மகெல்லன் நீரிணை
மகெல்லன் நீரிணை என்பது தென் அமெரிக்காவின் சிலி பெருநிலப்பரப்புக்குத் தெற்கில் அமைந்துள்ள நீரிணையாகும். பசுபிக் பெருங்கடலுக்கும் அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள முக்கியமான இயற்கை நீரிணை இதுவாகும். இதன் ஆகக் குறைந்த அகலம் 4 கி.மீ ஆகும். இந்தக் குறுகிய அகலம் மற்றும் ஆபத்தான காலநிலை காரணமாக பயணிப்பதற்குச் சிக்கலான நீரிணையாக உள்ளது. போர்த்துக்கேய நடுகாண் பயணியான பேர்டினன் மகெல்லன் 1520 இல் இந்நீரிணையில் பயணித்த முதல் ஐரோப்பியரானார். 1914 இல் பனாமாக் கால்வாய் வெட்டப்படும்வரை பசுபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையிலானபிரதான பாதையாக இந்நீரிணையே இருந்தது.
மகெல்லன் நீரிணை | |
---|---|
தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 53°28′S 70°47′W / 53.467°S 70.783°W |
வகை | நீரிணை |
வடிநில நாடுகள் | சிலி, அர்கெந்தீனா |
அதிகபட்ச நீளம் | 570 கி.மீ |
குறைந்தபட்ச அகலம் | 2 கி.மீ |
இந்த நீரிணையின் இயற்பெயர் எஸ்ட்ரெச்சோ டி டோடோஸ் லாஸ் சாண்டோஸ் ( புனிதர்கள் அனைவரதும் நீரிணை) என்பதாகும். எசுப்பானிய மன்னர் சார்லஸ் V நாடுகாண் பயணியான பெர்டினண்ட் மகெல்லனினது ஞாபகார்த்தமாக மாகெல்லன் நீரிணை என்று பெயரிட்டார்.[1]
வரலாறு
பழங்குடியினர்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமெரிக்க பழங்குடியினர் மாகெல்லன் நீரிணைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.[2] அதன் வடக்கு கடற்கரையின் மேற்குப் பகுதியில் கவாஸ்கர் என்றும் அழைக்கப்படும் அலகலூப் பழங்குடியினரும், கவாஸ்கர்களினது வாழிடங்களில் இருந்து கிழக்கே தெஹுல்ச் பழங்குடியினர் வடக்கே படகோனியா வரையிலும், மகெல்லன் நீரிணையின் குறுக்கே செல்க்ராம் பழங்குடியினரும், செல்க்ராம்களினது வாழிடங்களில் இருந்து மேற்கே யாகன் பழங்குடியினரும் வசித்தனர். மாகெல்லன் நீரிணையில் வசித்த அனைத்து பழங்குடியினரும் நாடோடி வேட்டைக்காரர்கள் ஆவார்கள். இப்பகுதியின் பழங்குடியினர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் ஐரோப்பியர்களினது தலையீட்டை எதிர்கொண்டனர். ஐரோப்பிய நோய்கள் பழங்குடி மக்களின் பெரும் பகுதியை அழித்தன.[3]
மகெல்லனிற்கு முன்
1563 ஆம் ஆண்டில் அன்டடோனியோ கல்வியோவால் மாகெல்லன் நீரிணை பழைய வரைபடங்களில் டிராகன் டெயில் என்பதாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[4]
மகெல்லன்
1520 ஆம் ஆண்டில் எசுப்பானிய மன்னர் சார்லஸ் 1 சேவையில் போர்த்துகீசிய ஆய்வாளரும், கப்பலோட்டியுமான பெர்டினன்ட் மகெல்லன் தனது உலகளாவிய சுற்றுப் பயணத்தின் போது இந்த நீரிணையில் பயணித்த முதல் ஐரோப்பியர் ஆவார்.[5] மகெல்லனின் கப்பல்கள் 1520 ஆம் ஆண்டு புனிதர் அனைவர் பெருவிழா தினமான நவம்பர் 1 இல் எஸ்ட்ரெச்சோ டி டோடோஸ் லாஸ் சாண்டோஸ் நீரிணையில் நுழைந்தன.[6] மகெல்லனின் வரலாற்றாசிரியர் இதனை படகோனிய நீரிணை என்றும் மற்றவர்கள் விக்டோரியா நீரிணை என்றும் அழைத்தனர்.
