விருதுநகர்
விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான காமராசர் பிறந்தார். விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.
விருதுநகர் விருதுப்பட்டி | |
---|---|
தேர்வு நிலை நகராட்சி | |
விருதுநகரில் ஒரு தெருக்காட்சி | |
ஆள்கூறுகள்: 9°34′04.8″N 77°57′44.6″E / 9.568000°N 77.962389°E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | விருதுநகர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | மாணிக்கம் தாகூர் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஏ. ஆர். ஆர். சீனிவாசன் |
• மாவட்ட ஆட்சியர் | ஜே. மேகநாத ரெட்டி, இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.39 km2 (2.47 sq mi) |
ஏற்றம் | 120 m (390 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 72,296 |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 626 001 |
தொலைபேசி குறியீடு | 04562 |
வாகனப் பதிவு | TN-67 |
சென்னையிலிருந்து தொலைவு | 519 கி.மீ (322 மைல்) |
பாண்டிச்சேரியிலிருந்து தொலைவு | 391 கி.மீ (243 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 195 கி.மீ (121 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 58 கி.மீ (36 மைல்) |
குமரியிலிருந்து தொலைவு | 192 கி.மீ (119 மைல்) |
இணையதளம் | virudhunagar |
சொற்பிறப்பு
இங்குள்ளவர்கள் சொல்லும் கூற்றின்படி, பல இராஜ்ஜியங்களை கைப்பற்றி, பல விருதுகளை பெற்ற ஒரு போர்வீரன், இந்த ஊருக்கு வந்து குடியிருப்பாளர்களுக்கு சவால் விடுத்தான். ஒரு குடியிருப்பாளர் அவன் சவாலை ஏற்றுக்கொண்டு, அவ்வீரனோடு போரிட்டு, அவனை கொன்று, அவன் வைத்திருந்த விருதுகளை கைப்பற்றினார். இவ்வாறு அவன் பெற்ற விருதுகள் யாவும், விருதுநகரை சார்ந்த வீரரால் வெற்றி பெற்றமையால், இதனை “விருதுகள் வெட்டி” என்று கூறப்பட்டது. பின்னர் 1875 இல் விருதுப்பட்டி என மாறியது.
வரலாறு
16 ஆம் நூற்றாண்டில் விருதுநகர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகவே பலகாலம் இருந்துள்ளது. இவர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நாயக்கர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.[1] விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது. 1736 இல் இவர்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சந்தா சாகிப் (1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் முகம்மது யூசுப்கான் (1725 – 1764), ஆகியோர் பலமுறை தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.[2] 1801இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இப்பிரதேசம் வந்தபின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தபின், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.[3]
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அனைத்து சாதிகளும், குறிப்பாக மறவர்களுக்கும், நாடார்களுக்கும் இடையிலான பரஸ்பர மோதலாகவே இருந்தது.[4] ஐரோப்பிய மிசனரிகளின் செல்வாக்கின் கீழ் இந்து மதத்திலிருந்து, கிறிஸ்தவத்திற்கு மத மாற்றங்களில், நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.[5] இந்து மதத்தில் இருந்த சில நாடார்கள், மறவர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் நாடார்கள் சாதி அடிப்படையில், தாழ்ந்தவர்களாக கருதப்பட்டதால் கோயில்களுக்குள் நுழைய மறுக்கப்பட்டனர். இரு சமூகங்களுக்கிடையேயான பரஸ்பர மோதல் 1899 ஆம் ஆண்டில், இப்பகுதியில் உச்சத்தை எட்டியது, இது சிவகாசி கலவரத்திற்கு வழிவகுத்தது. இந்த கலவரத்தில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர், 800 வீடுகள் மற்றும் நகரத்தின் மையத்தில் உள்ள பெரிய தேர் (பண்டிகைகளின் போது கோயிலால் பயன்படுத்தப்பட்டது) கலவரத்தின் போது எரிக்கப்பட்டன. பின்னர் 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர், கலகங்கள் முடிவுக்கு வந்தன.[6][7]
இந்நகரத்தின் பெயர் 1875 இல் விருதுப்பட்டி என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு விருதுநகர் என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் குலசேகரபட்டினம், தூத்துக்குடி, வைப்பார் மற்றும் தேவிபட்டினம் துறைமுகங்கள் வழியாக விருதுநகரில் இருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9°35′N 77°57′E / 9.583°N 77.950°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (335 அடி) உயரத்தில் இருக்கின்றது. விருதுநகர் நகராட்சி 6.39 கிமீ 2 (2.47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து 519 கி.மீ (322 மைல்) தென்மேற்கிலும், மதுரைக்கு 58 கிமீ (36 மைல்) தெற்கிலும் அமைந்துள்ளது. இந்நகரம் கெளசிக ஆற்றின் கிழக்கிலும், மதுரை - திருநெல்வேலி இரயில் பாதையின் மேற்கிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1951 | 46,456 | — |
1961 | 54,871 | +18.1% |
1971 | 61,904 | +12.8% |
1981 | 68,040 | +9.9% |
1991 | 70,971 | +4.3% |
2001 | 72,081 | +1.6% |
2011 | 72,296 | +0.3% |
சான்றுகள்:
|
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன.[9]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விருதுநகரில் இந்துக்கள் 85.02%, முஸ்லிம்கள் 7.73%, கிறிஸ்தவர்கள் 7.09%, சீக்கியர்கள் 0.02% மற்றும் 0.14% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
தொழில்
இம்மாவட்டத்தில் 37 சதவீத நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன. கிணற்று பாசனம் இருக்கும் இடங்களில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
இம்மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகள், நூற்பாலை மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தீப்பெட்டி உற்பத்தி, பட்டாசு தாயாரித்தல், அச்சுத் தொழில், ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள சிவகாசி நகரம் பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. சிவகாசி நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | ஏ. ஆர். ஆர். சீனிவாசன் |
மக்களவை உறுப்பினர் | மாணிக்கம் தாகூர் |
விருதுநகர் நகராட்சியானது விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் (இதேகா) சேர்ந்த மாணிக்கம் தாகூர் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஏ. ஆர். ஆர். சீனிவாசன் வென்றார்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
இந்நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை 7 ஆனது செல்கிறது. இந்நகரமானது சிவகாசி, மதுரை, இராஜபாளையம், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. விருதுநகரின் மேற்கே ஒரு புறவழிச் சாலை உள்ளது. இது நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது.
