அரபு-இசுரேல் முரண்பாடு

நடுக் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் புவிசார் அரசியல் முரண்பாடு

அரபு - இசுரேல் முரண்பாடு (ஆங்கில மொழி: Arab–Israeli conflict, அரபு மொழி: الصراع العربي الإسرائيلي‎, Al-Sura'a Al'Arabi A'Israili; எபிரேயம்: הסכסוך הישראלי-ערבי‎, Ha'Sikhsukh Ha'Yisraeli-Aravi) என்பது நடு கிழக்கில், அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையிலான அரசியல் மோதல்களும் பொது பகையுமாகும். இம்முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சீயோனிச எழுச்சியும் அராபிய தேசியவாதமுமாகும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இம் முரண்பாடு, 1948இல் இசுரேல் ஒரு தனி நாடாக உருவாகியதும், முழு அரபு நாடுகள் கூட்டமைப்புக்குமாக விரிவடைந்தது. யூதர்களின் கருத்துப்படி, அவர்கள் குறிப்பிடும் நிலப்பரப்பானது வரலாற்று தாயகமாகவும், அதே நேரத்தில் ஒன்றிணைந்த அராபிய இயக்கத்தின்படி அது வரலாற்று நோக்கில் பாலத்தீன அராபியர்களுக்கு உரியதென்றும், ஒன்றிணைந்த இசுலாமியவாதத்தின்படி அந்நிலப்பரப்பானது இசுலாமிய நிலமாகவும் நோக்கப்படுகிறது[9].

அரபு - இசுரேல் முரண்பாடு

  அரபு நாடுகள் கூட்டமைப்பு
  இசுரேலுடன் போர் புரிந்த நாடுகள்
  இசுரேல்
  காசா மற்றும் மேற்குக் கரை
நாள்மே 1948–தற்போது
பிரதான பகுதி: 1948–1973
இடம்நடுகிழக்கு
நடந்து கொண்டிருக்கிறது
  • எகிப்து–இசுரேல் சமாதான ஒப்பந்தம்
  • ஒஸ்லோ உடன்படிக்கைகள்
  • இசுரேல்-யோர்தான் சமாதான ஒப்பந்தம்
  • ஐ.நா. பாதுகாப்புச்சபை தீர்மானம் 1701
நிலப்பகுதி
மாற்றங்கள்
இசுரேல் சீனாய் தீபகற்பத்தை கைப்பற்றல்] (1956–57; 1967–1982), மேற்குக்கரை] (1967–தற்போது), காசாக் கரை (1967–2005), கோலான் குன்றுகள்] (1967–தற்போது) தென் லெபனான் (1982–2000)
பிரிவினர்
 Israel பலஸ்தீனியர்:
  • ஏஎச்டபிள்யு (1947–1949)
  • பெடாயன் (1949–1964)
  • ப.வி.இயக்கம் (1964–2005)
  • காசாக்கரை (2005–)

 Jordan (1948–1994)
 Egypt (1948–1979)
 Iraq (1948–)
 Syria (1948–)
 Lebanon (1948–)

  • ஹிஸ்புல்லா (1982–)
சூயெசு நெருக்கடி: (1956)

தென் லெபனான் முரண்பாடு:

  • தென் லெபனான் படை (1978–2000)
தேய்வழிவுப் போர்: (1967–70)
உதவி:
உதவி:
தளபதிகள், தலைவர்கள்
  • யோர்தான் ஜோன் பகட் குலுப்
  • யோர்தான் கபிஸ் அல் மஜாலி
  • அல் கடிர் அல் குசைனி 
  • கசன் சல்மா 
  • பவி அல் குவாஜி
  • எகிப்து அகமட் அலி அல் முவாவி
  • ஹச் அமின் அல் குசைன்
  • எகிப்து அரசன் பாருக் I
  • எகிப்து அகமட் அலி அல் முவாவி
  • எகிப்து முகமட் நகுப்
  • எகிப்து சாட் எல் சாஸ்லி
இழப்புகள்
≈22,570 படையினர் இறப்பு[5]

≈1,723 மக்கள் இறப்பு[6]

90,785 அரபுக்கள் இறப்பு[7]
இரு பக்கமும்:
74,000 படையினர் இறப்பு
18,000 மக்கள் இறப்பு
(1945–1995)[8]

உதுமானியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியுடன்ஏற்பட்ட அரசியல், தேசிய முரண்பாடு இங்கு முக்கிய காரணமாகும். இது பாரிய அளவிலான பிராந்தியத்தில் நிலவிய அரபு - இசுரேல்முரண்பாட்டிலிருந்து உள்ளக இசுரேல் - பாலத்தீனிய முரண்பாடாக மாற்றம் பெற்றது. 1979இல் இசுரேலுக்கும் எகிப்துக்கும், 1994இல்இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இருந்தபோதிலும் அரபு நாடுகளும்இசுரேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பு தொடர்புபட்ட விடயத்தில் ஒத்துப் போகாத தன்மையினையே கொண்டுள்ளன.

முரண்பாடு பற்றி சமயத்தின் பார்வை

யூத, இசுலாமிய, கிறித்தவ குழுக்கள் தங்களுக்குள் கருத்து ஒற்றுமை கொள்ளாமைக்குத் தங்கள் சமய வரலாற்றுக் கருத்துகளைத் துணையாகக் கொள்கின்றனர்.[10] அரபு-இசுரேல் முரண்பாட்டின் தற்கால வரலாறானது கிறித்தவ, யூத, இசுலாமிய சமயங்களின் நம்பிக்கைகளால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளானது. தெரிவு செய்யப்பட்ட மக்கள் பற்றிய விளக்கம், வாக்களிக்க நாடு மற்றும் தெரிவு செய்யப்பட்ட நகர்யெரூசலம் பற்றிய அவர்களின் கொள்கை என்பதற்கேற்ப அவர்களின் விளக்கம் இதில் குறிப்பிடத்தக்கது.[11]

யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய சமயங்களின் முக்கிய நபரான ஆபிரகாம் - ஓவியம்

யூதர்களின் புனித நூலாகிய தோராவின்படி கானான் அல்லது இசுரவேல் தேசம் இசுரவேலர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்டது. விவிலியத்தின்படி இசுரவேலர் அதை கி.மு 13 -ஆம் அல்லது 14 -ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு வரை யூதர் இனத்தவர் மிகப்பலரும் அங்கு வாழ்ந்திருந்தனர்.

தியோடர் ஃகெர்ல் 1896ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கை அறிக்கையில் விவிலியம் கூறும் வாக்களிக்கப்பட்ட நாடு தொடர்பான எண்ணக்கருவை எடுத்துக் காட்டினார்[12]. தற்போதைய இசுரேலிய முன்னனி அரசியல் கட்சியான லிக்குடுக் கட்சி, தன் அரசியல் கொள்கையில் இசுரேல் தேசம் பற்றிய கருத்தைக் கொண்டுள்ளது[13].

இசுலாமியர்களும் தங்களுக்கு அங்கு திருக்குர்ஆனின்படி உரிமை உள்ளதென்கிறார்கள்[14]. இசுரேலியர்கள் கூறிப்பிடும் ஆபிரகாமின் இளைய மகனாகிய ஈசாக்குவின் சந்ததியினருக்கே அந்நிலம் வாக்களிக்கப்பட்டது என்பதை மறுத்து, கானான் பூமி ஆபிரகாமின் எல்லா சந்ததியினருக்கும் ஆபிரகாமின் மூத்த மகனாகிய இசுமாவேல் உட்பட அவரின் சந்ததியினராகிய அராபியர்களுக்கும் வாக்களிக்கப்பட்டது என இசுலாமியர்கள் எதிர்வாதம் செய்கின்றனர்[14]. மேலும், இசுரேலியர்கள் புனிதமாகக் கருதும் இடங்களை இசுலாமியர்களும் புனிதமாகக் கருதுகின்றனர். பிதாக்களின் குகை, கோவில் மலை, 1400 ஆண்டுகளாக யூத புராதன பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இசுலாமிய கட்டுமானங்களான பாறைக் குவிமாடம், அல் அக்சா பள்ளிவாசல் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். முகம்மது நபி சுவர்க்கம் செல்லும் வழியில் யெரூசலம் ஊடாகத்தான் சென்றார் என்று இசுலாமியர் நம்புகின்றனர். காசா கரையை ஆட்சி செய்யும் ஹமாஸ் முழு பாலத்தீனமும் (தற்போதைய இசுரேலும் பாலத்தீனமும் சேர்ந்த பகுதி) இசுலாமியர்களாலேயே ஆளப்பட வேண்டுமென்று கருதுகின்றனர்[15].

கிறித்தவ சையோனியர்கள் இசுரவேலை ஆதாரிக்கின்றார்கள். யூதர்களுக்கு அங்கு முதாதையர்கள் மூலமான உரிமை உண்டு என்கின்றனர். சிலர் கிறித்துவின் இரண்டாம் வருகைக்கும் யூதர்கள் இசுரவேலுக்கு மீண்டும் வருவதற்கு காரணம் உண்டென்கின்றனர்[16][17].

வரலாறு

19ம் நூற்றாண்டு இறுதி - 1948

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சையோனியத்தின் கீழ், அதிகளவாக ஐரோப்பிய யூதர்கள் உதுமான் சுல்தான் மற்றும் அவருடைய பிரதிநிதிகளிடமிருந்து நிலங்களை வாங்கினர். அக்காலத்தில், யெரூசலம் அந்நகரை சுற்றியிருந்த மதில்களைத் தாண்டி வியாபித்திருக்கவில்லை. மக்கட் தொகையும் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தது. சையோனியர்களின் கீழ் கிப்புட்சிம் எனப்படும் கூட்டுப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. டெல் அவீவ் நவீன கால முதலாவது யூத நகராகியது.

