அனாக்சகோரசு
அனாக்சகோரசு (Anaxagoras, /ˌænækˈsæɡərəs/; பண்டைக் கிரேக்கம்: Ἀναξαγόρας, அனாக்சகோரசு, "மன்றத் தலைவர்"; அண். 510 – 428 கி.மு) ஒரு சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். அனத்தோலியாவில் கிளசாமோனையில் பிறந்தார். அனாக்சகோரசு முதன்முதலில் மெய்யியலை ஏதென்சுக்குக் கொண்டு வந்தவர். டையோகேனசு இலார்சியசு, புளூட்டாக் ஆகியோரின் கூற்றுப்படி, இவர் பிந்தைய வாழ்நாளில் பெரிக்கிளீசுடன் உறவு வைத்திருந்ததால் இறைமறுப்புப் பரப்புரைக்காக அரசியற் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டார். தூக்குத் தண்டனையில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் ஏதென்சை விட்டு இலாம்புசகசுக்கு வெளியேறினார்.[2]
அனாக்சகோரசு Anaxagoras | |
---|---|
அனாக்சகோரசு | |
பிறப்பு | அண். கிமு 510 கிளாசோமெனை |
இறப்பு | அண். கிமு 428 லாம்ப்சாக்கசு |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | பன்மைவாதப் பள்ளி |
முக்கிய ஆர்வங்கள் | இயல் மெய்யியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அண்டப் பேருளம் (Nous) அனைத்தையும் ஆணையிடுதல் பால் வழி (Via Lactea) தொலைவு விண்மீன்களின் செறிவான குழுமல்[1] |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
பர்மேனிடசின் மாற்றமறுப்புக்கு எதிர்வினையாக, அனாசகோரசு உலகத்தில் உள்ள அனைத்துமே எண்ணற்ற பண்புள்ள அளவிறந்த அழிதகும் முதன்மை உட்கூறுகளால் ஆயது என்றார். இங்கு பொருள்மாற்றம் குறிப்பிட்ட முதன்மை உட்கூற்றின் ஆணையால் ஏற்படுவதில்லை; மாறாக, பிற உட்கூறுகளின்பால் அது செலுத்தும் ஓங்கலான சார்புநிலைத் தாக்கத்தால் ஏற்படுகிறதென்றார். அவர் கூறுகிறார், "ஒவ்வொன்றும்.அதுவாக்கப்படும் அல்லது அதிலுள்ள முதன்மை உட்கூறுகளின் தாக்கங்களையே வெளிப்படுத்துகிறது".[3] அவர் பேருளம் (மனம்) என்ற கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தி அது ஆணையிடும் விசையாகச் செயல்படுகிறது எனக் கூறுகிறார். அது ஒருபடித்தானது என்றும் மிக மிக இலேசான நுண்பொருளால் ஆயது என்றும் அதுதான் முதற் குழம்பற் கலவையை சுழிப்புச் சுழற்சியால் (vortical rotation) விலக்கிப் பிரித்து வான்பொருட்களை உருவாக்கியது என்றும் கூறுகிறார்.[2]
இவர் இயற்கை நிகழ்வுகளுக்குப் பல புதிய அறிviயல் விளக்கங்களை அளித்தார். வான்பொருள்களின் ஒளிமறைப்புகளுக்கான சரியான விளக்கத்தைத் தந்தார். இவர் சூரியனை மாபெரும் நெருப்புக் கோளமாகும் என்றார். மேலும் வானவிற்கள், விண்கற்கள் பற்றியெல்லாம் விளக்க முயன்றுள்ளார்.
