யோசையா வில்லர்டு கிப்சு
யோசையா வில்லர்டு கிப்சு [Josiah Willard Gibbs, பி. 11 பிப்ரவரி 1839 - இ. 28 ஏப்ரல் 1903] ஒரு அமெரிக்க அறிவியலாளர் ஆவார். மேக்ஸ்வெல், போல்ட்ஸ்மான் ஆகியோருடன் இணைந்து இவர் உருவாக்கிய புள்ளியிய எந்திரவியல் என்ற துறை புறநிலை வேதியியலை[1] ஒரு அறிவியலாக உருவாக்கிட உதவியது[2]. திசையன் பகுப்பாய்வு[1] என்ற ஒரு கணிதவியலையும் இவர் உருவாக்கினார்[2]. யேல் பல்கலைக்கழகத்தின் முதல் கணித இயற்பியல் பேராசிரியராகப் பணியேற்றார்[3]. கணித இயற்பியலில் ஆற்றிய பணிகளுக்காக 1901ஆம் ஆண்டு அவருக்கு கோப்ளி பதக்கம் அளிக்கப்பட்டது[2]. மரபு வெப்பவியக்கவியலின் அடிப்படைகளை அமைத்தார்[4].
அறிவியல் வாழ்க்கையும் பங்களிப்புகளும்
1866ல் ஆராய்ச்சியை முடித்த கிப்சு, தன் அறிவியல் தேடலை ஐரோப்பாவில் தொடர்ந்தார். அங்கு கிர்க்காஃப்புடனும் எல்மோல்சுடனும் அவரது ஊடாடல் வெப்ப இயக்கவியலை நோக்கி அவரை செலுத்தியது. 1871ல் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்ற கிப்சுக்கு, இறுதி நாட்களைத் தவிர அவரது பணிக்காக ஊதியம் வழங்கப்படவில்லை. தன் முதல் ஆய்வுக் கட்டுரையை 1873ல் வெளியிட்டார். மேலும், அழுத்தம், பருமன், வெப்பநிலை, ஆற்றல் மற்றும் சிதறம் ஆகிய அளவுகளை ஆயங்களாகக் கொண்ட இரு-பரிமாண வரைபடங்களைப் பயன்படுத்தி ஒரு பொருளின் வெப்பவியக்கவியல் நிலையைக் குறிப்பிடும் முறையை வகுத்தார்[4].
1876லிருந்து 1878 வரையிலான காலத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவர் குறிப்பிட்டிருந்த மரபு வெப்பவியக்கவியலின் அடிப்படைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அதுவரையில் வாயுக்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்த வெப்ப இயக்கவியல் கோட்பாடுகளை திரவங்களுக்கும் திண்மங்களுக்கும் பொருந்தும் வண்ணம் செய்தார்[4].