முதல் உலக போருக்கு முன்னர், ஏறக்குறைய 500 வருடங்கள் பாலத்தீனம் உட்பட்ட மத்திய கிழக்கு உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற்காலப் பகுதியில் உதுமானியர் மேற்கொண்ட துருக்கி இனத்தவர்களுக்கான ஆதரவு, பேரரசிற்குள் துருக்கியருக்கான முன்னுரிமைப் போக்கு என்பன அராபிரை ஓரங்கட்டியது[18]. உதுமானியரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியினால் அதிகளவில் யூதர்களும் அராபியர்களும் நேச நாடுகளுக்கு தம் ஆதரவை முதல் உலக போரில் வழங்கினர். இச்சம்பவம் அராபிய தேசியவாதம் பரவ வழிகோலியது.

எகிப்திலிருந்த பிரித்தானிய உயர் ஆணையாளர் சேர் ஹென்றி மக்மகோன் இரகசிய தொடர்பு மூலம் குசைன் அரபு புரட்சியை உதுமானிய பேரரசுக்கு எதிராக மேற்கொள்ள வைத்தார். இச் செயல் உதுமானிய பேரரசு முதல் உலக போரில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் எதிராக சேர்மனியுடன் அணி சேர வைத்தது. போரில் பிரித்தானியாவிற்கு அராபியர்கள் உதவினால், பிரித்தானிய அரசாங்கத்தினால் உதுமானிய பேரரசின் பாலத்தீனம் உட்பட அராபிய மாகாணங்கள் அராபிய அரசாக மாற உதவி செய்யப்படும் என மக்மகோன் உறுதியளித்தார். லாரன்ஸ் மற்றும் குசைனின் மகன் பைசாலினால் நடத்தப்பட்ட அரபு புரட்சி வெற்றி பெற்று, பிரித்தானியா பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

போரை வெல்ல யூதர்களின் உதவி அவசியம் என்றுணர்ந்த பிரதமர் டேவிட் லொயிட் ஜோர்ச் உட்பட்டவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், 1917இல் பிரித்தானியா வெளியிட்ட பல்போஃர் பிரகடனம் யூதரின் தேசிய தாயகமாக பாலத்தீனம் இருக்கும் என்றது. இது அரபு உலகை கவலை கொள்ளச் செய்தது [19]. போரின் பின்னர், தற்போதைய இசுரேல், ஜோர்தான், மேற்குக் கரை, காசா என்பன பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் பிரித்தானிய பாலத்தீனமாக இருந்தன.

அக்காலகட்டத்தில் யூதர்களுடைய குடியேற்றம் பாலத்தீனத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 1931இல் 17 வீதமாகவிருந்த யூதர்களின் எண்ணிக்கை 1922இல் 6 வீதமாக அதிகரித்தது[20]. சேர்மனியில் நாசிகள் அதிகாரத்திற்கு வந்ததும் யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இது பாலத்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது [21]. தொடர்ச்சியான யூதர்களின் வரவு பாலத்தீன அராபியர்களை அவர்கள் தாய்நாட்டிற்கும், இன அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக பார்க்கத் தூண்டியது. நிலம் வாங்குதல், யூத நிறுவனங்களில் அராபியர்களை வேலைக்கு அமர்த்தாமை என்பன பாலத்தீன அராபியர்களை கோபம் கொள்ளச் செய்தது.[22] 1920 தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறலாயின. பாலத்தீன அராபியர்கள் தாங்கள் அநீதியாக நடாத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறைக்கும் காரணமாகியது. பங்குனி 1920இல் முதலாவது வன்முறை டெல் ஹாயில் வெடித்தது. பின் குழப்பம் யெரூசலேமிற்கும் பரவியது. 1922இல் வின்சன்ட் சார்ச்சில், யூத அரசு அமைத்தல் என்பதை மறுத்து அராபியர்களை மீள் நம்பிக்கையூட்ட முயன்றார். பெத்தார் அரசியல் கட்சி 1929இல் மேற்கு சுவரில் நடாத்திய ஆர்ப்பாட்டம் குழப்பத்தை ஏற்படுத்த முழு பாலத்தீனத்திற்கும் குழப்பம் பரவியது. அராபியர்கள் 67 யூதர்களை எபிரோனில் படுகொலை செய்தனர்.

