சில்லுமூக்கு
மூக்கிலிருந்து இரத்தம் வடிதலை (Nosebleed/Epistaxis) சில்லுமூக்கு என்றும் அழைப்பதுண்டு. சில்லுமூக்கு என்பது சிலருக்கு மூக்கில் அடி அல்லது காயம் எதுவும் ஏற்படாமல் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை அல்லது கசிவதை குறிப்பதாகும். இது பொதுவாக கடுமையானதோ அல்லது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதோ அல்ல[1]. அதிகமாக மூக்கின் முன்பகுதியிலேயே இரத்தம் கசிதல் அல்லது வடிதல் இடம்பெறுகிறது, இதை முன்புற மூக்கு இரத்தக் கசிவு (anterior nosebleeds) என அழைப்பர். சிலவேளைகளில் இரத்தக்கசிவு மூக்கின் பின்புறத்தில் ஏற்படும். இதை பின்புற மூக்கு இரத்தக் கசிவு (posterior nosebleeds) என அழைப்பர். இவை மிகவும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியவை. இவை ஏற்பட்டால் சில வேளைகளில் வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலையும் ஏற்படும்[2]. பனிக் காலங்களிலேயே சில்லுமூக்கு அதிகம் இடம்பெறுகின்றது. வெப்பநிலையில் அல்லது ஈரப்பதனில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவது, இரத்தம் கசிதலுக்கு வழிவகுக்குகின்றது[3].
சில்லுமூக்கு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | R04.0 |
ஐ.சி.டி.-9 | 784.7 |
நோய்களின் தரவுத்தளம் | 18327 |
மெரிசின்பிளசு | 003106 |
ஈமெடிசின் | emerg/806 ent/701, ped/1618 |
பேசியண்ட் ஐ.இ | சில்லுமூக்கு |
ம.பா.த | C08.460.261 |
காரணங்கள்
மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கானக் காரணங்களை இடஞ்சார்ந்தவை (திசு அல்லது உறுப்புச் சார்ந்தவை), உள்பரவிய நிலை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம், என்றாலும் வெளிப்படையானக் காரணங்களற்றும் சில்லிமூக்கு ஏற்படலாம்.
இடஞ்சார்ந்தக் காரணிகள்
- மழுங்கியக் காயம் (Blunt trauma)
- வேற்றுப்பொருள்கள் (உதாரணமாக, மூக்கினுள் விரலை விட்டு குடைவது)
- அழற்சி (உதாரணங்கள்: தீவிர சுவாசக்குழாய் நோய்த்தொற்று, நீடித்தப் புரையழற்சி, நாசியழற்சி அல்லது சுற்றுச்சூழலில் உள்ள நமைச்சல் காரணிகள்)
பிற சாத்தியமானக் கூறுபாடுகள்
- உடற்கூற்றமைப்புச் சார்ந்தப் பிறழ்வுகள் (ஊனம்)
- மூக்கு வழியாகச் செலுத்தப்படும் மருந்துகள் (அ) போதைப்பொருட்கள்
- நாசியுள் ஏற்படும் கட்டிகள்
- குறைந்த ஈரப்பதமுள்ளக் காற்றை சுவாசித்தல்
- மூக்குக் குழாய் வழியாக உட்செலுத்தப்படும் உயிர்வளி (O2)
- ஊக்க மருந்துகளைக் கொண்ட நாசியத் தெளிப்பான்கள்
- காதுகளில் ஏற்படும் அழுத்தத்தாக்கு (Otic barotrauma) (உதாரணமாக, விமானம் கீழிறங்கும்போது, கடலடி சுவாசக் கருவியுடன் நீரில் மூழ்கி மேலெழும்போது நிகழ்வது)
- ஆர்செனிக் கலப்படம் கொண்டத் திண்மம் நீக்கியப் பால்புரதத் குறைநிரப்பிககளை உட்கொள்ளுதல்[4]
- அறுவைச் சிகிச்சை
உள்பரவிய நிலைக்கானக் காரணிகள்
பொதுவானக் காரணிகள்
- நோய்த்தொற்றுகள் (உதாரணம்: சளி பிடித்தல்)
- உயர் இரத்த அழுத்தம்
பிற சாத்தியமானக் கூறுபாடுகள்
- மருந்துகள் - சில உதாரணங்கள்:ஆஸ்பிரின், ஐப்யூபுரூஃபன், சின்செங்கு
- மது அருந்துதல் (நாளம் விரிவடைவதால் ஏற்படுவது)[5].