வாழ்க்கை
அனாக்சகோரசு தான் பிறந்த நகரமான கிளசாமேனையில் ஓரளவு சொத்தும் அரசியல் செல்வாக்கும் பெற்றிருந்துள்ளார். என்றாலும் இவை தன் அறிவுத் தேடலை தடுத்துவிடலாம் என அஞ்சி அவற்றைத் துறந்துவிட்டுள்ளார். ஆனால் உரோம எழுத்தாளர் வேலரியசு மேக்சிமசு வேறுவிதமாக்க் கூறுகிறார். நீண்ட பயணம் முடிந்து வீடு திரும்பிய அனாக்சகோரசு தன் சொத்தெல்லம் பாழ்பட்டிருக்க்க் கண்டு இவ்வாறு கூறினாராம்: "இது நடக்காவிட்டால், தேடிய அறிவுச் செல்வம் கிடைத்திருக்குமா?".[4][5] கிரேக்கராக இருந்தாலும் யவன முற்றுகையால் கிளசாமோனை அடக்கப்பட்டபோது பாரசீக அக்காயமெனீடியப் பேரரசின் படையில் போர்வீர்ராகச் சேர்ந்திருப்பார்தன் இளம்பருவத்தில் (அண். கி.மு 464–461) இவர் கிரேக்கப் பண்பாட்டின் மையமாக விளங்கிய ஏதென்சுக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர் 30 ஆண்டுகள் இருந்துள்ளார். பெரிகிளெசு இவர்பால் அன்பு செலுத்தி பெரிதும் மதித்துள்ளார். கவிஞர் யூரிபிடெசு இவரால் அறிவியலிலும் மாந்த வாழ்வியலிலும் ஆர்வமூட்டப்பட்டுள்ளார்.
அனாக்சகோரசு அயோனியாவில் இருந்து ஏதென்சுக்கு மெய்யியல், அறிவியல் உசாவல் அல்லது வினவல் உணர்வைக் கொண்டுவந்தார். இவரது வான்பொருள்கள், விண்கல் வீழ்ச்சி நோக்கீடுகள் பொது ஒழுங்கிற்கான புதிய கோட்பாடுகளை உருவாக்கவும் கி.மு 467இல் நிகழ்ந்த விண்கல் மொத்தலையும் உறுதியாக முன்கணிக்க வைத்தது.[6] இவர் சூரியன்,வான்பொருள் ஒளிமறைப்புகள், விண்கற்கள், வானவிற்கள் பற்றிய அறிவியல் விளக்கங்களை உருவாக்கவைத்தது. இவர் சூரியனை ஒளிரும் பொன்மப் பொருண்மை (மாழைப்பொருண்மை) என்றும் பெலோபொன்னீசைவிடஅது பெரியதென்றும் கூறினார். இவர்தான் முதன்முதலாக நிலா அதன் மீது பட்டுத்தெறிக்கும் (எதிர்பலிக்கும்) சூரிய ஒளியால் பொலிகிறது என்று கூறினார். இவர் நிலாவில் மலைகள் உள்ளன என்றார்,அங்கு மாந்தர் வாழ்வதாக நம்பினார். இவர் வான்பொருள்கள் புவியில் இருந்து பிரிந்து சென்ற துண்டங்கள் என்றும் அவை வேகமான சுழற்சியால் பற்றி எரிகின்றான என்றும் கூறினார். இவர் சூரியனும் விண்மீன்அளும் எரியும் கற்களே என்றார். விண்மீன்கள் நெடுந்தொலைவில் உள்ளதால் நாம் விண்மீன்களின் வெப்பத்தை உணர்வதில்லை என்றார். இவர் புவி தட்டையானதென்றும் அதன் அடியில் அமைந்த வலிய காற்றின்மீது மிதக்கிறதென்றும் எண்ணினார். மேலும் இந்தக் காற்றில் ஏற்படும் சீர்குலைவுகளே நிலநடுக்கங்களை உருவாக்குகின்றன என்றார்.[7] ஏதென்சில் இவரது இத்தகைய கண்ணோட்டங்கள் இவரை இறைமறுப்பாளராகக் குற்றஞ்சாட்ட வைத்தது. இறைமறுப்புக்காக கிளியோன் இவரை ஒறுத்ததாகடையொஜீன்சு இலேயர்ழ்சியசு கூறுகிரார், ஆனால் புளூடார்க் பெரிக்கிளெசு அவரது முன்னாள் பயில்விப்பாளரான அனாக்சகோரசை எதீனியர்கள் அவர்மீது பொலெபொன்னீசுப் போர் தோற்றுவித்த பழியைப் போடவே, பாதுகாப்புக்காக இலாம்ப்சாக்கசுக்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.[8]
கி.மு 450 அளவில் அனாக்சகோரசின் வழக்கில் பெரிக்கிளெசு அனாக்சகோரசு தரப்பில் வாதிட்டுள்ளார் என இலேயர்ழ்சியசு கூறுகிறார்.[9] இருந்தாலும் ஏதென்சில் இருந்து ஓய்வுபெற்று திரோடில் உள்ள இலாம்ப்சாக்கசுக்கு அனாக்சகோரசு போகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது (அண். கிமு 434–433). அங்கே அவர் கி.மு 428 அளவில் இயற்கை எய்தியுள்ளார். இவரது நினைவாக இலாம்ப்சாக்கசு மக்கள் உள்ளமும் உண்மையும்என்ற நினைவுச் சின்னத்தை எழுப்பி ஒவ்வோராண்டும் அவரது இறப்பில் இருந்து பல்லாண்டுகளுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.