குழப்பம் ஆரம்பித்த வாரத்தில் குறைந்தது 116 அராபியர்களும் 133[23] யூதர்களும் கொல்லப்பட்டு 339 பேர் காயப்பட்டனர்.[24]

1930களில் யூத எதிர்ப்பு, பிரித்தானிய எதிர்ப்பு ஆயதக்குழு கருப்புக் கை எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 1935இல் ஆயதப் பயிற்சி பெற்ற 200 – 800 ஆண்கள் இருந்தனர். இவர்கள் யூத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.[25] பதட்டமானது 1936இல் பாலத்தீனத்தில் 1936–1939 அராபிய புரட்சிக்கு வித்திட்டது.[26]

அராபியர்களின் அழுத்தத்தினால்,[27] பிரித்தானியா பாலத்தீனத்திற்கான யூத குடியேற்றத்தை அதிகளவில் குறைக்கலாயிற்று. இதனால் யூதர் சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள். இது பிரதேசத்தில் மேலும் பதட்டத்ததை அதிகரித்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீராதிருக்க, புதிதாகத் தோன்றிய ஐக்கிய நாடுகள் அவையிடம் பிரித்தானிய உதவி கோரியது. 15 மே 1947இல், 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (UNSCOP) ஐ.நா ஆரம்பித்தது. சபை நடுநிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் பெரிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கவில்லை.[28] 5 வாரங்களின் பின், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் என வெவ்வேறு நிலப்பகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென கண்டு கொள்ளப்பட்டது. ஐ.நாவின் பொது சபையின் 181 தீர்மானமான 'இரு-நாடு தீர்வு' 1947 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு 33 நாடுகள் விருப்பு வாக்களித்தும் 13 நாடுகள் எதிர் வாக்களித்தும் 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன. அரபு லீக்கின் அங்கத்துவ நாடுகள் எதிராக வாக்களித்தன. இது இவ்வாறு இருக்க, அராபியர்களும் யூதர்களும் முக்கிய இடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பகிரங்கமாக சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். இருதரப்பினராலும் மேசமான பாரிய அசம்பாவிதங்கள் சில நிகழ்த்தப்பட்டன.[29]

பிரித்தானிய காலணிக்கம் முடிவதற்கு முன், ஐ.நாவினால் யூத அரசுக்கென ஒதுக்கிய பகுதிகள் முழுவதிலும் யூத ஆயுத படையான ஹகானா தாக்குதல்களை நடாத்தியது. அது பல அகதிகள் திபேரியா, கய்ஃபா, சபாட், பெய்சான், யாப்பா போன்ற நகர்களில் குவிய வழிகோலியது.

1948 தொடக்கத்தில், பிரித்தானியா பாலத்தீனத்தைவிட்டு மே 14இல் வெளியேறும் என அறிவித்தது.[30] அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஹரி எஸ் ட்ரூமன் ஐ.நா பொறுப்புத் தன்மை பற்றி முன்மொழிந்தார்.[31]

ஐ.நா. 181 தீர்மானம் - (பச்சை:ஆதரவு, பழுப்பு:எதிர்ப்பு, மஞ்சல்:தவிர்ப்பு, சிவப்பு:வரவில்லை)

14 மே 1948இல், பிரித்தானியா நிர்வாகம் உத்தியோக பூர்வமாக முடிந்து, படைகள் வெளியேறு முன், இசுரேல் அதன் சுதந்திரப் பிரகடணத்தையும் ஆட்சியுடைமையையும் எல்லைகளை குறிக்காது வெளியிட்டது. அடுத்த நாள், அரபு லீக்; 'இரண்டு-நாடு தீர்வு' என்பதை மறுத்து ஐ.நாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியது.[32] அதே நாளில் எகிப்து, லெபனான், சிரியா, யோர்தான், ஈராக் படைகளில் இசுரேல் மீதான படையெடுப்பு அராபிய-இசுரேல் போரை ஆரம்பித்து வைத்தது. புதிதாக உருவெடுத்த இசுரேலிய பாதுகாப்புப் படைகள் அராபிய லிக் நாடுகளின் படைகளை பின் வாங்க வைத்து, ஐ.நா பிரித்த எல்லைக் கோட்டிற்கு அப்பால் தன் எல்லைகளை விரிபுபடுத்தியது.[33] 1948 மார்கழியில் யோர்தான் ஆற்றின் மேற்கு வரை பல பகுதிகளை இசுரேல் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேற்குக் கரை யோர்தானின் கட்டுப்பாட்டிலும், காசா எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தன. இம் முரண்பாடு 713,000[34] பாலத்தீன அராபியர்கள் அகதிகளாக்கியது. யூத ஆயுதக் குழுக்களான இர்குன், ஸ்டென் குழு ஆகியவற்றின் அராபியர்களுக்கெதிரான படுகொலைகள் பாலத்தீனர்களை இடம் பெயரச் செய்தது. 1949 இடைக்கால சமாதான உடன்பாடு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

1949–1967

ஐ.நா. தீர்வு திட்டம் 181க்கு முன்னமும் இசுரேலின் சுதந்திர நாட்டு பிரகடனத்திற்கு முன்னமும், சில அராபிய நாடுகள் அந்நாடுகளில் உள்ள யூதர்களுக்கெதிராக ஓரங்கட்டலை மேற்கொண்டனர். 1948 அரபு-இசுரேல் முரண்பாட்டைத் தொடர்ந்து அவ் யூதர்களின் நிலை மோசமாகியது. 1947 மார்கழியில் அரபு உலகில் யூத சமூகத்தினருக்கெதிரான பாரிய யூத எதிர்ப்பு உருவாகியது. குறிப்பாக சீரியாவிலும் அதெனிலும் மிக மோசமாகி நூற்றுக் கணக்கில் மரணமும் உடற் சேதமும் ஏற்படலாயின. 1948 நடுப்பகுதியில் அராபிய நாடுகளில் இருந்த ஏறக்குறைய முழு யூதர்களும் தாக்குதலுக்குள்ளாகி அவர்களின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. அரபு-இசுரேல் முரண்பாட்டின் விளைவு நீண்ட காலமாக அராபிய நாடுகள் மற்றும் இசுலாமிய நாடுகளில் இருந்த யூதர்களை அரசியல் பணயக் கைதிகளாக்கி, அவர்கள் அந்நாடுகளைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. லிபியாவில் யூதர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ஈராக்கில் உடமைகள் பறிக்கப்பட்டன.[35] எகிப்து அதிகளவான யூதர்களை 1956இல் வெளியேற்றியது. அல்ஜீரியா பிரஜாவுரிமையை பறித்தது. அதிகளவானோர் அரசியல் காரணங்களினாலும் சிலர் தாயக நோக்கோடும் வெளியேறினர்.[36]

1948–1952 காலப் பகுதியில், 700,000 மேற்பட்ட யூதர்களில் ஏறக்குறைய 285,000 பேர் அராபிய நாடுகளிலிருந்து இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர்.[37][36]

1960களில் பிற்பகுதியில் 850,000க்கு மேற்பட்ட யூதர்கள் சில 10 அராபிய நாடுகளிலிருந்து பிறந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இன்று 7,000க்கு குறைவானோர் அந்நாடுகளில் உள்ளனர். சொத்துக்கள் நட்டஈடு இன்றி பறிமுதல் செய்யப்பட்டன.[38][39][40] இன்றைய இசுரேலின் சனத்தொகையில் 41 வீதமானோர் இடம்பெயர்ந்தோரும் அவர்களின் வாரிசுகளுமாவர்..[41]

இசுரேலின் 1948 சுதந்திரப் போர் வெற்றியின் விளைவு மறுபக்கத்தில் அகப்பட்ட அராபியர்கள் இசுரேலின் புகமுடியாது சொந்த இடத்தை இழக்கச் செய்தது. அதுபோலவே, மேற்குக் கரையிலும் காசாவிலும் அகப்பட்ட யூதர்கள் வீட்டையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு இசுரேல் வரவேண்டியதாயிற்று.[42][43]

ஆறு நாள் போரின் விளைவினால் ஏற்பட்ட நில வேறுபாடு

1956இல் எகிப்து டிரான் நீரிணையை இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு மூடி, அகாஃபா குடாவையும் இசுரேலுக்கு நிறுத்திவிட்டது. பின்னர் சுயஸ் கால்வாயை தேசிய உடமையாக்கி இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு தடைவிதித்தது.[44]

இதற்கு பதிலடியாக பிரித்தானிய, பிரான்சு உதவியுடன் இசுரேல் சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமித்தது. சுயெஸ் கால்வாய் சண்டையில் காசா, சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைப்பற்றிக் கொண்டது. ஐ.நாவும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தன.[44][45]இசுரேல் எகிப்தின் பகுதிகளில் இருந்து விலகிக் கொள்ள உடன்பட்டது. எகிப்தும் இசுரேல் போக்குவரத்திற்கு வழிவிட்டு சினாய் தீபகற்பத்தை இராணுவமற்ற பிரதேசமாக்கியது. இராணுவமற்ற பிரதேசத்தை கண்கானிக்க ஐ.நா. அவசரகால படை நிறுத்தப்பட்டது.[46] ஐ.நா. அவசரகால படை எகிப்தின் பகுதிகளில் மட்டும் இருந்தனர். இசுரேல் தன் பகுதியில் ஐ.நா. அவசரகால படையை அனுமதிக்கவில்லை.[47]

பலஸ்தீன விடுதலை இயக்கம் 1964இல் உருவாக்கப்பட்டது. இது சையோனியர்களையும் ஏகாதிபத்தியையும் அழிப்பதுதான் பாலத்தீன விடுதலை எனும் கொள்கையினைக் கொண்டது.