விருதுநகரில் எம். எஸ். பி நாடார் நகராட்சி பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) மற்றும் கர்மவீரர் காமராஜர் பேருந்து நிலையம் (புதிய பேருந்து நிலையம்) என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே பெரும்பாலான நகரங்களுக்கு, அரசு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால் புதிய பேருந்து நிலையம், இந்நகரின் வெளிபுறத்தில் அமைந்துள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் செல்வதில்லை. பழைய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து மூலம் பல்வேறு நகரங்களுக்கு தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. மதுரையிலிருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் அனைத்து பேருந்துகளும், இந்நகரின் வழியே செல்கிறது. ஆனால் சில பேருந்துகள் மட்டுமே, இந்நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. பெரும்பாலான பேருந்துகள் புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது.
தொடருந்துப் போக்குவரத்து
விருதுநகர் இரயில் நிலையம் ஆனது மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கிய இரயில் பாதையில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே ஆனது தினசரி சென்னையிலிருந்து, விருதுநகர் வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, குருவாயூர், மும்பை, திருவனந்தபுரம், மைசூர், ஹவுரா, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர் போன்ற இடங்களுக்கு விரைவு ரயில்களை இயக்குகிறது.
இங்கிருந்து மதுரை, சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம் தென்காசி, அருப்புக்கோட்டை, கொல்லம், திருநெல்வேலி, கும்பகோணம், மயிலாடுதுறை, ஈரோடு, நாகர்கோயில் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் உள்ளன.
வானூர்தி போக்குவரத்து
இந்நகருக்கு வடகிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும்.
கல்வி
பள்ளிகள்
- சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளி
- சத்திரியா பெண்கள் நடுநிலைப் பள்ளி
- சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
- கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளி
- கே.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி
- கே.வி.எஸ். நூற்றாண்டு விழா ஆரம்பப் பள்ளி
- ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி
- செவன்த்டே ஆங்கில உயர்நிலைப் பள்ளி
- எஸ்.வி.ஏ. அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளி
- கே.வி.எஸ். ஆங்கிலப் பள்ளி
- கோ.சா.கு அரசு மேல்நிலைப்பள்ளி
- ஹாஜி பி செய்யது முஹம்மது மேல்நிலைப் பள்ளி
கல்லூரிகள்
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சூலக்கரை விருதுநகர்
- விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி
- வி. வி. வி . பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரி
- ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
- வி. எச். என். எஸ். என் அறிவியல் கலைக் கல்லூரி
- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி
கோயில்கள்
- பராசக்தி மாரியம்மன் கோவில்
- முருகன் கோவில்
- வெயிலுகந்தம்மன் கோவில்
- ராமர் கோவில்
- அனுமார் கோவில்
பராசக்தி மாரியம்மன் கோவில்
இங்கு அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர்.
வானிலை மற்றும் காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், விருதுநகர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.726 (89.107) | 34.321 (93.778) | 37.871 (100.168) | 36.967 (98.541) | 38.094 (100.569) | 37.6 (99.7) | 36.79 (98.22) | 36.726 (98.107) | 36.15 (97.07) | 35.742 (96.336) | 30.95 (87.71) | 30.097 (86.175) | 35.2528 (95.4551) |
தாழ் சராசரி °C (°F) | 19.661 (67.39) | 20.625 (69.125) | 22.113 (71.803) | 24.433 (75.979) | 24.581 (76.246) | 24.717 (76.491) | 25.21 (77.38) | 24.79 (76.62) | 24.383 (75.889) | 23.323 (73.981) | 21.29 (70.32) | 22.6 (72.7) | 23.1438 (73.6589) |
மழைப்பொழிவுmm (inches) | 18.5 (0.728) | 23.5 (0.925) | 37.6 (1.48) | 76.8 (3.024) | 60.2 (2.37) | 18.3 (0.72) | 31.1 (1.224) | 51.6 (2.031) | 80.8 (3.181) | 191 (7.52) | 175.5 (6.909) | 64.7 (2.547) | 829.6 (32.661) |
ஆதாரம்: விருதுநகர் மாவட்ட வலைத்தளம்[10] |
சிறப்புகள்
- முன்னாள் முதல்வரான காமராஜர் பிறந்த ஊர்.
- "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது.
- புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது