ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓர் உணவு ஆகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் ,கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்க்கவோ முடியும். ஊட்டச்சத்து, ஊட்டக்கூறு என்ற இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும். இச்செயல்முறையின் மூலம் ஓர் உயிரினம் தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள உணவைப் பயன்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும், இதன் மூலம் ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை ஆதரிக்க உணவைப் பயன்படுத்துகிறது. இச்செயல் முறை உயிரினங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து அறிவியல் என்பது ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு ஆகும். இருப்பினும் இது பொதுவாக மனித ஊட்டச்சத்தையே வலியுறுத்துகிறது.

see caption
ஊதா இலை நீல வண்ணத்துப்பூச்சி கடற்பறவைகள் மற்றும் உயிரினங்களின் எச்சத்திலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுகிறது.

உயிரினத்தின் வகையே அதற்கு என்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதையும் அவற்றை அவ்வுயிரினம் எவ்வாறு பெறுகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. உயிரினங்கள் கரிமப் பொருட்களை உட்கொள்வதன் மூலமோ, கனிமப் பொருட்களை உட்கொள்வதன் மூலமோ, ஒளியை உறிஞ்சுவதன் மூலமோ அல்லது இவற்றின் சில கலவையின் மூலமோ ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன. அடிப்படை தனிமங்களை உட்கொள்வதன் மூலம் சில உயிரினங்கள் தங்களுக்குள்ளேயே ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்யலாம். சில உயிரினங்கள் ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களைப் பெற மற்ற உயிரினங்களை உட்கொள்ள வேண்டும். அனைத்து வகையான உயிரினங்களுக்கும் வாழ்வதற்கு கார்பன், ஆற்றல் மற்றும் நீர் மற்றும் பல்வேறு மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன. விலங்குகளுக்கு கார்போவைதரேட்டுகள், லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் போன்ற சிக்கலான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மற்ற உயிரினங்களை உட்கொள்வதன் மூலம் விலங்குகள் அவற்றைப் பெறுகின்றன. உணவு தேடுவதற்கும் மனித ஊட்டச்சத்தை முன்னேற்றுவதற்கும் மனிதர்கள் விவசாயத்தையும் சமையலையும் உருவாக்கியுள்ளனர். தாவரங்கள் மண் மற்றும் வளிமண்டலத்தின் மூலம் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன. பூஞ்சைகள் அவற்றைச் சுற்றியுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அவற்றை உடைத்து மைசீலியம் மூலம் உறிஞ்சுகின்றன.

ஆராய்ச்சி

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரசாயனப் புரட்சியின் போது உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவியல் பகுப்பாய்வு தொடங்கியது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வேதியியலாளர்கள் ஊட்டச்சத்து பற்றிய கோட்பாடுகளை உருவாக்க பல்வேறு தனிமங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை பரிசோதித்தனர்.[1] நவீன ஊட்டச்சத்து அறிவியல் 1910 ஆம் ஆண்டுகளில் தனிப்பட்ட நுண்ணூட்டச்சத்துக்களை அடையாளம் காணத் தொடங்கியது. 1926 ஆம் ஆண்டில் வேதியியல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட முதல் வைட்டமின் தயமீன் ஆகும். மேலும் ஊட்டச்சத்துகளில் வைட்டமின்களின் பங்கு பற்றி அடுத்த தசாப்தங்களில் ஆய்வு செய்யப்பட்டது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது மனிதர்களுக்கான முதல் பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கொடுப்பனவுகள் உருவாக்கப்பட்டன.[2] மனித ஆரோக்கியத்தில் இதன் முக்கியத்துவத்தின் காரணமாக, ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு மனித ஊட்டச்சத்தையும் விவசாயத்தையும் பெரிதும் வலியுறுத்துகிறது. அதே சமயம் சூழலியல் இரண்டாம் நிலை கவலையாக உள்ளது.[3]