19 மே 1967இல் எகிப்து ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிவிட்டு,[48] 100,000 படையினரை சினாய் தீபகற்பத்தில் நிறுத்தியது.[49] மீண்டும் டிரான் நீரிணையை இசுரேலுக்கு மூடிவிட்டது.[50][51]

19 மே 1967இல் யோர்தான் எகிப்துடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிய எகிப்து ஐ.நா. எல்லையைத் தாண்டி தென் இசுரேலிய எல்லைக்கு முன்னேறியது. 5 ஜூன், இசுரேல் எகிப்தை தாக்கியது. இசுரேலிய விமானப்படையின் எதிர்பாராத தாக்குதலில் அதிகளவு எகிப்து வான்படை அழிவுற்றது. இசுரேல் யோர்தான், சிரியா, ஈராக் வான் படைகளை அழிக்கத் தொடங்கியது. இசுரேலின் இத்தாக்குதல் ஆறு நாள் போரில் அது வெற்றியடைய முக்கிய காரணமாகியது.[49][51] போரின் முடிவில் இசுரேல் சினாய் தீபகற்பம், காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம், சேபா பண்னைகள், கோலான் குன்றுகள் என்பனவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போரின் விளைவு அப்பிரதேசத்தின் புவியியல் அரசியலில் தாக்கம் செலுத்தியது.

1967–1973

ஐ.நா. ஏற்பாட்டில் இசுரேல், எகிப்து தளபதிகள் சினாயில் சந்திப்பு

ஆகஸ்து 1967இல், அராபிய தலைவர்கள் இசுரேல் பற்றிய அராபியர் நிலைப்பாடுபற்றி கலந்துரையாடினார்கள். அவர்கள் இசுரேல் அரசுக்கு அங்கீகாரம் இல்லை, அதனுடன் சமாதானம் இல்லை, பேச்சுவார்த்தை இல்லை என்ற 'மூன்று இல்லை(கள்)' என்ற முடிவுக்கு வந்தனர்.[52]

1967இல், சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைவிட்டுவிடும் நோக்காகக் கொண்டு தேய்வுப் போரை எகிப்து ஆரம்பித்தது.[53] 1970 இல் கமால் நாசீரின் மரணத்துடன் அப்போர் முடிவுக்கு வந்தது.

6 அக்டோபர் 1973இல் சிரியாவும்,எகிப்தும் எதிர்பாராத தாக்குதலை யூதர்களில் புனித நாளாகிய யோம் கிப்பூரில் ஆரம்பித்தது. இசுரேல் படைகள் தயாரற்ற நிலையிலிருந்து மீள 3 நாட்கள் எடுத்தது.[54][55] யோம் கிப்பூர் போர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் மறைமுகமாக ஒன்றையொன்று எதிர்க்க வழியமைத்தது. இசுரேல் போரை தீவிரப்படுத்த, சோவியத் ஒன்றியம் இராணுவ நடவடிக்கை பற்றி அச்சுறுத்தல் விடுத்தது. அமெரிக்காவின் அணு ஆயுத போர் பற்றிய முன்னெச்சரிக்கை 25 அக்டோபரில் போர் நிறுத்தத்திற்கு வழிவிட்டது.[54][55]

1974–2000

எகிப்து

1970களின் பிற்பகுதியில் டேவிட் முகாம் உடன்பாட்டைத் தொடர்ந்து இசுரேலும் எகிப்தும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதனால், சினாய் தீபகற்பம் எகிப்துக்கு கையளிக்கப்பட, காசா இசுரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஓப்பந்தம் மூலம் இசுரேலின் கப்பல் போக்குவரத்தும் அப்பகுதியில் சுமூகமானது.

யோர்தான்

1994இல் இசுரேலும் யோர்தானும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இவற்றுக்கிடையேயான முரண்பாடு ஏறக்குறைய 18.3 பில்லியன் டாலர்களை இழக்கச் செய்தது. சமாதான உடன்படிக்கை மூலம் யோர்தான் இசுரேலுடன் உறவு ஏற்படுத்திய எகிப்துக்கு அடுத்த இரண்டாவது அராபிய நாடாகியது.

ஈராக்

1948 இலிருந்து இசுரேலும் ஈராக்கும் ஜென்ம விரோதிகளாகவே காணப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நடந்த அராபிய-இசுரேலிய போரில் ஈராக் தன் படைகளை அனுப்பியது. பின்னர், 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரிலும், 1973ஆம் ஆண்டு நடந்த யோம் கிப்பூர் போரிலும் எகிப்துக்கும் சிரியாவிற்கும் உதவியது.

ஜூன் 1981இல், ஒபரா இராணுவ நடவடிக்கை மூலம் ஈராக் புதிதாக நிர்மானித்த அணு உலைகளை இசுரேல் தாக்கியழித்தது.

