லூயி டே பிராய்
லூயி டே பிராய் (Louis de Broglie) (15 ஆகத்து 1892 - 19 மார்ச்சு 1987) ஒரு பிரஞ்சு இயற்பியலாளர். 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, 'எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக" அவருக்கு 1929ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
லூயி டே பிராய் | |
---|---|
பிறப்பு | தியப், பிரான்சு | 15 ஆகத்து 1892
இறப்பு | 19 மார்ச்சு 1987 லவ்சினீஸ்,[1] France | (அகவை 94)
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | சோர்போன் பாரிஸ் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சோர்போன் |
அறியப்படுவது | எதிர்மின்னிகளின் அலை இயல்பு டி புறாக்ளி அலை |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1929) கலிங்கா விருது (1952) |
வாழ்க்கை வரலாறு
கல்வியும் இராணுவப் பணியும்
லூயி டே பிராய் பிரான்சு நாட்டின் தியப் என்ற ஊரில் பிறந்தார்.[1] பள்ளிப்படிப்பிற்குப் பிறகு தமக்கையின் தூண்டுதலால் ஆட்சிப்பணியில் சேரும் விருப்பத்தோடு சோர்போன் பல்கலையில் முதலில் வரலாற்றுப் பிரிவையும் பின்னர் சட்டப்பிரிவையும் எடுத்துப் பயின்றார். ஆனால், அவரது அண்ணன் மாரிசு டே பிராயினால் கவரப்பட்டு 1910-இல் இயற்பிலைப் படிக்கத் தொடங்கினார். 1914இலிருந்து 1918 வரை இராணுவத்தில் பணியாற்றினார்; அங்கு அவரது ஓய்வு நேரத்தில், தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தினார்.[2]
ஆய்வு
படைப்பணியிலிருந்து திரும்பிய பிறகு கருத்தியற்பியலில், குறிப்பாக குவாண்டம் பற்றிய புதிர்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் பலனாக 1924இல் பாரிசு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில், குவாண்டம் கொள்கையில் ஆய்வுகள் என்ற தலைப்பு கொண்ட ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டதைப் பெற்றார்.[3] லூயியின் எதிர்மின்னி அலைகள் கொள்கையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெகுவாகப் பாராட்டினார்.[4] பின்னர் (1927) இக்கருத்து டேவிசன்-ஜெர்மர் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது. மேலும், பருப்பொருள்களின் அலைத்தன்மையின் அடிப்படையில் ஆஸ்திரிய நாட்டு இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் அலை இயங்கியலைத் தோற்றுவித்தார்.[5]