அனாக்சகோரசு ஒரு மெய்யியல் நூலை இயற்றியுள்ளார். ஆனால் அதன் சில பகுதிகள் மட்டும் கி.பி 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிசிலியாவின் சிம்பிளிசியசு வழியாகக் கிடைக்கின்றன.
மெய்யியல்
அனாக்சகோரசு கூற்றுப்படி, எல்லாமே தொடக்கத்தில் இருந்தே இதேபோலவே நிலவுகின்றன. ஆனால் அவை முதலில் மிகமிக நுண்சிறு வடிவுத் துண்டங்களாகவும் எண்ணிக்கையில் அளவற்றனவாகவும் பரவலில் புடவி முழுவதும் நுண்ணிலையில் கலந்து விரவிக் கிடந்தன.[10] எல்லா பொருல்களும் இத்திரள்வில் இருந்தன ஆனால் தெளிவற்ற வடிவத்திலும் குழம்பலான நிலையிலும் இருந்தன.[10] அளவற்ற எண்ணிக்கையில் ஒருபடித்தான பகுதிகளும் (கிரேக்க மொழி: ὁμοιομερῆ) அதேபோல பலபடித்தான பகுதிகளும் அமைந்திருந்தன.[11]
ஒழுங்கமைப்புப் பணி, அதாவது ஒத்தவற்றை ஒவ்வாதவற்றில் இருந்து பிரித்தலும் ஒரேபெயரில் பல முழுமைகளைக் கூட்டித் தொகுத்தலுமாகிய பணி, உள்ளத்தின் அதாவது அறிவாய்வின் பணியேயாகும்(கிரேக்க மொழி: νοῦς).[10] உள்ளம் வரம்பற்றும் கட்டற்ற திரட்சியாகவும், ஆனால் அதேநேரத்தில் அது தனித்தும் தற்சார்போடும் நுண்யாப்போடும் எங்கும் எல்லாவற்றிலும் ஒன்றேபோல நிலவுகிறது.[10] அறிவும் திறனும் வாய்ந்த இந்நுண்பொருள் (பேருள்ளம்), வாழ்வின் அனைத்து வடிவங்களையும் ஆள்வதைக் காணலாம்.[12] அனாக்சகோரசு இதன் முதல் வடிவமாகவும் உள்ளடக்கமாகவும் இயக்கத்தையே சுட்டுகிறார்.[10] இவ்வியக்கம் ஒத்த பகுதிகளின் தொகுப்பை அல்லது திரள்வைத் தனித்தவொன்றாக நிலவச் செய்கிறது.[10]
வளர்ச்சியும் தளர்ச்சியும் புதிய திரள்வாலும் (கிரேக்க மொழி: σὐγκρισις) தகர்ப்பாலுமே (கிரேக்க மொழி: διάκρισις) உருவாகின்றன.[10] என்றாலும் பண்டங்களின் முதற்கலவை எப்போதும் முழுமையாக மீறப்படுவதில்லை.[10] ஒவ்வொரு பண்டமும் மற்றவற்றின் பகுதிகளால் ஆயதே அதாவது பலபடித்தான கூறுகளால் உருவானதே. எதுவுமே சில பரவலான ஒருபடித்தான கூறுகளின் விரவலால் தனித் தற்பான்மையைப் பெற்றுள்ளது.[11] உலகில் நாம் காணும் பண்டங்கள் இத்தகைய நிகழ்வாலேயே உருவாகின்றன.[11]
இலக்கிய மேற்கோள்கள்
நத்தானியேல் வெசுட்டின் முதல் நூலான "The Dream Life of Balso Snell" எனும் நூலைத் தொடங்கும் மேற்கோளில் மார்செல் பிராசுட்டின் பாத்திரமான பெர்காட் இவ்வாறு கூறுகிறது, "உண்மையில், நண்பனே, அனாக்சகோரசு சொன்னதுபோல, வாழ்க்கை ஒரு பயணமே."