1991 வளைகுடா போரின்போது, ஈராக் 39 ஸ்கட் ரக ஏவுகணைகளை இசுரேல் மீது ஏவியது. ஆயினும் அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இசுரேல் பதில் தாக்குதல் நடத்தாமல், போர் வேறுவடிவம் எடுக்கவிடாமல் மௌனமாக இருந்தது.

லெபனான்

யோர்தானில் 1970இல் ஏற்பட்ட உள்ளூர் கலவரத்தைத் தொடர்ந்து, யோர்தான் மன்னர் ஹசைன் பாலத்தீன விடுதலை இயக்கத்தை வெளியேற்றினார். இதனால் ஆயிரக் கணக்கான பாலத்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் லெபனானில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தினர். 1981இல் சிரியா பாலத்தீன விடுதலை இயக்க உதவியுடன் ஏவுகணைகளை லெபனானில் நிறுத்தியது. 1982இல் லெபனான் மீது இசுரேல் போர் தொடுத்தது. இரு மாதங்களில் பாலத்தீன விடுதலை இயக்கம் அங்கிருந்து வெளியேறும் உடன்பாட்டிற்கு வந்தது.

1983இல் இசுரேலும் லெபனானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். சிரியாவின் அழுத்தத்தினால் ஒப்பந்தம் 1984இல் செல்லுபடியற்றதாகியது. முரண்பாட்டின் அளவு குறைந்ததும் 1985இல் இசுரேல் லெபனானின் 15கி.மி அகல பரப்பளவில் இருந்து பின்வாங்கியது. 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவினருக்கு எதிராக இசுரேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியாவுடனான சமாதான உடன்படிக்கை திட்டத்தின்படி, 2000 ஆம் ஆண்டில் தென் லெபனான் பகுதிகளிலிருந்த பாதுகாப்பு வலயங்களை இசுரேல் அகற்றியது.[56][57]

2006இல் ஹஸ்புல்லாவின் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து தென் லெபனானிலிருந்த ஹஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதும் 2006 லெபனான் போர் உருவாகியது. 34 நாட்கள் நீடித்த இப்போரின் விளைவாக, தடுப்பு வலயம் தென் லெபனானில் உருவாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் பின்வாங்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதிப் படைக்கு லெபனானின் பகுதிகளை இசுரேல் கையளித்தது. இரு தரப்பும் தமக்கே வெற்றியென அறிவித்தன.[58][59]

பாலத்தீனம்

இட்சாக் ரபீன், பில் கிளின்டன், யாசிர் அரஃபாத் 13 செப்டெம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம்

1970களில் பாரியளவில் சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. லெட் விமான நிலைய படுகொலை, முனிச் ஒலிம்பிக் படுகொலை, என்டபே பயணக்கைதிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

1987 மார்கழியில் முதலாவது இன்டிபாடா ஆரம்பித்தது. ஜபய்லா அகதிகள் முகாமிலிருந்து ஆரம்பித்து காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம் வரை பரவியது. பொது ஆர்ப்பாட்டத்தோடு இசுரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இசுரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் என்பன இடம் பெற்று சர்வதேச கவனத்தைப் பெற்றது. இசுரேலிய பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு, பாரிய கைது போன்ற பதில் நடவடிக்கைகள் சர்வதேச விமர்சனத்திற்குள்ளானது. அதுவரை பாலத்தீன மக்கள் தலைமையாக கருதப்படாத பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலை அங்கீகரித்து பயங்கரவாத செயல்களை கைவிட்டதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.

1993 மத்தியில் இசுரேலிய, பாலத்தீன பிரதிநிதிகள் நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இதன் விளைவாக இசுரேலும் பாலத்தீன விடுதலை இயக்கமும் செப்டெம்பர் 1993இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இசுரேல் பாலத்தீன விடுதலை இயக்கத்தை பாலத்தீன மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டனர். பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலிய அரசின் இருப்பை ஏற்றுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை விட்டு, அதன் விருப்பமாகிய இசுரேலின் அழிவு என்ற கொள்கையை கைவிட்டது.

1995இல் ஒஸ்லோ 2 என்ற உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. இதன்படி மேற்குக் கரையில் அ, ஆ, இ என்ற பிரிவுகள் காணப்பட்டன. பிரிவு அ பாலத்தீனத்தினத்தின் முழு சிவில் கட்டுப்பாட்டில் இருக்கும், அதன் உள்ளக பாதுகாப்பிற்கு பாலத்தீனியர்களே பொறுப்பானவர்கள்.

2000–2009

கடத்தப்பட்ட கிலாத் ஷாலித் படத்துடன் காணப்படும் ஹமாஸ் அங்கத்தவர் - சுவரொட்டி

இரண்டாவது இன்டிபாடா பாலத்தீனத்துடனான அரசியல் உறவு பற்றி இசுரேலை மீள யோசிக்க வைத்தது. தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இசுரேல் இராணுவம் ஆறு நாள் போரின் பின் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.[60]

இசுரேல் மேற்குக் கரையின் பல பகுதிகளை மீளவும் கைப்பற்றிக் கொண்டது. இருந்தபோதிலும், 2008இல் மெதுவாக அதிகாரத்தினை பாலத்தீன அதிகார சபைக்குக் கையளித்தது.[61][62][63]

இசுரேலிய பிரதமர் ஏரியல் சரோன் 2003இல் காசாவிலிருந்து பின்வாங்குதல் என்ற முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்தார். இது 2005இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.[64]

ஜூன் 2006இல் ஹமாஸ் இசுரேலிய படைவீரர் கிலாத் ஷாலித்தை கடத்தியது அச்சந்தர்ப்பத்தில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட படைவீரைத் தேடி இசுரவேல் படையினர் இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டனர்.[65] 2011 இல் அப்படைவீரர் 1027 பாலத்தீன கைதிகள் பறிமாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டார்.[66][67]

ஜுலை 2006இல் ஹிஸ்புல்லா லெபனானைக் கடந்து தாக்கியதில் 8 இசுரவேலிய படையினர் கொல்லப்பட்டும் இருவர் கடத்தப்பட்டனர். இது 2006 லெபனான் போருக்கு வித்திட்டு, லெபனானில் பெரும் அழிவு ஏற்பட்டது.[68] ஐ.நா. அணுசரனையுடன் ஆகஸ்து 2006இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது.[69] இதில் பெருமளவு லெபனானிய பொதுமக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.[70][71][72][73][74] லெபனானின் உட்கட்டமைப்பு பாரதூரமாக சேதத்திற்குள்ளானது. ஏறக்குறைய ஒரு மில்லியன் லெபனானிய பொதுமக்களும்[75] 300,000 – 500,000 இசுரேலிய பொதுமக்களும் இடம் பெயர்ந்தனர்.[76][77][78]

2வது லெபனான் போர் முடிந்ததும் திரும்பிவரும் இசுரேல் படைவீரர்கள்

காசா உள்ளூர் போரின் பின், ஃபதஹ்விடமிருந்து ஹமாஸ் காசாவை கைப்பற்றியது. இதனால் எல்லையில் இசுரேல் கட்டுபாடுகளை விதித்தது. 2007இல் இருந்து இசுரேலும் எகிப்தும் அங்கு பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தின.

2007இல் இசுரேல் இராணுவ நடவடிக்கை மூலம் வடகெரியாவின்[79] உதவியுடன் சிரியாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணு ஆலையை தாக்கியழித்தது. 2003 இலும் சிரியாவிலிருந்த ஆயுதக் குழுவின் தளத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இசுரேல்-ஹமாசுக்கிடையிலான உடன்படிக்கை 2008 டிசம்பரில் முடிவுற்றது.[80] இதற்கு இருதரப்பினருமே காரணம்.[81][82][83][84] இதைத் தொடர்ந்து இசுரேல் கடத்தல் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தியது.[85] பதிலாக ஹமாஸ் 60க்கு மேற்பட்ட ஏவுகணைகளால் இசுரேலிய நகரங்களைத் தாக்கியது. விளைவு இசுரேல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வைத்தது. மனித உரிமை அமைப்புக்கள் இரு தரப்பும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டின.[86]

இசுரேல் படையினருக்கும் காசாவுக்கு உதவி செய்ய முனைந்த ஆர்வலர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு, 9 ஆர்வலர்கள் கொல்லப்பட்டும்[87][88][89] 7 படைவீரர்கள் காயமடைந்தனர்.[90][91]

2010 - தற்போது வரை

ஹமாஸ் தலைமையிலான 13 ஆயுதக்குழுக்களின் பயங்கரவாத செயற்பாடுகள் பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டன.[92] இசுரேலியர்கள் மீதான தாக்குதல்கள் 2010க்குப் பின்னர் அதிகரித்துக் காணப்பட்டது. இதில் ஹமாசின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.

குறிப்பிடத்தக்க போர்களும் வன்முறைச் சம்பவங்களும்

முரண்பாட்டினால் ஏற்பட்ட செலவு

தந்திரோபாய மதிநுட்ப குழுவின் அறிக்கையின்படி, 1991–2010 வரையான மத்திய கிழக்கு முரண்பாட்டினால் ஏற்பட்ட சந்தர்ப்பச்செலவு 12 ட்ரில்லியன் டாலர்கள் என கூறப்படுகின்றது.

மேற்கோள்கள்

வெளிச் சுட்டிகள்

அரசாங்க மற்றும் உத்தியோகபூர்வ மூலங்கள்

பிராந்திய ஊடகம்

இசுரேல்
அரபு

திங் டாங் மற்றும் தந்திரோபாய பகுப்பாய்வு

சமாதான முன்மொழிவுகள்

வரைபடங்கள்

பொது மூலங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை