யூத எதிர்ப்புக் கொள்கை
யூத எதிர்ப்புக் கொள்கை (Antisemitism) என்பது யூதர்கள் மீது சந்தேகம் கொள்ளுதல், வெறுப்புக் காட்டுதல், புறக்கணித்தல் போன்ற செயற்பாடுகளாகும். 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க அறிக்கை, யூதவைரி என்பது யூதர் மீதான வெறுப்பு, தனியாகவும் குழுவாகவும், யூதர்களின் மதம் மற்றும்/அல்லது இனம் சார்ந்து வெளிப்படுதல் எனக் குறிப்பிடுகிறது.[1] இவ்வாறான கொள்கையைக் கொண்டிருப்பவர் யூதவைரி எனப்படுவர்.
யூத எதிர்ப்புக் கொள்கை பல வழிகளிலும் வெளிப்படும். யூதர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுதல், வெறுப்பு போன்ற முறைகளில் குழு, அரச காவற்றுறை மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் இது வெளிப்படுடலாம். 1096இல் முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றம், 1391 இல் எசுபானியாவில் யூதப் படுகொலை, எசுபானிய விசாரணை தண்டனை, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றம் 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றம், உரசிய படுகொலைகள், பிரெஞ்சு அவதூறு, நாட்சி ஜெர்மனியின் இறுதித் தீர்வு உரசியாவின் யூத எதிர்ப்புக் கொள்கை ஆகிய துன்புறுத்தல்கள் உச்ச எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
யூத எதிர்ப்புக் கொள்கை என்பது சொற்பிறப்பியலின் படி செமிட்டிக் இனத்தவருக்கு எதிரானது எனும் பொருளைக் கொண்டுள்ளது. இது 19ம் நூற்றாண்டின் இறுதியில் செருமனியில் உருவாகியது. "யூத வெறுப்பு" எனும் அடிப்படையிலான இப்பதம் அன்றிலிருந்த இன்றும் சாதாரணமாகப் பாவிக்கப்படுகின்றது.[2][3]