காரி கார்பியால் இயற்றப்பட்ட யவனத் தடைவிதிப்பில் அனாக்சகோரசு ஒரு பாத்திரமாக வருகிறார். இவர் இயற்கை நிகழ்வுகளுக்குப் பல புதிய அறிவியல் விளக்கங்களை வழங்கினார். வான்பொருள்களின் ஒளிமறைப்புகட்கான சரியான விளக்கத்தினை உருவாக்கினார். சூரியன் பெலோபொன்னீசைவிட பெரிய நெருப்புக் கோளம் என்று கூறினார். வானவில், விண்கற்கள் ஆகியவற்றை விளக்கினார்.
விதால் கோர் தன் '[Creation (novel)|Creation எனும் புதினத்தில் அதன் கதைத் தலைவனும் கதைசொல்லியும் ஆகிய சைரசு சுபிதாமா அனாக்சகோரசைக் குறிப்பிட்டு வியப்பதாக எழுதியுள்ளார். அந்நூலில் உள்ள கீழ்வரும் பத்தி அனாக்சகோரசு அக்காலத்தவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை விளக்குகிறது.
- [அனாக்சகோரசின் கூற்றுப்படி உலகிலேயே மிகப்பெரியது சூரியன் என நாம் கூறும் தணற்கல்தான். இவர் இளம்பருவத்திலேயே ஒருநாள் சூரியனின் ஒருபகுதி உடைந்து புவிமீது வீழும் என முன்கணித்துள்ளார். 20 ஆண்டுகளில் அது சரியென நிறுவப்பட்டது. சூரியனின் ஒருபகுதி பிரிந்து திரேசில் புவியில் வீழ்வதை உலகமே பார்த்தது., அது ஆறியதும் பார்த்தபோது வெறும் பழுப்புநிறப் பாறையே என்பது புலப்பட்டது. அன்று ஒரேநாளில் அவர்து புகழ் எங்கும் பரவியது. இன்று இவரின் நூலை எங்கும் எவரும் படிக்கின்றனர். ஒரு செலாவணிக்கு (திராட்சுமாவுக்கு) அகோராவில் அவர் நூலை நீங்கள் யாரும் வாங்கலாம்..[13]
வில்லியம் எச். காசு The Tunnel (1995) எனும் தன் புதினத்தைப் பின்வரும் அனாக்சகோரசின் மேற்கோளுடன் தொடங்குகிறது.: "எந்த இடத்தில் இருந்துவந்தாலும் நரகத்துக்கு ஒரே வழிதான்."
மேலும் காண்க
- நிலாவில் உள்ள அனாக்சகோரசு (குழிப்பள்ளம்)
- வட்டத்தைச் சதுரமாக்கல்
குறிப்புகள்
மேற்கோள்கள்
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Anaxagoras". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
நூல்தொகை
- Curd, Patricia (ed.), Anaxagoras of Clazomenae. Fragments and Testimonia: A Text and Translation with Notes and Essays, Toronto: University of Toronto Press, 2007.
- Sider, David (ed.), The fragments of Anaxagoras, with introduction, text, and commentary, Sankt Augustin: Academia Verlag, 2005.
வெளி இணைப்புகள்
- Anaxagoras entry by Michael Patzia in the Internet Encyclopedia of Philosophy
- Anaxagoras entry by Patricia Curd in the Stanford Encyclopedia of Philosophy
- O'Connor, John J.; Robertson, Edmund F., "அனாக்சகோரசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Translation and Commentary பரணிடப்பட்டது 2010-12-12 at the வந்தவழி இயந்திரம் from John Burnet's Early Greek Philosophy.
- Diogenes Laërtius, Life of Anaxagoras, translated by Robert Drew Hicks (1925).
- Anaxagoras: Fragments from Early Greek Philosophy by John Burnet, 3rd edition (1920).