இந்த நீரிணை ஏழு ஆண்டுகளுக்குள் மகெல்லனின் மாகெல்லனின் நினைவாக எஸ்ட்ரெச்சோ டி மாகல்லேன்ஸ் என்று அழைக்கப்பட்டது.[6] எசுப்பானிய பேரரசும், சிலியின் படைத்தலைவரும் இதனை தங்கள் பிராந்தியத்தின் தெற்கு எல்லையாகப் பயன்படுத்தினர். [சான்று தேவை]
1843 ஆம் ஆண்டு மே 23 இல் சிலி மகெல்லன் நீரிணையை கைப்பற்றியது. சிலியின் சனாதிபதி புல்னெஸ் பிரித்தானிய அல்லது பிரான்சின் ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி சிலியின் சுதந்திரவாதி பெர்னார்டோ ஓகின்சை கலந்தாலோசித்த பின்னர் கைப்பற்ற முடிவு செய்தார். 1881 இல் சிலிக்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையிலான எல்லை ஒப்பந்தத்தில் மகெல்லன் நீரிணை மீதான சிலியின் இறையாண்மையை ஆர்ஜன்டினா அங்கீகரித்தது.
1840 ஆம் ஆண்டில் பசிபிக் நீராவி ஊடுருவல் நிறுவனம் மகெல்லன் நீரிணைப்பில் முதன்முதலில் போக்குவரத்திற்காக நீராவி கப்பல்களை பயன்படுத்தியது. 1914 ஆம் ஆண்டு பனாமா கால்வாய் திறக்கும் வரை அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பசிபிக் வரை பயணிக்கும் நீராவி கப்பல்களுக்கான பிரதான பாதை மாகெல்லன் நீரிணை ஆகும்.[7] அத்திலாந்திக்கில் இருந்து கேப் ஹார்னை (தென் அமெரிக்காவின் தெற்கு முனை) பிரிக்கும் ட்ரேக் பாதை கொந்தளிப்பு, பனிப்பாறைகள் மற்றும் கடல் பனி போன்ற அசாதாரண காலநிலையை கொண்டதால் அத்திலாந்திக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையிலான பாதுகாப்பான வழியாக மகெல்லன் நீரிணை கருதப்பட்டது.
அமைப்பு
மகெல்லன் நீரிணை சுமார் 570 கிலோமீட்டர் நீளமும் சுமார் 2 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.[8] நீரிணையின் வடமேற்கு பகுதி ஸ்மித் வாய்க்கால் வழியாக பிற நீர்வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. காலநிலை மூடுபனி நிறைந்ததாகவும், குளிரானதாகவும் காணப்படுகின்றது. இதன் முக்கிய துறைமுகம் புந்தா அரினாஸ் ஆகும். நீரிணையின் மேற்கு பகுதி மாக்தலேனா வாய்கால் வழியாக பசிபிக்கில் நுழைகிறது. நீரிணையின் தெற்கே கேபிடன் அரசேனா தீவு, கிளாரன்ஸ் தீவு, சான்டா இனஸ் தீவு, டெசோலாசியன் தீவு மற்றும் பிற சிறிய தீவுகளும், வடக்கே பிரன்சுவிக் தீபகற்பம், ரிஸ்கோ தீவு, முனோஸ் கேமரோ தீபகற்பம், மானுவல் ரோட்ரிக்ஸ் அடிலெய்ட் தீவு மற்றும் பிற சிறிய தீவுகளும் காணப்படுகின்றன. இங்கு ஹம்பெக் திமிங்கிலங்களுக்கான சரணாலயமான பிரான்சிஸ்கோ கொலோன் கரையோர மற்றும், கடல் பாதுகாக்கப்பட்ட பகுதி அமைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் அவதானிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வலது திமிங்கிலங்களை பார்ப்பதற்காக நீரிணையின் கிழக்குப் பகுதியில் புதிய சுற்றுலாத் தொழில்கள் நிறுவப்படலாம்.[9][10]