவரது தோழர்களுக்கு உதவுவதே அவரது நோக்கமாகும்.
குர்தித் சிங் 1914 சனவரியில் கோமகட்ட மாரு என்ற ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தினார். [2] அதே நேரத்தில், சனவரி 1914 இல், அவர் ஆங்காங்கில் இருந்தபோது கதர் இயகத்தை பகிரங்கமாக ஆதரித்தார். [3] கதர் இயக்கம் பிரிட்டிசு ஆட்சியில் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெறும் நோக்கில் சூன் 1913 இல் அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் பஞ்சாப் குடியிருப்பாளர்களால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இது பசிபிக் கடற்கரையின் கல்சா சங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
பயணிகளில் 337 சீக்கியளும், 27 முஸ்லிம்களும், 12 இந்துக்களும், பிற பிரிட்டிச்சு குடிமக்களும் இருந்தனர் . சீக்கிய பயணிகளில் ஒருவரான ஜகத் சிங் திண்ட், இந்திய-அமெரிக்க சீக்கிய எழுத்தாளரும், "ஆன்மீக அறிவியல்" பற்றிய விரிவுரையாளருமான பகத் சிங் திந்தின் இளைய சகோதரர் ஆவார். அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான இந்தியர்களின் உரிமைகள் குறித்த முக்கியமான சட்டப் போரில் ஈடுபட்டார். [4]
இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக கோளாறுகளை உருவாக்கும் நோக்கில் ஏராளமான இந்திய தேசியவாதிகள் உள்ளனர் என்பதை கனடிய அரசு அறிந்திருந்தது. (கதர் சதி கட்டுரையை காண்க) [5] பாதுகாப்பு அபாயங்களுக்கு மேலதிகமாக, இந்தியர்கள் கனடாவுக்கு குடிபெயர்வதைத் தடுக்கும் அரசுக்கு விருப்பமும் இருந்தது. [6]
கப்பல் கனடியக் கடலுக்கு வந்தபோது அதிலிருந்தவர்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. வான்கூவரில் கப்பலை சந்தித்த முதல் குடிவரவு அதிகாரிகள் [7] பயணிகளை இறங்க அனுமதிக்க மறுத்தனர்.
இதற்கிடையில், கப்பலிலுள்ள பயணிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு, கனடாவிலும் அமெரிக்காவிலும் எதிர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கன்டா அரசால் மறுக்கப்பட்ட இந்தியர்கள், பல நாள் போரட்டங்களுக்குப் பிறகு கரையிறங்க முடியாமலேயே பிறந்த நாட்டுக்கு திரும்பினர்.
கப்பல் செப்டம்பர் 27 அன்று கொல்கத்தா வந்தது. இந்தியத் துறைமுகத்திற்குள் நுழைந்ததும், கப்பல் ஒரு பிரிட்டிசு துப்பாக்கிப் படகு மூலம் நிறுத்தப்பட்டது. மேலும் பயணிகள் காவலில் வைக்கப்பட்டனர். பிரிட்டிசு அரசாங்கம் கோமகட்டா மாருவில் இருந்தவர்களை ஆபத்தான அரசியல் கிளர்ச்சியாளர்களாக பார்த்தது. பட்ஜ் பட்ஜுக்கு கப்பல் வந்தபோது, அதிலிருந்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் சென்றனர். அவர்கள் தாங்கள் கைது செய்வதை எதிர்த்தனர். அப்போது ஒரு கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பயணிகளில் 19 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பினர். ஆனால் மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தங்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், முதல் உலகப் போரின் நடந்த காலம் முழுவதும் கிராமக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் 'பட்ஜ் பட்ஜ் சம்பவம்' அல்லது "கோமகட்ட மாரு சம்பவம்" என்று அறியப்பட்டது.
குழுவின் தலைவர் குர்தித் சிங் சந்து என்பவர் தப்பித்து 1922 வரை தலைமறைவாக வாழ்ந்தார். மகாத்மா காந்தி இவரை சரணடையுமாறு வலியுறுத்தினார். பின்னர் அவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். [8]
1952 ஆம் ஆண்டில் இந்திய அரசு பட்ஜ் பட்ஜுக்கு அருகில் கோமகட்ட மாரு தியாகிகளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை அமைத்தது. இதை இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். இந்த நினைவுச்சின்னம் உள்நாட்டில் "பஞ்சாபி நினைவுச்சின்னம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒரு சீக்கியர்கள் வைத்துள்ள கத்தி (கிர்பன்) போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. [9]
தற்போதுள்ள நினைவுச்சின்னத்தின் பின்னால் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை, மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கோமகட்ட மாரு அறக்கட்டளை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் ஒரு நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம், முதல் மாடியில் ஒரு அருங்காட்சியகம் இரண்டாவது அரங்கம் ஆகியவை இருக்கும். கட்டுமானத்திற்கான மொத்த செலவு இந்திய ரூபாயில் 24 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. [10] கோமகட்ட மாரு சம்பவத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் சிறப்பு நாணயங்களை வெளியிட்டது. [11]
கோமகட்ட மாரு வெளியேறிய 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு தகடு 1989 சூலை 23 அன்று வான்கூவரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் (கோயில்) வைக்கப்பட்டது.
75 வது ஆண்டுவிழாவிற்கான ஒரு தகடு வான்கூவரில் 1099 வெஸ்ட் ஹேஸ்டிங்ஸ் தெருவில் உள்ள போர்டல் பூங்காவிலும் உள்ளது. [12]
கோமகட்ட மாருவின் 80 வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் ஒரு தகடு 1994 இல் வான்கூவர் துறைமுகத்தில் வைக்கப்பட்டது.
கோமகட்ட மாரு சம்பவத்தை நினைவுகூரும் ஒரு நினைவுச்சின்னம் சூலை 23, 2012 அன்று வெளியிடப்பட்டது. [13]
கோமகட்ட மாரு வருகையின் 100 வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் முத்திரை கனடா அஞ்சல் துறையால் மே 1, 2014 அன்று வெளியிடப்பட்டது. [14]
முதல் கட்ட [15] கோமகட்ட மாரு அருங்காட்சியகம் [16] வான்கூவர் ரோஸ் தெரு கோவில் ரோஸ் தெருவிலுள்ள கல்சா திவான் சமூகக் கோயிலில் ஜூன் 2012 இல் திறக்கப்பட்டது..
இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மில்லியன் கணக்கான மானியங்கள் மற்றும் பங்களிப்பு நிதியை கனடிய அரசு மே 10, 2008 அன்று, அறிவித்தது. [17] [18] குடியேற்றம் மற்றும் போர்க்கால நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வரலாற்று தவறுகளுக்கு மே 18, 2016 அன்று, பிரதமர் ஜஸ்டின் துரூடோ பொது மன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு முறையான "முழு மன்னிப்பு" கோரினார். [19] [20] அவர் "கோமகட்டா மாரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக அழிக்க முடியாது. இன்று நாங்கள் அதற்கு மன்னிப்பு கோருகிறோம். மேலும் சிறப்பாகச் செய்ய பரிந்துரைக்கிறோம்" எனவும் கூறினார். [21] [22] [23]