யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராவர். இம் மதத்தில் எட்டு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் என்பது யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அமைப்பு ஆகும்.
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து விவிலியம் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர்.
சார்லஸ் ரசல் என்ற அமெரிக்கர் தனது சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் மீது ஐயம் கொண்டு பிற சபைக் கொள்கைகளையும் பைபிளையும் ஆராயத் துவங்கினார். இவர் வேதாகம மாணவர் அமைப்பு எனும் அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு தான் யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் முன்னோடி. 1879 இல் சீயோனின் காவற்கோபுரப் பாதைச் சமூகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக கோன்லி எனும் செல்வந்தர் இருந்தார். ரசல் இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரானார். இவர் தன் வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இவர் எழுத்துகள் 2 கோடி புத்தகங்களாக உலகெங்கும் பல்வேறு மொழியில் வழங்கப்பட்டன. காவற்கோபுரம் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படும் இதழையும் இவர் தொடங்கினார். காவற்கோபுரம் தவிர வேறு எந்த இதழையும் சீயோனின் காவற்கோபுர அமைப்பு வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டளைகளை தனது உயிலில் எழுதியிருந்தார். 1916 ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்தார்.
ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு
ரசலுக்குப் பின்னர் வேதாகம மாணவர் இயக்கத்தின் தலைவராக ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு என்பவர் தெரிவு செய்யப்பட்டர். இவரே 1931 ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் பெயரை ஏசாயா 43:10 ஐ தழுவி "யெகோவாவின் சாட்சிகள்" என மாற்றினார். நிர்வாக ரீதியிலான மாற்றங்களைச் செய்தார். ரசல் தனது உயிலில் காவற் கோபுரம் தவிர வேறு இதழ் வெளியிடக் கூடாது என்று சொல்லியிருந்த போதும் ரூதர்ஃபோர்டு விழித்தெழு! என்ற பெயரிலான இன்னொரு இதழையும் துவக்கினார். குறிப்பாக வேற்று மதத்தினர் மற்றும் வேற்றுச் சபையினருக்கு வழங்க இந்த இதழை வழங்கினர். இந்த இதழில் சமயம் மட்டுமின்றி உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெறும் வகையில் செய்தார்.
பழக்க வழக்கங்கள்
இவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு விவிலிய மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளனர். இம்மொழிபெயர்ப்பு கடவுளுடைய பெயராகிய "யெகோவா"வை "கர்த்தர்" எனும் இடைக்கால செருகலுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தி உள்ளது. இம்மொழிபெயர்ப்பு மூல நூலோடு ஒத்திருக்கவில்லை என பல இறையியலாளர்களும் விவிலிய அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.[1][2][3][4][5]
உலகின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு "இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுவதே" என்பது யெகோவாவின் சாட்சிகளின் மைய நம்பிக்கை ஆகும். இறைக் கல்வியே முக்கியமானது எனவும், பாடசாலைக் கல்வியை ஆதரிக்காத போக்கும் இந்த மதத்தினரிடையே காணப்படுகின்றன.[சான்று தேவை] உலகின் பல நாடுகள் இந்த சமயத்தினரின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]
யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற கிறித்தவ மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. தங்கள் பிறந்தநாளைக் கூட அவர்கள் கொண்டாட மாட்டார்கள்.[சான்று தேவை] அது மட்டுமன்றி உயிருக்குப் போராடும் நிலையில் கூட இவர்கள் இரத்த தானத்தை ஏற்பதில்லை; நாடுகளின் இராணுவத்தில் சேருவதில்லை; நாட்டுக் கொடிகளை வணங்குவதில்லை; நாட்டுப்பண் பாடுவதுமில்லை. இது போன்ற செயல்களால் இவர்கள் பல நாட்டு நீதிமன்றங்களோடு வழக்காட வேண்டியுள்ளது.[சான்று தேவை]ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் முதல் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் இவர்களின் இக்கொள்கைகளால் ஏற்பட்டது என்பது குறிக்கத்தக்கது.[சான்று தேவை]
பிரசங்கம்
இயேசு கட்டளையிட்டுச் சொன்னபடி (லூக்கா 9:2, மத்தேயு 10: 5-32) இவர்கள் வீடு வீடாக மக்களைச் சந்திந்து தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிப்பதில் முக்கிய ஈடுபாடு காட்டுகின்றனர் .[6][7] ஆர்வமுடையோருக்கு இலவசமாக விவிலிய படிப்பு நடத்துகின்றனர். தங்கள் வெளியீடுகளையும் இலவசமாக வழங்குகின்றனர்.[8] களப்பணி செய்வது கட்டாயமான ஒன்றாகும். திருமுழுக்கு எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் தோறும் கட்டாயமாக “களப்பணி அறிக்கை” ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.[9][10] அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறுவோர் “ஒழுங்கற்றவர்” என அழைக்கப்படுவர். அவர்களுக்கு மூத்தோர் அறிவுரை வழங்கப்படும்.[11][12] தொடரந்து ஆறு மாதங்களுக்கு அறிக்கை வழங்காதோர் “செயலிழந்தவர்” என அழைக்கப்படுவர்.[13]
இந்திய உச்சநீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சி வழக்கு
1985 ஆம் ஆண்டு சூலை இம்மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இந்திய நாட்டுப் பண்ணைப் பாட மறுத்ததால் கேரள மாநிலப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் தந்தை வி.ஜே. இம்மானுவேல் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிட்டார். 1986, ஆகஸ்டு 11 ஆம் நாளில் உச்ச நீதிமன்றம் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். அத்தீர்ப்பில் இருந்த சில வரிகள்:
'நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. நமது தத்துவம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையைக் கற்பிக்கிறது. நாம் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்'