சாணக்கியர்
சாணக்கியர் (Chanakya) (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி சாணக்கியர் காலம்: பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு[1]) இவர் ஓர் இந்திய சமஸ்கிருத மொழி ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தை[2] எழுதியவர். கௌடில்யர் (Kauṭilya) என்றும் விஷ்ணுகுப்தர் (Vishnugupta) என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.[3][4][5][6] இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.[4]
சாணக்கியர் | |
---|---|
சாணக்கியரின் கலை சித்தரிப்பு, 1915 | |
மற்ற பெயர்கள் | கௌடில்யர் (Kauṭilya), விஷ்ணுகுப்தர் (Vishnugupta) |
பணி | பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் குரு மற்றும் ஆலோசகர் |
அறியப்படுவது | மௌரியப் பேரரசு நிறுவக் காரணமானவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அர்த்தசாஸ்திரம் |
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரை இத்தாலியின் மேக்கிவல்லி என்ற சிந்தனையாளருடன் ஒப்பிடுகின்றனர். (மேக்கிவல்லி எழுதிய நூல் பிரின்ஸ்) மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவரின் பூர்விகம் கேரளா.[சான்று தேவை]
பின்னணி
தகவல் ஆதாரங்கள்
சாணக்கியரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் குறைவான அளவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஓரளவு புராணம் சார்ந்தவை. தாமஸ் ட்ராட்மான் (Thomas Trautmann) என்பவர் பண்டைய சாணக்யா-சந்திரகுப்த வரலாற்றில் நான்கு தனித்துவமான கூறுகளை விளக்கியுள்ளார்.[7]
வரலாற்று நிகழ்வோடு தகவல்களை புனைந்து வழங்கும் பதிப்பு | எடுத்துக்காட்டு நூல்கள் |
---|---|
பௌத்த மத (Buddhist) பதிப்பு | மகாவம்சம் (Mahavamsa) மற்றும் அதன் வம்சாத்தியப்பகசினி (Vamsatthappakasini) வர்ணனை -பாலி (Pali) மொழி |
ஜைன மத (Jain) பதிப்பு | ஹேமசந்திராவின் (Hemachandra) பரிஷிஷ்தபர்வன் (Parishishtaparvan) |
காஷ்மிர (Kashmiri) பதிப்பு | சோமதேவரின் (Somadeva) கதாசரித்சகாரா (Kathasaritsagara) மற்றும் ஷேமேந்திராவின் (Ksemendra) பிரிஹத்-கதா-மஞ்சரி (Brihat-Katha-Manjari) |
விசாகதத்தர் பதிப்பு | விசாகதத்தரின் முத்ரா ராக்ஷஸம் எனும் சமஸ்கிருத நாடகம் |
மேற்படி நான்கு பதிப்புகளிலும், சாணக்கியர் நந்த மன்னரால் அவமதிக்கப்பட்டது வெளிப்படுகிறது. அதனால் சாணக்கியர் நந்தாவை அழிக்க சபதம் செய்தார். நந்தாவைப் பதவியிறக்கம் செய்தபின், சந்திரகுப்தரை மகத நாட்டின் புதிய அரசராக பதவி ஏற்கச் செய்தார்.
கௌடில்யர் அல்லது விஷ்ணுகுப்தர் என்ற அடையாளம்
சாணக்கியருக்கு பண்டைய அர்த்தசாஸ்திரமானது, மரபு ரீதியாக, இயல்புத்தன்மை, மாறாமல் பல அறிஞர்களால் கற்பிக்கப்பட்டது. அர்த்தசாஸ்திரத்தில், விஷ்ணுகுப்தா என்ற பெயரால் சாணக்கியரைக் குறிக்கும் ஒரு வசனம் தவிர, மற்ற பகுதிகள், அதன் ஆசிரியர் கௌடில்யர் என்பவரை அடையாளம் காட்டுகின்றன. கௌடில்யா என்பது ஆசிரியரின் பொது முன்னோரை உடைய கூட்டுக்குழுத் தோழர் எனக் குறிப்பிடப்படுகிறது.[8]
பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விஷ்ணு சர்மாவின் முற்கால சமஸ்கிருத இலக்கியமான பஞ்சதந்திரம், விஷ்ணுகுப்தாவுடன் சாணக்கியருக்குள்ள தொடர்பை அடையாளம் காட்டுகிறது.[9]
கௌடில்யருடன் விஜயகுப்தரும் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படுகிறார். இது உரை ஆசிரியர்களுக்கு முன்னோடி யார் என்பதில் குழப்பம் விளைவிக்கிறது என்றும், கவுதிலியரின் பணிகளின் மறுகட்டமைப்பாக விஷ்ணுகுப்தர் செயலாற்றினார் என்றும் ஓஜா கூறுகிறார்.[2]
சாணக்கியர் மற்றும் கௌடில்யர் இரண்டு வேறுபட்ட மக்களாக இருக்கலாம் என்று (Thomas Burrow) கூறுகிறார்.[10]
வாழ்க்கை
சாணக்கியர் சந்திரகுப்த மௌரியருக்கு ஆசிரியராக விளங்கினார். இவர் சந்திரகுப்தர் மற்றும் பிந்துசாரர் ஆகியோரின் நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
ஜார்ஜ் மாடெல்ஸ்கி (George Modelski) கருத்துப்படி, மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சந்திரகுப்தருக்கு முதன்முதலில் முதலமைச்சராகப் பணியாற்றிய கௌடில்யர் என்ற பிராமணரே, சாணக்கியர் என நம்பப்படுகிறார்.[11][12]
இலக்கியப் பணிகள்
சாணக்கியரின் இரண்டு புத்தகங்களின் இயல்புத்தன்மை: அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி, இது சாணக்கிய நீதி-சாஸ்திரா என்றும் அறியப்படுகிறது.[13]
அர்த்தசாஸ்திரமானது, நிதி மற்றும் நிதிக் கொள்கைகள், நலத்திட்டஙள், சர்வதேச உறவுகள் மற்றும் போர் உத்திகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கிறது. இந்த உரை ஆட்சியாளரின் அனைத்துக் கடமைகளையும் முழுமையாகக் கோடிட்டுக்காட்டுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது உண்மையில் பல முந்தைய நூல்களின் தொகுப்பாக இருக்கும் என்றும், சாணக்கியர் இந்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் எனவும் பல அறிஞர்கள் நம்புகின்றனர்.[7]
சாணக்கிய நீதி என்பது, பல்வேறு சாஸ்திரங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சூத்திரம், மணிமொழி மற்றும் முதுமொழி விளக்கத் தொகுப்பாகக் கருதப்படுகிறது.[13]
படைப்புகள்
இவர் அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.