- இரத்தசோகை
- கல்லீரல் நோய்கள்[5]
- இணைப்பிழைய நோய்கள்
- சமநிலையற்ற இரத்தம் (Blood dyscrasias)
- ஆப்பிரிக்க மர நச்சுப்பாம்பு, கட்டுவிரியன் ஆகியவற்றால் ஏற்படும் குழைமசந்திச் சீர்குலைவு (Envenomation)
- இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதயச் செயலிழப்பு
- இரத்தவியல் சார்ந்த வீரியம் மிக்க புற்றுத்திசு
- சுயம்பு உறைச்செல்லிறக்கக் குருதிக்கசிவு (Idiopathic thrombocytopenic purpura)
- கர்ப்பம்
- இரத்தநாள சீர்குலைவுகள்
- வைட்டமின் சி, வைட்டமின் கே குறைபாடுகள்
- வான் வில்லபிராந்து நோய் (von Willebrand's disease)[5]
- பரம்பரை இரத்தக் கிளைக்குழல் விரிவு இழப்புச் சோகை
- கட்டிகளால் ஏற்படும் மையதான அழுத்தம் (Mediastinal compression by tumors)
நோய்க்கூற்று உடலியக்கவியல்
மூக்கின் சீதச்சவ்வில் பெருமளவு ஊடுருவியிருக்கும் குருதி குழல்கள் சிதைவடைவதால் மூக்கிலிருந்து இரத்தம் வெளிப்படுகிறது. இத்தகுச் சிதைவுகள் தானாகவோ அல்லது காயத்தினால் தூண்டப்பட்டதாகவோ இருக்கலாம். அறுபது சதவிகித மக்களுக்கு மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிகழ்கிறது. பத்து வயதிற்குட்பட்டவர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் இதன் தாக்கம் உச்சநிலையில் உள்ளது. பெண்களைக் காட்டிலும் ஆண்களில் சில்லுமூக்கு நிகழ்வது அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிகிறது[6]. உயர் இரத்த அழுத்தம் தானாக ஏற்படும் மூக்கிலிருந்து இரத்தம் வெளிப்படும் கால அளவை அதிகரிக்கிறது[7]. குருதித் திரளெதிரி (Anticoagulant) மருந்துகள் மற்றும் குருதி உறைதல் பிறழ்வுகள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும், அதன் கால அளவு நீட்டிப்பையும் ஊக்குவிக்கின்றன. மூக்கின் சீதச்சவ்வு உலர்வடைவதாலும், மெலிவவடைவதாலும் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும் தானாக நிகழும் சில்லுமூக்கு முதியவர்களில் அதிகம் காணப்படுகிறது. குருதிக்குழல்கள் சுருங்கி, குருதி வருவதைக் கட்டுப்படுத்தும் தன்மை குறைவதால், முதியவர்கள் தங்கள் மூக்குகளிலிருந்து இரத்தம் வரும் நிகழ்வின் கால நீட்டிப்பிற்கு அதிகமாக ஆட்படுகிறார்கள்.
மூக்கு இடைத்தசையிலிருந்து மூக்கின் முன்பக்கம் இரத்தம் வடிவது (முன்புறமூக்கு இரத்தக் கசிவு) பெரும்பாலும் நிகழ்கிறது. இப்பகுதியில் பெருமளவுக் குருதிக்குழல்கள் உள்ளன. இங்கு நான்கு தமனிகள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு ஒரு இரத்தநாள வலைப்பின்னலை (Kiesselbach's plexus) உருவாக்குகின்றன. மூக்கின் பின்புறத்தில் ஏற்படும் இரத்தக்கசிவு பின்புறமூக்கு இரத்தக் கசிவு என்றழைக்கப்படுகிறது. இது, மூக்கின் கீழ்த் துவாரத்தின் பின்பகுதியிலமைந்த சிரைகளாலான வலைப்பின்னல்களிலிருந்து (Woodruff's plexus) இரத்தம் வடிவதால் உண்டாகிறது[8]. இத்தகு பின்புறமூக்கு இரத்தக் கசிவுகள் பெரும்பாலும் அதிக காலம் நிகழ்வதால் கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாகும். இரண்டு நாசித் துவாரங்களின் வழியாக இரத்தம் வடிவதுடனும், வாய்க்குள் அதிக இரத்தப் பெருக்குச் செல்வதுடனும் பின்புறமூக்கு இரத்தக் கசிவுத் தொடர்புடையதாக உள்ளது[6].