திருவண்ணாமலை
திருவண்ணாமலை (Tiruvannamalai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான) அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
திருவண்ணாமலை Tiruvannamalai திருவருனை, திருஅண்ணாமலை | |
---|---|
மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): கோயில் நகரம், தக்காணப் பீடபூமியின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | திருவண்ணாமலை மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சி. என். அண்ணாத்துரை |
• சட்டமன்ற உறுப்பினர் | எ. வா. வேலு |
• மாவட்ட ஆட்சியர் | பி. முருகேஷ், இ. ஆ. ப |
பரப்பளவு[1] | |
• மாநகராட்சி | 13.64 km2 (5.27 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 1,45,278 |
• தரவரிசை | 25 |
• பெருநகர் | 1,98,100 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 606601 |
தொலைபேசி குறியீடு | 91-4175 |
வாகனப் பதிவு | TN 25 |
சென்னையிலிருந்து தொலைவு | 194 கி.மீ (121 மைல்) |
பெங்களூரிலிருந்து தொலைவு | 202 கி.மீ (126 மைல்) |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 106 கி.மீ (66 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 317 கி.மீ (197 மைல்) |
இணையதளம் | tiruvannamalai |
இந்நகரம், புதுச்சேரி - பெங்களூரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - தூத்துக்குடி நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38 ம் மற்றும் சேலம் - திருவண்ணாமலை - ஆரணி - சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 237 ம், இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாநகரம் உருவாக்கம்
- திருவண்ணாமலை மாநகரம் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை மாநகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
- சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை மாநகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது.
- பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால், திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. 4ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
- பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.
- திருவண்ணாமலை 1866 இல் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பெற்றது.
- 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகராட்சியாக உருவானது.
- 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2007 இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது
- 15 மார்ச் மாதம் 2024 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,45,278 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 72,406 ஆண்கள், 72,872 பெண்கள் ஆவார்கள். இந்நகரம் பாலின விகிதம் 1,006 மற்றும் குழந்தையின் பாலின விகிதம் 958 ஆகும். மக்களின் சராசரி கல்வியறிவு 87.75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.98%, பெண்களின் கல்வியறிவு 82.59% ஆகும்.[3]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருவண்ணாமலையில் இந்துக்கள் 82.57%, முஸ்லிம்கள் 14.07%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.13% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1951 | 35,912 | — |
1961 | 46,441 | +29.3% |
1981 | 89,462 | +92.6% |
1991 | 1,09,196 | +22.1% |
2001 | 1,30,376 | +19.4% |
2011 | 1,45,278 | +11.4% |
சான்று: |
சிவாலயமும் சித்தர்களும்
திருவண்ணாமலை கோயில்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் ? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.[6]
சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.
கிரிவலம்
கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.
சித்தர்கள்
திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன.
தக்காண பீடபூமி உருவாக்கம்
திருவண்ணாமலை மலை ஓர் இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் இது வெடித்து, இதன் தீக்குழம்பு, நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.[சான்று தேவை]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், திருவண்ணாமலை (1951–1980) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.3 (95.5) | 39.8 (103.6) | 42.8 (109) | 44.4 (111.9) | 45.0 (113) | 44.3 (111.7) | 40.9 (105.6) | 39.4 (102.9) | 39.6 (103.3) | 39.2 (102.6) | 35.8 (96.4) | 35.0 (95) | 45.0 (113) |
உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) | 32.0 (89.6) | 35.0 (95) | 37.1 (98.8) | 38.5 (101.3) | 36.3 (97.3) | 34.6 (94.3) | 34.0 (93.2) | 34.0 (93.2) | 33.0 (91.4) | 29.5 (85.1) | 28.3 (82.9) | 33.46 (92.23) |
தாழ் சராசரி °C (°F) | 18.2 (64.8) | 19.2 (66.6) | 21.3 (70.3) | 24.8 (76.6) | 26.3 (79.3) | 26.0 (78.8) | 25.1 (77.2) | 24.6 (76.3) | 24.1 (75.4) | 22.9 (73.2) | 20.8 (69.4) | 19.2 (66.6) | 22.71 (72.88) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.2 (50.4) | 12.0 (53.6) | 12.1 (53.8) | 13.8 (56.8) | 18.1 (64.6) | 19.6 (67.3) | 18.8 (65.8) | 18.7 (65.7) | 18.7 (65.7) | 15.6 (60.1) | 12.1 (53.8) | 9.3 (48.7) | 9.3 (48.7) |
பொழிவு mm (inches) | 9.0 (0.354) | 7.1 (0.28) | 5.9 (0.232) | 21.8 (0.858) | 83.9 (3.303) | 71.0 (2.795) | 117.0 (4.606) | 124.9 (4.917) | 149.6 (5.89) | 176.9 (6.965) | 155.2 (6.11) | 78.6 (3.094) | 1,000.9 (39.406) |
சராசரி பொழிவு நாட்கள் | 0.8 | 0.5 | 0.4 | 1.3 | 4.7 | 5.3 | 6.6 | 7.8 | 7.6 | 9.4 | 7.7 | 3.9 | 56 |
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை,[8] |
அமைவிடம்
- திருவண்ணாமலை மாநகரம் புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
- திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் மாநில நெடுஞ்சாலை
- ஆரணி - திருவண்ணாமலை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்குமிடத்தில் அமைந்துள்ளது.
- வேலூரிலிருந்து சுமார் 82 கி.மீ. தொலைவிலும்,
- சந்தன நகரான திருப்பத்தூரிலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவிலும்,
- பட்டு நகரான ஆரணியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும்,
- விழுப்புரத்திலிருந்து சுமார் 63 கி.மீ. தொலைவிலும்,
- தர்மபுரியிலிருந்து சுமார் 117 கி.மீ. தொலைவிலும்,
- கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 114 கி.மீ. தொலைவிலும்,
- கள்ளக்குறிச்சியிலிருந்து சுமார் 68 கி.மீ. தொலைவிலும்,
- தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 196 கி.மீ. தொலைவிலும்,
- அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலிருந்து சுமார் 203 கி.மீ. தொலைவிலும் மற்றும் புதுச்சேரியிலிருந்து சுமார் 106 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆன்மீக நகரம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
மாநகராட்சி அதிகாரிகள் | |
---|---|
மேயர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | எ. வா. வேலு |
மக்களவை உறுப்பினர் | சி. என். அண்ணாத்துரை |
திருவண்ணாமலை மாநகராட்சியானது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. என். அண்ணாத்துரை வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எ. வா. வேலு வென்றார்.
சிறப்புகள்
அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது.இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம்விழா காலம் - கார்த்திகை மாதம்
இரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர்.
போக்குவரத்து
திருவண்ணாமலை மாநகராட்சி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து
திருவண்ணாமலை, இரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். வேலூர், ஆரணி, புதுச்சேரி, மற்றும் விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்ல அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் (அதிக பேருந்து சேவைகள் மூலம்) இணைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை:
- தேசிய நெடுஞ்சாலை 38 போளூர் - திருவண்ணாமலை மாநகரம் - தூத்துக்குடி
- எஸ்.எச்.9 சித்தூர் - கடலூர் சாலை (சித்தூர் - காட்பாடி - கண்ணமங்கலம் - போளூர் - கலசப்பாக்கம் - திருவண்ணாமலை ஆட்சியரகம் - திருவண்ணாமலை மாநகரம் - திருவண்ணாமலை சாரோன் - வெறையூர் - திருக்கோவிலூர் - கடலூர்).
- தேசிய நெடுஞ்சாலை 66 - (பெங்களூரு - ஓசூர் - கிருட்டிணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - திருவண்ணாமலை மாநகரம் - திருவண்ணாமலை நாவக்கரை - சோமாசிபாடி
கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி).
- மாநில நெடுஞ்சாலை 237 திருவண்ணாமலை மாநகரம் - கலசப்பாக்கம் - போளூர் நகரம் - களம்பூர் - ஆரணி நகரம்
- தேசிய நெடுஞ்சாலை 6A - திருவண்ணாமலை மாநகரம் - தண்டராம்பட்டு - சாத்தனூர் அணை - தீர்த்தமலை - அரூர் - சேலம்
- தேசிய நெடுஞ்சாலை 503 - திருவண்ணாமலை மாநகரம் - திருவண்ணாமலை கிரிவலப்பாதை - காஞ்சி
- மாநில நெடுஞ்சாலை 133A - திருவண்ணாமலை மாநகரம் - அவலூர்பேட்டை - சேத்துப்பட்டு நகரம்
- தேசிய நெடுஞ்சாலை 269- மாநில நெடுஞ்சாலை 6- (திருவண்ணாமலை மாநகரம்- திருவண்ணாமலை தேனி மலை - சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி ).
பேருந்து சேவைகள்
திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இங்கிருந்து பெரு நகரங்களுக்கு, பேருந்து சேவைகள் நன்றாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று செஞ்சி, தாம்பரம், சென்னை வழித்தடம் ; மற்றொன்று போளூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி, சென்னை வழித்தடம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது.
மேலும், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி, தாம்பரம்,பெங்களூரு, ஆரணி, கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு 100க்கும் அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.
தொடருந்துப் போக்குவரத்து
திருவண்ணாமலையில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் இரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதையாகும்.
திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:
- பெங்களூர் - எஸ்வந்த்பூர்
- கொல்கத்தா - ஹௌரா
- திருப்பதி
- கடலூர்
- பாண்டிச்சேரி
- மன்னார்குடி
- மாயவரம்
6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் மற்றும் திருவண்ணாமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும்:
- காட்பாடி - விழுப்புரம் பயணிகள் இரயில்
- காட்பாடி - திருவண்ணாமலை பயணிகள் இரயில்
- கடலூர் - ஆரணி பயணிகள் இரயில் தினம்தோறும் இயக்கப்படுகின்றன.
இரயில் அட்டவணை
வ.எண் | ரயில் பெயர் | புறப்படும் இடம் | சேருமிடம் | வழித்தடம் − | சேவைகளின் கால அளவு |
---|---|---|---|---|---|
1 | காட்பாடி- திருவண்ணாமலை -விழுப்புரம் - கடலூர் பயணியர் ரயில் | காட்பாடி | கடலூர் | வேலூர், கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, தண்டரை, அரகண்டநல்லூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர் | தினமும் |
2 | பெங்களூர் - திருவண்ணாமலை பயணியர் ரயில் | பெங்களூர் கண்டோன்மென்ட் | திருவண்ணாமலை | துரிஞ்சாபுரம், போளூர் , ஆரணி சாலை, வேலூர் , காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிரிஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் - மல்லேசுவரம், - பெங்களூர் | தினமும் |
3 | தாம்பரம் - திருவண்ணாமலை விரிவாக்கம் (EXTENSION .) பயணிகள் ரயில் | தாம்பரம் | தண்டரை | செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் – காட்பாடி, ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலை | தினமும் |
4 | புதுச்சேரி - திருப்பதி விரிவாக்கம் (EXTENSION) பயணிகள் ரயில் | புதுச்சேரி | திருப்பதி | விழுப்புரம், >திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர், காட்பாடி, சித்தூர் | வாரந்தோறும் |
வானூர்தி நிலையம்
திருவண்ணாமலையில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை. எனினும், பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு சென்னை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்குச் சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள்
- அண்ணாமலையார் கோயில் கோபுரம் மற்றும் மண்டபம்.
- அண்ணாமலையார் கோயில் கோபுரம்.
- அண்ணாமலையார் கோயிலின், இராஜா கோபுரம்.
- அண்ணாமலையார் கோயிலும், பின்புறத்தில் உள்ள மலையும்.
மேற்கோள்கள்
- Urban Infrastructure report (2008). Conversion of City Corporate Plan into Business Plan (PDF) (Report). Tamilnadu Urban Infrastructure Financial Services Limited. Archived from the original (PDF) on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.