ஊட்டச்சத்துக்கள்

விவசாய அமைப்புகளுக்குள் உரமாக்கல் என்பது சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஊட்டச்சத்து மறுசுழற்சியின் இயற்கையான சேவைகளைப் பயன்படுத்துகிறது. பாக்டீரியா, பூஞ்சை, பூச்சிகள், மண்புழுக்கள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் உரத்தை வளமான மண்ணில் தோண்டி சீரணிக்கின்றன. மண்ணில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மீண்டும் பயிர்களின் உற்பத்திக்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் என்பவை ஆற்றல் மற்றும் உடல் கூறுகளை வழங்கும் பொருட்களாகும். இவை உயிரினங்கள் உயிர்வாழ, வளர மற்றும் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் என்பவை அடிப்படை கூறுகளாக அல்லது சிக்கலான பெருமூலக்கூறுகளாக இருக்கலாம். கரிமப் பொருட்களில் சுமார் 30 தனிமங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நைட்ரசன், கார்பன் மற்றும் பாசுபரசு ஆகியவை மிக முக்கியமானவையாகும்.[4] பெருமூலக்கூறுகள் என்பவை ஓர் உயிரினத்திற்குத் தேவையான முதன்மையான பொருட்களாகும். நுண்ணூட்டச்சத்துக்கள் என்பவை ஓர் உயிரினத்திற்கு சுவடு அளவுகளில் தேவைப்படும் உகந்த இரைதேடல் என்பது செலவு-பயன் பகுப்பாய்வால் விளக்கப்படும் ஒரு உணவுப் பழக்கத்தைக் குறிக்கிறது. ஒரு விலங்கு உணவுக்காக செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் குறைக்கும் அதே வேளையில் ஊட்டச்சத்துக்களின் ஆதாயத்தை அதிகரிக்க வேண்டும். விலங்குகளின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்வதற்காக இம்முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இது மற்ற உயிரினங்களுக்கும் நீட்டிக்கப்படலாம். சில உயிரினங்கள் தனித்த உணவுப் பொருட்களுக்கு மட்டும் தகவமைத்துக் கொள்ளும் வல்லுநர்களாக இருக்கின்றன. மற்றவை பலவகையான உணவு ஆதாரங்களையும் உட்கொள்ளக்கூடிய பொதுவானவையாகும்.[5]

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஓர் உயிரினத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாதபோது ஏற்படும் நிலையாகும். போதிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் இருப்பதாலோ அல்லது திடீரென ஊட்டச்சத்துக்களை இழப்பதாலோ ஏற்படலாம். இந்நிலை நிகழும்போது, ஓர் உயிரினம் ஆற்றல் நுகர்வு மற்றும் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் சேமிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டை நீடிக்கச் செய்ய முடியும். சேமிக்கப்பட்ட ஆற்றல் இருப்புக்கள் தீர்ந்து போகும் வரை உயிரினம் அதை பயன்படுத்தும். மேலும் கூடுதல் ஆற்றலுக்காக அவ்வுயிரினம் தன் சொந்த உடல் நிறைகளையும் உடைக்கும்.[6]

உயிரினங்கள்

விலங்குகள்

பிரான்சின் அரியேச்சு ஆற்றின் அருகே ஒரு மீன் கொத்தி தலைப்பிரட்டையை சாப்பிடுகிறது

விலங்குகள் பலவகை உண்ணிகளாகும். அவை ஊட்டச்சத்துக்களைப் பெற மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றன. தாவர உண்ணிகள் தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்குகளாகும். மாமிச உண்ணிகள் என்பவை மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகளாகும். அனைத்துண்ணிகள் என்பவை தாவரங்கள் மற்றும் பிற விலங்குகள் இரண்டையும் உண்ணும் விலங்குகளாகும்.[7] சீரணிக்க முடியாத தாவர செல்லுலோசிலிருந்து சீரணிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை உருவாக்க பல தாவரவகைகள் பாக்டீரியா நொதித்தலை நம்பியுள்ளன. சில வைட்டமின்கள் அல்லது ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு மாமிச உண்ணிகள் விலங்குகளின் இறைச்சியை கண்டிப்பாக உண்ண வேண்டும். தாவரங்களுடன் ஒப்பிடுகையில் விலங்குகளுக்கு பொதுவாக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.[8] கார்போவைதரேட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை விலங்குகளின் வாழ்க்கைக்குத் தேவையான பெருமூலக்கூற்றுப் பொருள்களாகும்.[9][10]

