உயிரிய வகைப்பாடு
உயிரிய வகைப்பாடு (Biological classification) உயிரியல் அறிஞர்கள் உயிரினங்களை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர் என்பதாகும்.
இந்த வகைப்பாட்டிற்கான துவக்கம் அரிசுட்டாடிலின் பன்வரிசை அமைப்பிற்கான படைப்புகளில் உள்ளது. இருசொற் பெயரீட்டை பரவலாக்கிய கரோலசு லின்னேயசின் தாக்கமும் குறிப்பிடத்தக்கது. இந்த இருசொல் பெயரீட்டில் முதற்சொல் பேரினத்தையும், இரண்டாம் சொல் இனத்தையும் குறிப்பிடுகின்றன. மனித இனம் ஓமோ சப்பியன்சு எனப்படுகின்றது. இனத்தின் பெயர்கள் பொதுவாக சாய்ந்த எழுத்துகளில் எழுதப்படுகின்றன.
உயிரிய வகைப்பாடு என்பது வகைப்பாட்டியல் எனவும் அறியப்படுகின்றது. காலப்போக்கில் இது வளர்ந்துவந்துள்ளது. பல்வேறு கொள்கைகள் இந்த வகைப்பாடுகளை வரையறுத்தும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறாக ஏற்கப்பட்டும் வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு முதல் டார்வினின் பொது மரபுக் கொள்கையை ஒத்திருக்குமாறு வகைப்படுத்தப்படுகின்றன[1] . தற்காலத்தில் டி. என். ஏ. வரிசைமுறை பகுப்பாய்வு மூலக்கூற்று பரிணாம ஆய்வுகள் பரவலாக ஏற்கப்படுகின்றன.