மரபுரிமை
அர்த்தசாஸ்திரம் ஒரு மாநிலத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு முழுமையான மிடுக்கான கையேடு ஆகும்.
உயர் நோக்கத்துடன், பரிந்துரைகளில் தெளிவான மற்றும் துல்லியமான தகவல்களால், ஒரு அரசு இயங்குவதற்கான நடைமுறை அனுபவத்தையும், செயல்பாடுகளையும், தெளிவாக விளக்குகிறது.
இது ஒரு பொருளியல் நெறி சார்ந்த உரை அல்ல.
ஆனால் ஒரு மாநிலத்தை இயக்கும் கலை பற்றிய ஒரு உண்மையான விளக்கம்.
- இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ ஷங்கர் மேனன்[14]
சாணக்கியர், இந்தியாவின் மிகப்பெரும் சிந்தனையாளரும் தூதருமாக கருதப்படுகிறார். பெரும்பாலான இந்திய தேசியவாதிகள், ஆழ்ந்து சிந்தித்து, ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தை எதிர் நோக்கி முழு உபதேசம் செய்த முன்னோடிகளில் ஒருவராக அவரைக் கருதுகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனன், இன்றும் கூட பயன்படுத்தக்கூடிய தெளிவான மற்றும் துல்லியமான விதிகளுக்குச் சான்று சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்று புகழ்ந்தார்.
மேலும், உத்திநோக்கை நாடும் பிரச்சினைகள் பற்றி அறியவும், பார்வைகளை விரிவுபடுத்தவும் அர்த்தசாத்திரத்தைப் படியுங்கள் என்று கூறுகிறார்.[14]
கதைகள்
பின்வருபவை சாணக்கியர் வாழ்வில் நடந்ததாக நம்பப்படும் சுவையான சம்பவங்கள்:
- பிற்காலத்தில் அரசனாவார் என்பதைக் குறிக்கும் வகையில் பிறக்கும் போதே பற்களோடு பிறந்தார். அந்தணர்கள் அரசாள்வது முறையற்றது என்பதால் இவரது பற்கள் உடைக்கப்பட்டன. அதனால் இவர் வேறொருவன் மூலம் அரசாள்வான் என்று கணிக்கப்பட்டது.
- நந்த அரசன் சாணக்கியரை அவையிலிருந்து வெளியேற்றியதே இவரை பழிதீர்க்கும் உறுதியேற்கக் காரணம்.
- தம் விருப்பப்படி ஆட்சி நடத்தத் தகுதியான ஒருவனைத் தேடி, இறுதியில் சந்திரகுப்தனைத் தேர்ந்தெடுத்தார்
- நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.
- சந்திரகுப்தன் மன்னனாக இருந்த போது அவனுடைய உணவில் நஞ்சைச் சேர்த்து (அவனறியாமல்) உண்ணச் செய்தார். அவன் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவ்வாறு செய்தார். இதையறியாத மன்னன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு தன் உணவை ஒரு நாள் கொடுத்தான். இதையறிந்த சாணக்கியர் அரசகுல வாரிசைக் காப்பதற்காக அரசியின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்தார். அவனுக்கு பிந்துசாரன் என்று பெயரிட்டார்.
- ஒரு முறை மௌரியப் படை ஒரு குகையில் ஒளிய நேர்ந்தது. அவர்களிடம் உணவு இல்லாததால் அனைவரும் பசியால் வாடினர். அப்போது சாணக்கியர் ஓர் எறும்பு ஒற்றைச் சோற்றைச் சுமந்துக்கொண்டுச் செல்வதைக் கவனித்தார். அவர்களைச் சுற்றி எங்கும் உணவு தென்படவில்லை. எனவே வீரர்களைக் குகையைச் சோதனை செய்யப் பணித்தார் சாணக்கியர். எதிரிகள் குகைக்குக் கீழே உணவருந்திக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே வீரர்களோடு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தமிழகத் தொடர்பு
தமிழகத்தில் இருந்த சோழியர் என்ற பிராமண குலத்தவர், சாணக்கியர் தம் இனத்தைச் சார்ந்தவர் என்கின்றனர். இதே போன்று, அபிதசிந்தாமணி, சாணக்கியர் திராமிள இனத்தைச் சார்ந்தவர் என்று கூறுகிறது. (திராமிள என்பது திராவிட என்னுஞ் சொல்லின் மூலச் சொல்லாகக் கருதப்படுகிறது)
ஊடகம்
1990ல் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நாடகத் தொடர், சாணக்கியா அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துக்காட்டியது.