தண்ணீரைத் தவிர அனைத்து பெரு நுண்ணுட்டச் சத்துகளும் உடலின் ஆற்றலுக்குத் தேவைப்படுகின்றன. இருப்பினும், இது அவற்றின் ஒரே உடலியல் செயல்பாடு அல்ல. உணவில் உள்ள பெரு நுண்ணூட்டச் சத்துகள் மூலம் வழங்கப்படும் ஆற்றல் கிலோகலோரிகளில் அளவிடப்படுகிறது.. பொதுவாக கலோரிகள் என்று அழைக்கப்படுகிறது, இங்கு 1 கலோரி என்பது 1 கிலோகிராம் தண்ணீரை 1 பாகை செல்சியசு அளவுக்கு உயர்த்த தேவையான ஆற்றலின் அளவாகும்.[11]

கார்போவைதரேட்டுகள் கணிசமான அளவு ஆற்றலைச் சேமிக்கும் மூலக்கூறுகளாகும். இந்த ஆற்றலைப் பெற விலங்குகள் கார்போவைதரேட்டுகளை சீரணித்து வளர்சிதைமாற்றம் செய்கின்றன. கார்போவைதரேட்டுகள் பொதுவாக வளர்சிதை மாற்றத்தின் போது தாவரங்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆனால் விலங்குகள் இயற்கையிலிருந்து பெரும்பாலான கார்போவைதரேட்டுகளைப் பெற வேண்டும், ஏனெனில் அவை அவற்றை உருவாக்கும் திறன் குறைவாகவே பெற்றுள்ளன. சர்க்கரைகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் ஆகியவை இக்கார்போவைதரேட்டுகளில் அடங்கும். குளுக்கோசு என்பது கார்போவைதரேட்டின் எளிய வடிவமாகும்.[12] கார்போவைதரேட்டுகள் குளுக்கோசு மற்றும் குறுகிய-சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்க உடைக்கப்படுகின்றன, மேலும் அவை தாவரவகை நில விலங்குகளுக்கு மிக அதிகமான ஊட்டச்சத்துக்களாகவும் உள்ளன.[13]

லிப்பிடுகள் விலங்குகளுக்கு கொழுப்பு மற்றும் எண்ணெய்களை வழங்குகின்றன. தண்ணீரில் கரையாது இவை நீண்ட காலத்திற்கு ஆற்றலைச் சேமிக்கும். பல்வேறு தாவர மற்றும் விலங்கு மூலங்களிலிருந்து லிப்பிடுகள் பெறப்படுகின்றன. பெரும்பாலான உணவு கொழுப்பு அமிலங்கள் முக்கிளிசரைடுகள், கிளிசரால் மற்றும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. பாசுபோலிப்பிடுகள் மற்றும் இசிடெரால்கள் போன்றவை சிறிய அளவில் காணப்படுகின்றன.[14] ஒரு விலங்கின் உடல் அது உற்பத்தி செய்யும் கொழுப்பு அமிலங்களின் அளவை கொழுப்பு உணவு உட்கொள்ளல் அதிகரிக்கும் போது குறைக்கும். அதே நேரத்தில் கார்போவைதரேட்டு உட்கொள்ளல் அதிகரிக்கும் போது அது உற்பத்தி செய்யும் கொழுப்பு அமிலங்களின் அளவை அதிகரிக்கிறது.[15]

விலங்குகளால் உட்கொள்ளப்படும் புரதம் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது. இது பின்னர் புதிய புரதங்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்படும். செல்லுலார் கட்டமைப்புகள், செல் திரவங்கள், மற்றும் என்சைம்கள் (உயிரியல் வினையூக்கிகள் ) ஆகியவற்றை உருவாக்க புரதம் பயன்படுகிறது.[16] பெரும்பாலான வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இயக்குநீர்கள் அவசியம், அதே போல் டிஎன்ஏ பிரதியீடு, பழுதுபார்ப்பு மற்றும் படியெடுத்தல் போன்ற செயல்களுக்கும் புரதம் அவசியமாகும்.[17]

பெரும்பாலான விலங்குகளின் நடத்தை ஊட்டச்சத்து மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இடம்பெயர்வு முறைகள் மற்றும் பருவகால இனப்பெருக்கம் ஆகியவை உணவு கிடைக்கும் தன்மையுடன் இணைந்து நடைபெறுகின்றன. மேலும் விலங்குகளின் எண்ணிக்கையைக் கூட்ட இனக்கவர்ச்சி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[18] விலங்குகள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளுடன் நேர்மறை மற்றும் எதிர்மறையான தொடர்புகளை வளர்த்துக் கொள்கின்றன. மேலும் நிபந்தனைக்குட்பட்ட உணவு வெறுப்பின் மூலம் நச்சுக் காயம் அல்லது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திய உணவுகளை உள்ளுணர்வாகத் தவிர்க்கின்றன. எலிகள் போன்ற சில விலங்குகள், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாவிட்டால், புதிய உணவு வகைகளைத் தேடுவதில்லை.[19]

மனிதன்

மனித உணவுக்காகத் தயாரிக்கப்படும் சில துரித உணவுகள்

ஆரம்பகால மனித ஊட்டச்சத்தும் மற்ற விலங்குகளைப் போலவே ஊட்டச்சத்துக்களைத் தேடுவதைக் கொண்டிருந்தது. ஆனால் இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாறிய கற்காலப் புரட்சியுடன் வேறுபட்டது. இதில் மனிதர்கள் உணவை உற்பத்தி செய்வதற்காக விவசாயத்தை உருவாக்கினர். 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இரசாயனப் புரட்சி, உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆய்வு செய்வதற்கும் மேலும் மேம்பட்ட உணவு தயாரிப்பு முறைகளை உருவாக்குவதற்கும் மனிதர்களை அனுமதித்தது. 20 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள், மனிதர்களின் ஊட்டச்சத்து தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய பெருமளவிலான உற்பத்தி மற்றும் உணவு வலுவூட்டலை அனுமதித்தது.[20] மனித நடத்தை மனித ஊட்டச்சத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இது உயிரியலுடன் கூடுதலாக சமூக அறிவியலின் பாடமாக அமைகிறது. மனிதர்களின் ஊட்டச்சத்து, மகிழ்ச்சிக்காக சாப்பிடுவதுடன் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. மேலும் ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை மற்றும் உடல்நலக் கவலைகளைப் பொறுத்து இந்த உகந்த உணவு மாறுபடலாம்.[21]

மனிதர்கள் பலவகையான உணவுகளை உண்கிறார்கள். தானியங்கள் பயிரிடுதல் மற்றும் ரொட்டி உற்பத்தி ஆகியவை விவசாயத்தின் தொடக்கத்திலிருந்து மனித ஊட்டச்சத்தின் முக்கிய அங்கங்களாக உள்ளன. ஆரம்பகால மனிதர்கள் இறைச்சிக்காக விலங்குகளை வேட்டையாடினர். நவீன மனிதர்கள் விலங்குகளை அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதற்காக வளர்க்கின்றனர். கால்நடை வளர்ப்பின் வளர்ச்சியானது சில கலாச்சாரங்களில் உள்ள மனிதர்கள் மற்ற விலங்குகளின் பாலை உட்கொண்டு அதை பாலாடைக்கட்டி போன்ற உணவுகளாக உற்பத்தி செய்ய அனுமதித்துள்ளது. மனிதர்கள் உண்ணும் மற்ற உணவுகளில் கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவையும் அடங்கும். வளர்ப்பு விலங்குகள் மற்றும் தாவர எண்ணெய்களின் அணுகல் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களின் மனித உட்கொள்ளலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. நோய்க்கிரும நுண்ணுயிரிகளின் மாசுபாட்டைத் தடுக்கும் மற்றும் உணவு உற்பத்தியை எளிதாக்கும் மேம்பட்ட உணவுப் பதப்படுத்தும் முறைகளை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர். உலர்த்துதல், உறைதல், சூடாக்குதல், அரைத்தல், அழுத்துதல், பேக்கிங்கு, குளிரூட்டல் மற்றும் கதிர்வீச்சு ஆகியவை இதில் அடங்கும். பெரும்பாலான கலாச்சாரங்கள் உணவில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்க்கின்றன. உணவின் பாதுகாப்பு, தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை மேம்படுத்த மற்ற சில சேர்க்கைகளும் பயன்படுத்தப்படுகின்றன.[22]

சர்க்கரை முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், மனிதர்கள் பெரும்பாலான கார்போவைதரேட்டுகளை தானியங்களிலிருந்து மாச்சத்தாகப் பெறுகிறார்கள். விலங்குகளின் கொழுப்பு, வெண்ணெய், தாவர எண்ணெய் மற்றும் இலைக் காய்கறிகளில் லிப்பிடுகளாக காணப்படுகின்றன. மேலும் இவை உணவுகளில் சுவையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. புரதமானது செல்லுலார் பொருளை உருவாக்குவதால், கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் காணப்படுகிறது. இருப்பினும் உணவு பதப்படுத்தும் சில முறைகள் உணவில் உள்ள புரதத்தின் அளவைக் குறைக்கின்றன.[23] மனிதர்கள் எத்தனாலில் இருந்து ஆற்றலைப் பெறலாம். இது உணவு மற்றும் மருந்து ஆகிய இரண்டிலும் உள்ளது. ஆனால் ஒப்பீட்டளவில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.[24]

மனிதர்களில், மோசமான ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோய்களான குருட்டுத்தன்மை, இரத்த சோகை, இசுகர்வி, குறைப்பிரசவம், செத்துப் பிறத்தல் தைராய்டு பற்றாக்குறை போன்ற ஆபத்தான நோய்களுக்கு உட்படுகிறார்கள்.[25] ஊட்டச்சத்து மிகையால் அல்லது உடல் பருமன்[26][27] மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி[28] போன்ற நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இருதய நோய்,[29] ரிழிவு நோய்[30][31][32] போன்ற கொடும் நோய்களும் ஊட்டச்சத்துடன் தொடர்புடைய நோய்களாகும்.

வளர்ப்பு விலங்குகள்

வளர்ப்பு விலங்குகளான செல்லப்பிராணிகள், கால்நடைகள் மற்றும் வேலை செய்யும் விலங்குகள் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட பிற விலங்குகளில், அவ்விலங்குகளின் தீவனத்தின் மூலம் மனிதர்களால் ஊட்டச்சத்து நிர்வகிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் தீவனப்பயிர் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு முதல் சிறப்புச் செல்லப்பிராணி உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அடுத்தடுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செல்லப்பிராணிகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துள்ளது. குறிப்பாக நாய் உணவு மற்றும் பூனை உணவு ஆகியவை பெரிதும் ஆய்வு செய்யப்படுகின்றன. பொதுவாக இந்த விலங்குகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இவ்வுணவு உள்ளடக்கியது. பூனைகள் டாரைன் எனப்படும் 2-அமினோயீத்தேன்சல்போனிக் அமிலம் போன்ற சில பொதுவான ஊட்டச்சத்துக்களுக்கு உணர்திறன் கொண்டவையாகும். மேலும் இறைச்சியிலிருந்து பெறப்படும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் பூனைக்குத் தேவைப்படுகின்றன. பெரிய இன நாய்க்குட்டிகள் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கு ஆளாகின்றன, ஏனெனில் சிறிய இன நாய் உணவு உறிஞ்சக்கூடியதை விட அதிக ஆற்றல் அடர்த்தியாக இருக்கும்.[33]

தாவரம்

தாவரங்களில் ஒளிச்சேர்க்கை திட்டம். உற்பத்தி செய்யப்படும் கார்போவைதரேட்டுகள் தாவரங்களில் சேமிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன

பெரும்பாலான தாவரங்கள் மண் அல்லது வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சப்படும் கனிம பொருட்கள் மூலம் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன. கார்பன், ஐதரசன் , ஆக்சிசன், நைட்ரசன் மற்றும் கந்தகம் ஆகியவை ஒரு தாவரத்தில் கரிமப் பொருட்களை உருவாக்கி நொதி செயல்முறைகளை அனுமதிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். பைகார்பனேட், நைட்ரேட்டு, அமோனியம் மற்றும் சல்பேட்டு போன்ற அயனிகள் மண்ணில் இருந்து உறிஞ்சப்படுகின்றன.. அல்லது கார்பன் டை ஆக்சைடு, நீர், ஆக்சிசன் வாயு மற்றும் கந்தக டை ஆக்சைடு போன்ற வாயுக்களாக உறிஞ்சப்படுகின்றன. பாசுபரசு, போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை எசுத்தராக்கல் வினைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. . அவை முறையே பாசுப்பேட்டு, போரிக் அமிலம் மற்றும் சிலிசிக் அமிலம் என மண்ணின் மூலம் பெறப்படுகின்றன. . பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, குளோரின், இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஆகியவை தாவரங்களால் பயன்படுத்தப்படும் பிற ஊட்டச்சத்துக்களாகும்.[34]

தாவரங்கள் மண்ணிலிருந்து அவற்றின் வேர்கள் மூலமாகவும், காற்றில் இருந்து (முக்கியமாக நைட்ரசன் மற்றும் ஆக்சிசனைக் கொண்டவை) அவற்றின் இலைகள் வழியாகவும் அத்தியாவசியத் தனிமங்களை எடுத்துக் கொள்கின்றன. மண்ணில் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் நேர்மின் அயனிப் பரிமாற்றம் மூலம் அடையப்படுகிறது, இதில் வேர் முடிகள் ஐதரசன் அயனிகளை (H + ) புரோட்டான் பம்புகள் மூலம் மண்ணில் செலுத்துகின்றன. இந்த ஐதரசன் அயனிகள் எதிர்மறையாக மின்சுமை ஏற்றம் செய்யப்பட்ட மண் துகள்களுடன் இணைக்கப்பட்ட நேர்மின் அயனிகளை இடமாற்றம் செய்கின்றன, இதனால் நேரயனிகள் வேர்கள் மூலம் உறிஞ்சுவதற்கு கிடைக்கின்றன. இலைகளில், கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிசனை வெளியேற்ற இலைத்துளைகள் திறக்கின்றன.[35] பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரசன் ஏராளமாக இருந்தாலும், மிகச் சில தாவரங்களே இதை நேரடியாகப் பயன்படுத்த முடியும். எனவே, பெரும்பாலான தாவரங்கள், அவை வளரும் மண்ணில் நைட்ரசன் கலவைகள் இருக்க வேண்டும். பெரும்பாலும் மந்த வளிமண்டல சூழல் நைட்ரசன் நைட்ரசனை நிலைப்படுத்தும் செயல்பாட்டில் பாக்டீரியாவால் மண்ணில் உயிரியல் ரீதியாக பயன்படுத்தக்கூடிய வடிவங்களுக்கு மாற்றப்படுவதால் இது சாத்தியமாகிறது.[36]

இந்த ஊட்டச்சத்துக்கள் தாவரத்திற்கு ஆற்றலை வழங்காததால், அவை வேறு வழிகளில் ஆற்றலைப் பெற வேண்டும். பச்சை தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து குளோரோபிளாசுட்டுகள் மூலம் ஆற்றலை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை மூலம் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றுகின்றன.[37]

பூஞ்சை

பூஞ்சைகள் கரிம இரசாயனப் பொருட்களை ஆற்றல் மூலங்களாகவும், கரிம சேர்மங்களை கார்பனின் முக்கிய ஆதாரமாகவும் பயன்படுத்தும் நுண்ணுயிரிகளாகும். பெரும்பாலான பூஞ்சைகள் வேர் போன்ற மைசீலிய இழைத் தொகுதி மூலம் உணவுப்பொருளை உறிஞ்சிக் கொள்கின்றன. இவை உயிரினத்தின் ஊட்டச்சத்து மூலத்தின் மூலம் வளர்கின்றன மற்றும் காலவரையின்றி நீட்டித்தும் கொள்கின்றன. பூஞ்சை தன்னை சுற்றியுள்ள பொருட்களை உடைக்க இயக்குநீரை வெளியேற்றுகிறது, பின்னர் செல் சுவர் வழியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. பூஞ்சைகள் ஒட்டுண்ணிகளாக, சாறுண்ணிகளாக மற்றும் இணைவாழ்விகளாகவும் இருக்கமுடியும். ஒட்டுண்ணிப் பூஞ்சைகள் விலங்குகள், தாவரங்கள் அல்லது பிற பூஞ்சைகள் போன்ற வாழும் புரவலன்களை இணைத்து உண்ணும். சாறுண்ணிப் பூஞ்சைகள் இறந்த மற்றும் சிதைந்த உயிரினங்களுடன் தொடர்பு கொண்டு உணவை எடுத்துக் கொள்கின்றன. இணைவாழ் பூஞ்சைகள் மற்ற உயிரினங்களைச் சுற்றி வளர்ந்து அவற்றுடன் ஊட்டச்சத்துக்களை பரிமாறிக் கொள்கின்றன.[38]

அதிநுண்ணுயிரி

விலங்குகள், தாவரங்கள் அல்லது பூஞ்சைகள் அல்லாத அனைத்து மெய்க்கருவுயிரிகளும் அதிநுண்ணுயிரிகள் எனப்படுகின்றன. இவற்றுக்கிடையேயான ஊட்டச்சத்து தேடலில் பெரும் வேறுபாடு ஏற்படுகிறது. ஆல்காக்கள் ஒளிச்சேர்க்கை அதிநுண்ணுயிரிகளாகும். இவை ஒளியிலிருந்து ஆற்றலை உருவாக்க முடியும். பல வகையான அதிநுண்ணுயிரிகள் பூஞ்சைகளைப் போலவே மைசீலிய இழைத் தொகுதியைப் பயன்படுத்துகின்றன. ஓரணு உயிரிகள் சார்ந்துண்ணும் வகை அதிநுண்ணுயிரிகளாகும். வெவ்வேறு ஓரணு உயிரிகள் வெவ்வேறு வழிகளில் ஊட்டச்சத்துக்களைத் தேடுகின்றன. கசையிழை உயிரிகள் அவற்றின் கசையிழையை உணவுக்காக வேட்டையாடப் பயன்படுத்துகின்றன. மேலும் சில அதிநுண்ணுயிரிகள் அவற்றின் வித்துகளை ஒட்டுண்ணிகளாக செயல்பட பயன்படுத்துகின்றன.[39] பல அதிநுண்ணுயிரிகள் இவ்விரண்டு வழிகளிலும் ஊட்டச்சத்தை சேகரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. ஓர் ஊட்டச்சத்து மூலத்தை சார்ந்து இருக்கின்றன அதே வேளையில் மற்றொன்றை துணை மூலமாகவோ அல்லது அதன் முதன்மை ஆதாரம் கிடைக்காத போது தற்காலிக மாற்றாகவோ பயன்படுத்துகின்றன.[40]

நிலைக்கருவிலி

எளிய உயிரணு வளர்சிதை மாற்றம்

முன்கருவன்கள் எனப்படும் பாக்டீரியா மற்றும் தொன்பாக்டீரியா உள்ளிட்டவை ஊட்டச்சத்துக் குழுக்களில் ஊட்டச்சத்துக்களை எவ்வாறு பெறுகின்றன என்பதில் பெரிதும் வேறுபடுகின்றன. முன்கருவன்கள் கரையக்கூடிய சேர்மங்களை அவற்றின் செல் உறைகளில் மட்டுமே கொண்டு செல்ல முடியும், ஆனால் அவை சுற்றியுள்ள வேதியியல் கூறுகளை உடைக்க முடியும். பாறைகளில் ஒட்டி வாழும் சில நுண்ணுயிரிகள் ஊட்டச்சத்து இல்லாத சூழல்களில் கனிமப் பொருட்களை உடைப்பதன் மூலம் உயிர்வாழக்கூடிய உச்சவிரும்பிகளாக உள்ளன.[41] நீலப்பச்சைப்பாசி, குளோரோபிளக்சிய பாக்டீரியா போன்ற ஒளிச்சேர்க்கை அதிநுண்ணுயிரிகள் சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப் பெற ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. புவிவெப்ப நீரூற்றுகளின் மேல் விரிப்பில் உருவாகும் பாக்டீரியாக்களிடையே இந்நடைமுறை பொதுவானது. பொதுவாக இவை கால்வின் சுழற்சியின் மூலம் கார்பன் டை ஆக்சைடை ஒருங்கிணைப்பதன் மூலம் தேவையான கார்பனைப் பெறுகின்றன.[42]

வேட்டையாடும் முன்கருவன்கள் மற்ற உயிரினங்களைத் தேடி வேதியியல் நச்சுகளை உமிழ்வது அல்லது சீரற்ற மோதல் அல்லது உயிரினத்துடன் ஒன்றிணைவது போன்ற செயல்பாடுகளால் அவற்றைச் சிதைத்து, வெளியிடப்பட்ட ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன. மற்ற உயிரினத்தின் வெளிப்புற மேற்பரப்பில் இணைத்து அதை வெளிப்புறமாக சிதைப்பது, உயிரினத்தின் சைட்டோபிளாசத்தில் நுழைவது அல்லது உயிரினத்தின் உடல் இடைவெளியில் நுழைவது போன்றவை முன்கருவன்களின் வேட்டை உத்திகள் ஆகும். வேட்டையாடும் முன்கருவன் குழுக்கள் கூட்டாக ஒருவகை இயக்குநீரை உற்பத்தி செய்வதன் மூலம் இணைப்பை கைவிட்டு விலகிச் செல்கின்றன.[43]

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

புற இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஊட்டச்சத்து&oldid=3924184" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை