எயிட்சு

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்[1][2],[3]

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி (எயிட்சு)
உலகளவிலான எய்ட்சு நோய் எதிர்ப்பைக் குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B24.
ஐ.சி.டி.-9042
நோய்களின் தரவுத்தளம்5938
மெரிசின்பிளசு000594
ஈமெடிசின்emerg/253
பேசியண்ட் ஐ.இஎயிட்சு
ம.பா.தD000163

இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்ற நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது[4][5]

இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும்.

எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும்[6]. 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது[7]. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சகாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தைச் சிதைத்திருக்கிறது[7].

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது[8],[9]. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது[10].

எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை[11]. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்கங்கள்
எயிட்சு  : பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் அறிகுறிகள்
எச்.ஐ.வி.  : மனிதனின் எதிர்ப்பாற்றல் குறைப்பு வைரசு
CD4+  : "சி.டி.4"+ "டி" உதவிச்செல்கள்
CCR5  : கீமோகைன் [[[கார்பன்]]-கார்பன் வடிவ அமைப்பு] ஏற்பி-5
CDC  : நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்
WHO  : உலக சுகாதார அமைப்பு
PCP  : நியுமோசிஸ்டிஸ் நுரையீரல் அழற்சி (நிமோனியா)
TB  : காசநோய்
MTCT  : தாயிலிருந்து பிள்ளைக்குப் பரவுதல்
HAART  : மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை
STI/STD  : பால்வினை நோய்கள்

அறிகுறிகள்

சிகிச்சைக்குட்படாத எச்.ஐ.வி. நோய்த்தொற்றின் நச்சுயிரி சுமைக்கும், "சி.டி.4" + உதவிச்செல்கள்களின் எண்ணிக்கைக்குமான தொடர்பு மற்றும் சராசரி சிகிச்சைக்குட்படாத காலத்தில் காணப்படும் எச்.ஐ.வி. எண்ணிக்கைக்கான பொது வரைபடம்;ஒவ்வொரு நோயாளியின் நோய்க்காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது.

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்சு நோயின் அறிகுறிகள் ஆகும்.பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும்.

வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்சு கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது[12]. எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.

எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும்[13][14]. அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

எயிட்சு நோயின் பிரதான அறிகுறிகள்

சுவாச நோய் தாக்கம்

நியுமோசிஸ்டிஸ் நிமோனியாவின் (பிசிபி) எக்ஸ்-ரே. இருபக்க நுரையீரல்களிலும் பிசிபி-யின் குணாதிசயமான அதிகரிக்கப்பட்ட வெள்ளை நிற ஒளிபுகா நிலை காணப்படுகிறது.

நியுமோசிஸ்டிஸ் நிமோனியா (முன்பு நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியா என அழைக்கப்பட்ட காரணத்தால் பிசிபி எனச் சுருக்கி வழங்கப்பட்டு இப்பொழுதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது). இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. "சி.டி.4" எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் இருநூறு செல்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்சு நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்சின் முதல அறிகுறியாக உள்ளது.

காசநோய் எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி - யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது. இருப்பினும், பன்மருந்துஎதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது.

காசநோய் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்துவருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் ("சி.டி.4" எண்ணிக்கை > 300 செல்கள்/மைக்ரோ லிட்டர்), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும்பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கின்றது[15].

இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள்

உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்) கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் (ஹெர்பெஸ் சிம்ப்லக்ஸ்-1 அல்லது சைட்டோமேகல்லோ வைரசு )ஏற்படும் நோய்த்தாக்கம். அரிய நிகழ்வாக இது மைகோபாக்டீரியாவாலும் ஏற்படும்[16].

எச்.ஐ.வி. நோய் தாக்கத்தில் ஏற்படும் நாள்பட்ட வயிற்றுபோக்கிற்கான காரணங்கள் பலவாகும். அவைகளில் பொதுவாக பாக்டீரியாவால் (சால்மனெல்லா ,ஷிகல்லா , லிஸ்டீரியா அல்லது காம்பைலோபேக்டர் ) மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் அறிய சந்தர்ப்ப நோய்தாக்கங்களான கிரிப்டோஸ்போரிடியாஸிஸ், [[மைக்ரோஸ்போரிடியாஸிஸ்|மைக்ரோஸ்போரிடியாஸிஸ்{ /6}, மைகோபாக்டீரியம் ஏவியம் கூட்டு (எம் எ சி ) மற்றும் வைரசு[17] (ஆஸ்ட்ரோ வைரசு, அடினோ வைரசு, ரோட்டா வைரசு மற்றும் சைட்டோமேகல்லோ வைரசு) சைட்டோமேகல்லோ வைரசு பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது .

சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது.எதிருயிரிணியைப் பயன்படுத்தி கிளாஸ்ற்றிடியம் டிபிசில் போன்ற பாக்டீரியாக்கள் விளைவிக்கும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நினைக்கும் போதும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கானது உணவு பாதையின் சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை இளைக்க வைக்கும் தன்மைக்கு துணைபோவதாய் இருக்கிறது[18].

நரம்பு மண்டல மற்றும் மனநல தொடர்பு

இந்நோயின்போது நாளடைவில் பலகீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை நுண்ணியிரிகள் தாக்குவதின் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளைநரம்பு விளைவுகள் ஏற்படலாம்.

ஒருவகை ஓரணு ஒட்டுண்ணி நோய் (டாக்சாப்பிளாசுமம்) ஒரு செல் ஒட்டுயிரியான டாக்சோபிளாசுமா காண்ட்டையால் ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்சோபிளாசுமா மூளையழற்சியையும், கண்கள் மற்றும் நுரையீரலின் வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது[19]. கிரிப்டோகாக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்சு எனும் காளான் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்துள்ள மூளை உறையைத் தொற்றும்போது ஏற்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம். நோயாளிகளுக்கு வலிப்பு மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணமும் ஏற்படலாம்.

தீவிர பல்குவிய வெள்ளையணு மூளையழற்சி (PML) என்பது மூளையின் நரம்பணுவால்களை சூழ்ந்துள்ள மையலின் நரம்புறையை படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் [[நரம்புறை சிதைவு நோயாகும். இந்த நோயானது 70 சதவிகித மக்களிடையே உட்புதை நிலையையிலுள்ள நச்சுயிரியான ஜே சி வைரசால் நோயெதிர்ப்பு சக்தியற்ற எயிட்சு நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது[20].

எயிட்சு மறதிநோய் தொகுப்பு என்பது எச் ஐ வி நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு எச் ஐ வி தொற்றிய மூளை, பெருவிழுங்கிகள் மற்றும் மைக்ரோகிளையாவின் நோயெதிர்ப்புத்திறன் ஊக்கத்தால் கிளர்ந்தெழும் ஒரு வளர்சிதைமாற்ற மூளையழற்சி நோயாகும். இவ்விதமான செல்கள் எச் ஐ வி யால் வளமாக தொற்றப்பட்டு நோயாளினதும் நச்சுயிரினதுமான நரம்புநச்சை சுரக்கின்றன[21]. பிரத்தியேக நரம்புக் கோளாறுகள் எச் ஐ வி நோய் தொற்றி பல வருடங்கள் களித்து வெளிவந்து அறிவு, நடவடிக்கை மற்றும் வெளி நோக்கு நரம்பியக்கத் திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இவை குறைந்த "சி.டி.4" + "டி" செல் அளவுகளையும் இரத்தத்தில் அதிக நச்சுயிரி சுமையையும் கொண்டிருக்கும்.

இதன் பரவல் மேற்கத்திய நாடுகளில் [22] 10 -20 சதவிகிதமும் இந்தியாவில் 1 -2 சதவிகிதமாகும்[23],[24]. இந்த வித்தியாசம் எச் ஐ வி யின் உள்வகைகளைப் பொருத்ததாகும். எச் ஐ வி நோயாளிகளுக்கு பிந்தைய காலத்தில் எயிட்சுடன் தொடர்புடைய பித்து பிடிக்கக் கூடும். இது நரம்புகளின் அதிர்வுகடத்தும் பண்பின் இருமுனைக் கோளாறினால் ஏற்படும் பித்து நிகழ்வுகளைவிட அதிகமான எரிச்சலும், அறியும்சக்தி குறைபாடும், குறைவான வளமான மனநிலையையும் கொண்டிருக்கும். எச் ஐ வி யால் ஏற்படும் பித்து நாள்பட்டதாகவும் இருக்கும். பல்நோக்கு மருந்துகளாலான சிகிச்சையினால் இக்கூட்டு அறிகுறிகள் குறைவாகவே தென்படுகிறது.

கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்

காபோசியின் சதைப்புற்று

எச் ஐ வி நோயாளிகள் பலவிதமான புற்று நோய்களுக்கான வாய்ப்பை பெருமளவு கூட்டியிருக்கின்றனர். இது பிரதானமாக புற்றுநோய் திறனுள்ள டி என் ஏ வைரசு களான எப்ஸ்டீன்-பார் வைரசு (EBV), காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) மற்றும் மனித பாப்பில்லோமா நச்சுயிரி போன்றவைகளின் சகத்தொற்றால் ஏற்படுகிறது[25][26].

காபோசியின் சதைப்புற்று எச் ஐ வி நோயாளிகளில் சாதாரணமாக காணப்படும் கட்டியாகும். இந்த கட்டி 1981 இல் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தென்பட்டதே எயிட்சு பரவலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். காமா ஹெர்பிசு வகையைச் சேர்ந்த காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) எனும் நச்சுயிரியால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் ஊதா முடிச்சுகளாக தோலில் மட்டுமல்லாது பிற உறுப்புக்களான வாய், உணவு குழாய் மற்றும் நுரையீரலையும் தாக்க வல்லது.

உயர் நிலை பி செல் நிணத்திசுப் புற்று க்களான பர்கிட்டின் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, பர்கிட்ஸ் லைக் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, டிஃப்யூஸ் லார்ஜ் பி -செல் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, மற்றும் பிரைமரி சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் நிணநீர்ச் சுரப்பிப் புற்று ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன.இத்தகைய புற்றுக்கள் மோசமான முன்னறிவித்தலை அறிவிக்கின்றன. சில நிலைகளில் இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் எயிட்ஸினை விவரிப்பதாக அமைந்துள்ளன. எப்ஸ்டீன்-பார் வைரசு(EBV) இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் பலவற்றை உருவாக்குகிறது.

எச் ஐ வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை முகப்பு புற்றுநோயும் எயிட்ஸினை விவரிப்பதாக உள்ளது. இது மனித பேபில்லோமா வைரசினால் (HPV) ஏற்படுத்தப்படுகிறது[27].

மேலே கூறப்பட்ட எயிட்ஸினை விவரிக்கும் கட்டிகளைத்தவிர எச் ஐ வி நோயாளிகள் ஹாட்ஜ்கின்'சு நோய் மற்றும் மல துவார மற்றும் ஆசன வாய் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் அதிகம் காணப்படுவதில்லை. எயிட்சு நோய் சிகிச்சைக்கு மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அதிகம் உபயோகிக்கப்படும் இடங்களில் எயிட்ஸோடு தொடர்புடைய ஆபத்து வாய்ந்த புற்றுக்களின் தென்படுதல் குறைகிறது. ஆனாலும் எச் ஐ வி நோயாளிகள் மரணத்திற்கு ஆபத்தான புற்றுக்களே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது [62].

ஏனைய சந்தர்ப்பவாத தொற்றுக்கள்

பால்வினை (எயிட்சு) நோயாளிகளிடம் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல், எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளைக் காணலாம். இது மைகொபேக்டீரியம் ஏவியம்,மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே மற்றும் சைடோமெகலோவைரசு(CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், சி எம் வி விழித்திரை அழற்சியையும் உருவாக்கி பார்வையின்மையை ஏற்படுத்த வல்லது.

நோய் பரவியுள்ள தென் கிழக்கு ஆசியாவில் பெனிசிலியம் மார்ணபீ தோற்றுவிக்கும் பெனிசிலினோசிசு நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் கிரிப்டோகாகோசிசு க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது[28].

காரணம்

எச் ஐ வி -1 இன் ஒளி நுண்ணொளி எலக்ட்ரான் நுண் வரைபடம், பச்சை நிறத்துடன், வளர்க்கப்பட்ட நிண அணுவிலிருந்து வெளிப்படுகிறது.

எச் ஐ வி நோய்த்தொற்றின் மிகக் கடுமையான உந்துதலில் விளைவதே எயிட்சு நோயாகும். எச் ஐ வி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய உறுப்புகளான டி செல்களின் உட்பிரிவான சி.டி 4 + "டி" செல்கள், பெருவிழுங்கிகள் மற்றும் நரம்பு இழை செல்களைத் தொற்றும் ஒரு மீள்ஊட்டு நச்சுயிரியாகும் (Retrovirus). அது சி.டி 4+ "டி" செல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழிக்கிறது[29].

இரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு, இருநூறு செல்களே இருக்கும் அளவிற்கு சி.டி4+ "டி" செல்களின் அளவு எச் ஐ வி யால் அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் சி.டி4+ "டி" செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப் பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும், அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும், இறுதியாக எயிட்சாகவும் முன்னேறுகிறது [69].

மீள்ஊட்டு நச்சுயிரி எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்சாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை ஒன்பது முதல் பத்து வருடங்களாகவும், எயிட்சு உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது [71]. எனினும், மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது.

நோய் வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து உடலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும்[30],[31]. வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோரில் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர்.

மருத்துவவசதியின்மை மற்றும் காசநோய் போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன[32][32][33],[34]. நோய்த்தாக்கிய மனிதனின் மரபணு பாரம்பரியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர்[35]. எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோய்முற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது[36],[37][38].

உடலுறவின் வாயிலாக பரவுதல்

ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது வாயின் உட்பகுதியில் உள்ள படர்சவ்வு படலம் தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது. எனினும், செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை[39],[40]. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் ஆணுறை பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது[41].

ஏனைய பாலியல் நோய்த்தொற்றுக்கள் (STI) பிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை ஏற்படுத்தி தோல் மேலணியை சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் நிணத்திசுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மேகவெட்டை நோய், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன[42].

எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் அடையாளக் குறியீட்டைப் பொறுத்தும், நோயில்லாதவரின் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் நச்சுயிரி சுமை கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் விந்து மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை. எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 சதவிகிதம் அதிகரிக்கும்[42][43]. இயக்குநீர் மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் நுண்ணுயிரிச் சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோய்த்தொற்றுக்களாகும் வாய்ப்பையும், பால்வினை நோய்களுக்குள்ளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர்[44],[45]. எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு ஆபத்தான மாதிரிகளால் தொற்றக்கூடும்.

ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினமாகும். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்புகளின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோய்ற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது. ஒருவர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது[46]. ஆணோடு பெண் வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களைவிட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் குறட்டை நோய் சிஸ்டோஸோமியாசிஸ் எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன[47][48].

இரத்தத்தின் நோய்க் காரணிகளால் பாதிக்கப்படும்பொழுது

போதைமருந்து உட்கொள்ளுதலுடன் கூடிய எயிட்சு ஆபத்தை விவரிக்கும் 1989 நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய சுவரொட்டி

இந்த நோய்த் தொற்றல் வழி பெரும்பாலும் சிரை வழியாக போதைமருந்து போடுபவர்களுக்கும், இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த பொருட்கள் தானம் பெறுபவர்களுக்கும் பொருத்தமானது. எச் ஐ வி தொற்றப்பட்ட இரத்தத்தால் கிருமி தாக்கப்பட்ட ஊசிகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பலமுறை பயன்படுத்துதல் எச் ஐ வி பரப்ப முக்கியமான காரணமாய் இருக்கிறது.

வட அமெரிக்கா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் ஊசிகளைப் பகிர்தலே மூன்றில் ஒரு பங்கு எச் ஐ வி நோய்த் தொற்றுக்கு காரணமாகும். எச் ஐ வி நோயாளி மீது பயன்படுத்தப்பட்ட ஊசியை ஒரே முறை பயன்படுத்துவதால் 150 பேரில் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (மேலே அட்டவணை பார்க்க) எச் ஐ வி எதிர் மருந்துகள் மூலம் தொடர்புக்கு பிந்தைய நோய்க்கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நோய் தொற்றும் அபாயத்தை மேலும் குறைக்கலாம்[49].

பச்சை குத்துதல் மற்றும் துளையிடுதல் ஆகியன மேற்கொள்ளுபவர்களுக்கும் இதே வழிமுறை மூலம் நோய்த்தொற்று நிகழலாம். சப்-சகாரன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் திகழும் மருத்துவ வசதிக் குறைபாடு மற்றும் போதிய பயிற்சியின்மை போன்றவை இந்நாடுகள் உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக இல்லை.

ஏறத்தாழ இரண்டரை சதவிகிதம் எச் ஐ வி நோய்த்தொற்று பாதுகாப்பற்ற உடல்நலம் பேண பயன்படுத்தப்படும் ஊசிகளால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது[50]. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் அவை மக்கள் நல பணியாளர்கள் மூலம் எச் ஐ வி பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது[51].

வளர்ந்த நாடுகளில் இரத்ததானத்தின் மூலம் எச் ஐ வி பரவுதல் தரமான நன்கொடையாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் எச் ஐ வி நோய் பாதிப்பு ஆய்வின் மூலமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதில்லை எனவும் உலகளாவிய எச் ஐ வி நோய் பரவலில் ஐந்து சதவிகிதம் முதல் பத்து சதவிகிதம் இரத்ததானத்தின் மூலமும் இரத்தபொருட்கள் தானத்தின் மூலமுமே நடக்கிறது எனவும் உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது[52].

பிறப்பு சார்ந்த நோய் பரவுதல்

தாயிடமிருந்து குழந்தைக்கு,குழந்தை கருப்பையில் இருக்கும்போதே கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களிலும் பிரசவத்தின் போதும் நோய்த் தொற்றல் நடக்கிறது. சிகிச்சை அளிக்காத பொழுது கர்ப்பகாலத்தின் போதோ, பிரசவ வலியின் போதோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் 25 சதவிகிதமாகும். ஆனால் தாய் ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சைக்கு உட்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய்பரவுதல் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே.[53] நோய்த்தொற்றும் அபாயம் குழந்தை பெரும் பொழுது தாயின் வைரசு சுமையைப் பொறுத்துள்ளது. வைரசு சுமை அதிகமாக இருப்பின் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கும். தாய்ப்பாலூட்டுதலும் நோய்ப் பரவலை நான்கு சதவிகிதம் அதிகரிக்கிறது[54].

தவறான நம்பிக்கைகள்

எச் ஐ வி/எயிட்சை சுற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் சாதாரண தொடுதலின் மூலம் எயிட்சு பரவும், கன்னியுடன் கொள்ளும் உடலுறவு எயிட்சை குணமாக்க வல்லது மற்றும் எச் ஐ வி ஓரினச் சேர்க்கையாளர்களையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையுமே தாக்கும் என்ற மூன்றும் முக்கியமானவை. ஆசனவாய் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே உடலுறவு கொள்வது எயிட்சுக்கு வழிவகுக்கும் என்பதும், பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை பற்றிய திறந்த கலந்துரையாடல் ஓரினச்சேர்க்கையையும் எயட்சையும் பெருக்கும் என்பன இது போன்ற ஏனைய தவறான எண்ணங்களாகும் [121].

உடல் இயக்க நோய்க்குறி இயல்

எயிட்ஸின் உடல் இயக்க நோய்க்குறியியல் ஏனைய கூட்டியங்களைப் போல மிக சிக்கலானது. [124] இறுதியில் எச் ஐ வி "சி.டி.4" + "டி" உதவி நிண அணுக்களை அழித்து எயிட்சை உருவாக்குகிறது. எயிட்சோ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி வாய்ப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு உருவாவதற்கு "டி" நிண அணுக்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். அவை இல்லாத பொழுது நோய்த் தொற்றுக்களை விரட்டவும் புற்று அணுக்களை அழிக்கவும் உடலால் இயலாது. "சி.டி.4" + "டி" செல் அழிவின் முறை தீவிர நோய்நிலையிலும் நாள்பட்ட நோய்நிலையிலும் மாறுபடுகிறது[55].

தீவிர நோய்நிலையில் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு, எச் ஐ வி யால் தூண்டப்பட்ட செல் அழிவு மற்றும் செல் நச்சு "டி" செல்களின் நோய்தொற்றிய செல்களைக் கொல்லும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நிகழ்கிறது. திட்டமிடப்பட்ட செல் மரணத்தின் மூலமாகவும் இது நிகழலாம். நாள்பட்ட நோய் நிலையில், உடலளாவிய நோயெதிர்ப்பு தூண்டுதலின் விளைவுகளினால், புது "டி" செல்கள் தயாரிக்கும் வல்லமையை நோயெதிர்ப்பு மண்டலம் படிப்படியாக இழந்து விடும் தன்மையே "சி.டி.4" + "டி" செல்கள் குறைவதற்கு காரணமாய் இருக்கிறது.

எயிட்ஸின் பிரதான குணாதிசயமான நோயெதிர்ப்புக் குறைபாட்டின் அறிகுறிகள், மனிதரை நோய்த்தொற்றி பல வருடங்கள் வரை புலப்படாமல் போனாலும் நிண அணுக்களின் புகலிடமான குடற்பகுதி மேல்சவ்வு போன்ற பகுதிகளில், "சி.டி.4" +"டி" செல்களின் பெரும்பான்மை இழப்பு, நோய்த்தொற்றின் முதல் வாரங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. [128]குறிப்பாக குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளில் "சி.டி.4" + "டி" செல்கள் அழிக்கப்பட காரணம் ,பெரும்பான்மையான "சி.டி.4" + "டி" செல்கள் CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும். இரத்தத்தில் இருக்கும் "சி.டி.4" + "டி" செல்களோ மிகக் குறைவான CCR5 சக ஏர்புணர்விகளையே கொண்டிருக்கும்.[130]

தீவிர நோய் நிலையில் எச் ஐ வி CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும் "சி.டி.4" + செல்களை, தேடிப் பிடித்து அழிக்கிறது. ஒரு பலமான நோயெதிர்ப்பு சக்தி எழும்பி, படிப்படியாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நோயுட்புதை நிலையைத் தோற்றுவிக்கிறது. ஆரம்ப நோய்நிலையில், உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிலைத்திருப்பினும், குடற்பகுதி மேல்சவ்வு "சி.டி.4" + "டி" செல்கள் நோய்க்கிருமித்தாக்கம் முழுவதும் அழிந்தவண்ணமே இருக்கும்.

விடாமல் நடந்துகொண்டிருக்கும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கம், நாள்பட்ட நோய் நிலை முழுவதிலும் ஒரு உடலளாவிய நோய் எதிர்ப்பு தூண்டுநிலையைத் தோற்றுவிக்கிறது.[56] நோய் எதிரணுக்களைத் தூண்டி அழற்சி உண்டுபண்ணும் சைடோகைன்களை வெளிவிடும் இத்தகைய நோயெதிர்ப்பு தூண்டுநிலை, எச் ஐ வி மரபணு பொருட்களாலும், எச் ஐ வி பல்பிரிவாக்கத்திற்கு எதிராக எழும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கத்தாலும் ஏற்படுகிறது.தீவிர நோய்நிலையில் நிலவும் குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளின் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு ஏற்படுத்தும், உட்சவ்வு வேலி நோயெதிர்ப்பு கண்காணிப்பு ஒழுங்குச்சேதம் மற்றுமொரு காரணமாகும்.[57]

மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குடலின் இயற்கையான நுண்ணுயிரிகளுக்கு கையளித்து விடுகிறது. ஆரோக்கியமான நபர்களிலோ இந்நுண்ணுயிரிகள் உட்சவ்வு நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோயெதிர்ப்புத் தூண்டுதலால் ஏற்படும், "டி" செல் தூண்டப்படுதலும் அவற்றின் பெருக்கமும் அவற்றை எச் ஐ வி நோய்க் கிருமியின் புதிய இலக்காக்குகின்றன.இரத்தத்தின் "சி.டி.4" + "டி" செல்களில் 0.01-0.10 சதவிகிதம் அளவே நோய்த்தொற்றுக்காளாவதால், "சி.டி.4" + "டி" செல்களின் ஒட்டுமொத்த அழிவிற்கு, எச் ஐ வி யின் நேரடி தாக்குதல் மட்டுமே காரணமாக இருத்தல் இயலாது.

நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் திட்டமிடப்பட்ட செல் மரணத்திற்கு ஆளாவதே "சி.டி.4" + "டி" செல் அழிவிற்கு முக்கிய காரணமாகும். இழந்த "டி" செல்களை ஈடுகட்ட வெளிக்கணையமானது புது "டி" செல்களை விடாமல் தயாரித்துக் கொண்டிருந்தாலும், வெளிக்கணைய அணுக்கள் மீதான எச் ஐ வி யின் நேரடி தாக்குதல், வெளிக்கணையத்தின் இழப்பு மீட்புத் தன்மையைப் படிப்படியாக அழித்து விடுகிறது. எனவே நாளடைவில் போதுமான நோயெதிர்ப்புசக்தினிலைக்குத் தேவையான குறைந்தபட்ச "சி.டி.4" +"டி" செல்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, எயிட்ஸுக்கு வழிவகுக்கிறது.

பாதிக்கப்பட்ட செல்கள்

எச் ஐ வி நச்சுயிரி எந்த வழியில் நுழைந்தாலும் கீழ்கண்ட செல்களை முதலில் தாக்குகிறது.[58]

  • நிண நாள மண்டலம் :
  • சில நாள உட்சவ்வு செல்கள்
  • மைய நரம்பு மண்டலம் :
    • நரம்புமண்டலத்தின் மைக்ரோகிளையா
    • ஆஸ்ட்ரோசைட்டுகள் - நரம்பு நார்த்திசுக்கள்
    • ஒலிகோடென்றோசைட்டுகள்
    • நரம்பு செல்கள் - சைடோகைன்கள் மற்றும் ஜி.பி.-120 யின் செயல் மூலம் மறைமுகமாக

நோயின் விளைவு

இந்நச்சுயிரிக்கு உயிரணு தாக்கும் பண்பு உள்ளது. ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இது நீண்ட காலங்கள் செல்களில் செயலற்று இருக்கும் வல்லமையையும் பெற்றுள்ளது. இந்த பண்பு "சி.டி."4-ஜி.பி. 120 இடையே நடக்கும் பின்னிய செயல்விளைவால் நிகழ்கிறதென எண்ணப்படுகிறது[58].

  • எச் ஐ வி வைரசின் மிக முக்கிய விளைவு, "டி"-உதவி செல்களின் வீழ்ச்சியும் அழிவும் ஆகும். செல்லானது கொல்லப்படுகிறது அல்லது செயல்பட முடியாத அளவிற்கு சிதைக்கப்படுகிறது. (இவை வெளிப்புரதங்களுக்கு சவாலாக இருப்பதில்லை). நோய்த்தொற்றிய "பி" செல்களாலும் எதிர்ப்பான்களை தயார் செய்ய இயல்வதில்லை. இவ்வாறாக நோயெதிர்ப்பு மண்டலம் வீழ்ச்சியடைந்து நோய்த்தொற்றுக்கள் மற்றும் புற்றுக்கட்டிகள் போன்ற பிரத்தியேக எயிட்சு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது (மேலே பார்க்க).
  • மைய நரம்பு மண்டலத்தின் செல்களில் ஏற்படும் நோய்த்தொற்று தீவிர கிருமிகளற்ற மூளை உறை அழற்சியையும், தீவிரக்குறைவான மூளை அழற்சியையும் வெற்றிட தண்டுக்கொழுப்பழற்சியையும் புற எல்லை நரம்பழற்சியையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது எயிட்சு நோய் புத்தி சுவாதீனமின்மையைத் (எயிட்சு பித்து) தோற்றுவிக்கிறது.
  • "சி.டி."4-ஜி.பி.120 இன் பின்னிய செயல்விளைவு (மேலே பார்க்க) சைடோமகேலோ வைரசு, கல்லீரல் அழற்சி வைரசு மற்றும் ஹெர்பிஸ்சிம்ப்ளெக்சு வைரசு போன்ற நச்சுயிரிகளுக்கு அனுமதியளிக்கும் காரணத்தால் செல் சிதைவு வலுப்பெறுகிறது.

மரபணு அடிப்படை

விரிவான விளக்கத்திற்கு கீழ் காண்பவற்றைக் காண்க:

  • எச் ஐ வி யின் அமைப்பும் மரபணுக் கோர்வையும்
  • எச் ஐ வி யின் பல்பிரிவாக்கச் சுழற்சி.
  • எச் ஐ வி யின் நகரும் விளைவு'

நோய் நிர்ணயம்

எச் ஐ வி யினால் தாக்கப்பட்ட மனிதர்களில் நோய் கண்டறிதல் சில நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 5,1981-லிருந்து எச் ஐ வி யின் நோய்த் தோன்று வழி ஆய்தல் மற்றும் நோய் அழிவு ஆய்தலைப் பற்றி, பேங்குய் வரையறை மற்றும் 1994 இன் உலக சுகாதார நிறுவனத்தின் விரிவான எயிட்சு நோய்க்கான வரையறை, போன்ற பல வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.ஆனாலும் இவ்வரையறைகள் நுட்பமற்றதாகவும் பிரத்யேகமற்றதாகவும் இருப்பதினால் நோயாளிகளை அவரவர் நோய்நிலைப்படி வகைப்படுத்துதல் இவற்றிற்கு தேவையற்றது. வளரும் நாடுகளில் நோய் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி ஆதாரக் கூறுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எச் ஐ வி தொற்று மற்றும் நோய்க்கான உலக சுகாதார நிறுவன வகைப்பாட்டு முறையும், வளர்ந்த நாடுகளில் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் நோய்ப்பகுப்பு முறையும் பின்பற்றப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு நோய் நிலை நிர்ணயம்

1990 இல் உலக சுகாதார நிறுவனம் இந்நோய்த் தொற்றுகளையும் நிலைகளையும் ஒன்றுபடுத்தி எச் ஐ வி-1 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வகைப்பாட்டு முறையை அளித்துள்ளது[59]. இது, செப்டம்பர் 2005 இல் மறுவரையறுக்கப்பட்டது. இந்நோய் நிலைகள் பெருமளவு ஆரோக்கியமான மனிதர்களில் எளிதாகக் குணப்படுத்தவல்ல சந்தர்ப்பவாத நோய்த் தொற்றுக்களேயாகும்.

  • நிலை I: எச் ஐ வி நோய்த் தொற்று அறிகுறிகளற்றதாக இருக்கிறது. இதை எயிட்சு என்று கூறமுடியாது.
  • நிலை II: இது தோல் மற்றும் உட்சவ்வு வெளிப்பாடுகளையும் திரும்பத் தோன்றும் மேல் சுவாச பாதையின் நோய்த் தொற்றுக்களையும் கொண்டிருக்கும்.
  • நிலை III: ஒரு மாதத்துக்கு மேலாக இருந்துகொண்டிருக்கும் காரணம் கூற இயலாத நாள்பட்ட வயிற்றுப்போக்கு, கடுமையான பாக்டீரியாக்களின் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காசநோயைக் கொண்டிருக்கும்.
  • நிலை IV: இது மூளையில் டாக்சோபிளாசுமோசிசையும், உணவுக் குழாய், மூச்சுக் குழாய், சிறு மூச்சுக் குழாய், நுரையீரல் போன்றவற்றில் கேண்டிடியாசிசு, காபோசியின் சதைப்புற்று ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்நோய்கள் எயிட்சின் அறிகுறிகளாகத் திகழ்பவை.

நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் வகைப்பாட்டியல் முறை

நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களால் எயிட்சைக் குறித்து இரு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது வரையறை, எயிட்சினை அதனுடன் சம்பந்தப்பட்ட நோய்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எச் ஐ வி யின் கண்டுபிடிப்பாளர்கள், அதற்கு அப்பெயரை இடுவதற்கு காரணமாய் இருந்த நோயானது நிணநீர்ச் சுரப்பி நோயாகும் [142][144]. 1993 இல் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எயிட்சின் வரையறையை "சி.டி.4" + "டி" செல்களை, ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் இருநூறுக்கும் குறைவாகவோ அல்லது அனைத்து நிண செல்களின் எண்ணிக்கையில் பதினான்கு சதவிகிதத்திற்கு குறைவாகவோ பெற்றிருக்கும் அனைத்து எச் ஐ வி நேர்மறை மக்களும் எயிட்சில் அடங்குவர் என எயிட்சின் வரையறையை விரிவாக்கம் செய்திருக்கிறது [146]. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான எயிட்சு நோயாளிகளுக்கு இந்த வரையறையையோ, அல்லது 1993 க்கு முந்தைய வரையறையையோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய எயிட்சு நோய் நிர்ணயம், சிகிச்சைக்கு பின்னர் இரத்தத்தின் 1 மைக்ரோ லிட்டருக்கு, "சி.டி.4" + "டி" செல்களின் எண்ணிக்கை இருநூறை விட அதிகரித்தாலும் அல்லது எயிட்சு இருப்பதைப் பறைசாற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் குணமாக்கப்பட்ட பின்னரும் நிலைத்து நிற்கிறது.

எச் ஐ வி சோதனை

எச் ஐ வி யால் தொற்றப்பட்டிருப்பதை பல மக்கள் அறியாதிருக்கின்றனர்.[60] உடலுறவு கொள்ளும் நகர மக்கள்தொகையில் 1சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே, எச் ஐ வி சோதனைக்கு உட்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் இந்த விகிதம் இன்னும் குறைவானதாகும். மேலும் நகர நல வாரியங்களுக்கு வருகை தரும் 0.5 சதவிகித கர்ப்பிணிப் பெண்களே அறிவுறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். கிராம நல வாரியங்களில் இது இன்னும் குறைவாயிருக்கிறது.[60]. எனவே மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வில் பயன்படுத்தப்படும் கொடையாளரின் இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் நோய் பாதிப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.

எச் ஐ வி சோதனைகள் பெரும்பாலும் தமனி இரத்தத்திலேயே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வகங்கள் எதிர் எச் ஐ வி எதிர்க் காரணிகளையும் (IgG மற்றும் IgM), எச் ஐ வி p24 நோய் எதிர்ப் புரதத்தையும் கண்டறியும், நான்காம் தலைமுறை நோய் பாதிப்பாய்வு சோதனைகளை பயன்படுத்துகின்றன. முந்தைய சோதனையில் எதிர்மறையென கருதப்பட்ட நோயாளியிடம் எச் ஐ வி எதிர்காரணியோ அல்லது எதிர்ப்புரதமோ கண்டறியும் பட்சத்தில் அது எயிட்சு நோய்க்கு சான்றாக எண்ணப்படும்.நோயாளிகளின் முதலாம் மாதிரி எயிட்சு நோய்க்கூறுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் அதனை உறுதிப்படுத்தும் படிக்கு அவர்கள் பிறிதொரு இரத்த மாதிரி மூலம் இரண்டாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

முதலாம் நோய்த்தொற்றிற்கும் அதற்கு எதிராகக் கண்டுபிடிக்கவல்ல நோய் எதிர்க்காரணிகள் உருவாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான ஜன்னல் காலம் ஊனீர் மாற்றமடைந்து நேர்மறைஎன சோதித்தறிவதற்கு 3–6 மாதங்கள் பிடிக்கும். ஜன்னல் காலத்தில் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் இந்நச்சுயிரியைக் கண்டுபிடித்தல் சாத்தியமான ஒன்றாகும்.இதன் மூலம் நான்காம் தலைமுறை EIA நோய்பாதிப்பாய்வைவிட விரைவாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் படுகிறதென ஆய்வுகள் கூறுகின்றன.

பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் நேர்மறையென அறிவிக்கப்பட்ட முடிவுகள் எதிர்க்காரணி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன[61].எச் ஐ வி யால் தொற்றப்பட்ட தாய்க்குப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் நடத்தப்படும் வழக்கமான எச் ஐ வி சோதனைகள் குழந்தையின் இரத்தத்தில் இருக்கும் தாய் வழி நோய் எதிர்க்காரணிகளால் நம்பத் தகுந்தவை அல்ல. எனவே குழந்தையின் நிண அணுக்களில் அமையப்பெற்றிருக்கும் எச் ஐ வி முன் நச்சுயிரியின் டி என் ஏ யை சோதித்தறியும் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலமே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க இயலும்[62].

தடுக்கும் முறைகள்

ஒவ்வொரு செயலுக்கும் ஏற்படக்கூடிய எச் ஐ வி நோய் தாக்கத்திற்கான அபாய நிர்ணயம்

எச் ஐ வி நோய்க்கு ஆளாகும் வழி[63]
நோய்த்தாக்கதிர்க்காளாகும் வழிநோய்த்தொற்றுமூலத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு10,000 முறைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நோய்த்தொற்றுக்கள்

இரத்த தானம்9,000[64]
பிரசவம்2,500[53]
போதை மருந்துகள் உட்செலுத்தப் பயன்படும் ஊசி-பகிர்மானம்67[65]
தோலில் செலுத்தப்படும் ஊசிமுனை குச்சிகள்30[66]
ஏற்கும் உடலுறவு*50[67][68]
செருகும் ஆசனவாய் வழி உடலுறவு*6.5[67][68]
ஏற்கும் ஆண்குறி-யோனி உடலுறவு*10[67][68][69]
செருகும் ஆண்குறி-யோனி உடலுறவு*5[67][68]
ஏற்கும் வாய்வழி உடலுறவு1[68]
செருகும் வாய்வழி உடலுறவு0.5[68]
* ஆணுறை பயன்படுத்தாத பொழுது
§ஆணுடனான வாய்வழி உடலுறவைக் குறிக்கிறது

எச் ஐ வி நோய் பரப்பலுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுபவை உடலுறவு, நோய்த்தொற்றிய உடல் திரவங்கள், மற்றும் திசுக்களுடனான தொடர்பு, பிறப்பு சார்ந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து கருவுக்கோ, குழந்தைக்கோ ஏற்படுவது. நோய்த் தொற்றப்பட்டவர்களின் உமிழ்நீர், கண்ணீர் மற்றும் சிறுநீரில் எச் ஐ வி கண்டுபிடிக்கப்படும் போதிலும் இத்தகைய சுரப்பு நீர்களின் மூலம் நோய்த்தொற்றியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. இவற்றின்மூலம் நோய்தொற்றும் அபாயம் மிக அற்பமானாதே.[70]

உடலுறவு

பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது. உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவதேயாகும்[71][72][73]. உடலுறவு நிகழ்வின் போது ஆணுறை அல்லது பெண்ணுறை உபயோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. முறையான ஆணுறை பயன்பாடு வெவ்வேறு பாலரிடையே எச் ஐ வி நோய்த்தொற்றும் அபாயத்தை ஏறத்தாழ எண்பது சதவிகிதம் குறைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும் ஆணுறைகளை சரியாக உபயோகப்படுத்தும்போது அதிக பலன் விளைவதாகத் தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன[74].

மரப்பால் வகை ஆணுறைகளை எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்துவதே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒரே சிறந்த தொழில்நுட்மாகும். பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய், பன்றிக் கொழுப்பு போன்ற எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிப்பது மரப்பாலை கரைத்து துளைத்தன்மையுடையதாக்குமாதலால் இவற்றை உபயோகிப்பது ஏற்றதல்ல என்று ஆணுறை தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். தேவைப்பட்டால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்கின்றனர்.

பாலியூரிதீன் ஆணுறைகளில் வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்[75].

பெண்ணுறை, ஆணுறைக்கு மாற்றாக, பெண்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவற்றோடு எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப் பொருட்களை உபயோகிக்கலாம். இவை ஆணுறைகளை விடப் பெரியதாகவும், விரைப்பான வளையம் போன்ற வாய்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இவை யோனிக்குள் செருகப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்ணுறைகள் ஒரு உள் வளையத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்வளையம் யோனிக்குள் பெண்ணுறை நழுவாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவ்வளையத்தை அழுத்தும்போது பெண்ணுறை யோனிக்குள் செருகக் கூடியதாய் இருக்கிறது. இருப்பினும் தற்சமயம் பெண்ணுறைகள் கிடைப்பதற்கரியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. முதல்நிலை ஆய்வுகள் பெண்ணுறைகள் போதிய அளவில் இருக்கும் பொழுது, ஒட்டுமொத்த பாதுகாப்பான உடலுறவு நிகழ்வுகள், பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகின்றன. இது பெண்ணுறையை முக்கியமான எயிட்சு தடுப்பு யுத்தியாக்குகிறது[76].

இருவரில் ஒருவரை இந்நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில், விடாது ஆணுறை உபயோகிக்கும் பொழுது, நோய்த்தாக்கம் இல்லாதவரை இந்நோய்த் தொற்றும் வாய்ப்பு வருடம் ஒரு சதவிகிதத்திற்குக் கீழ் என கணவன்-மனைவிகளிடம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன[77]. நோய்த்தடுப்பு யுத்திகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச் ஐ வி/எயிட்சு பற்றிய அறிவைப் பெற்றிருக்கும் போதிலும், தாங்கள் எச் ஐ வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் என ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரவல் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கன்றன[78][79].

ஆண் விருத்தசேதனம் ஈரின மனிதர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன[80]. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, கலாச்சார மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் தங்கள் சேதப்படத்தக்க தன்மையை உணராது பாதுகாபற்ற உடலுறவு நடவடிக்கைகளில் இறங்குவது விருத்தசேதனம் செய்ததால் கிடைக்கப்பெற்ற தற்காப்பை இல்லாததாக்கிவிடும் என சில வல்லுனர்கள் கருதுகின்றனர்[81]. எனினும், ஒரு சுற்றுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சோதனை வயது வந்த ஆண்களின் விருத்தசேதனமானது எச் ஐ வி அபாயத்தை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்று கூறுகிறது[82].

நோய்பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு

நல ஊழியர்கள் கிருமி பாதித்த இரத்தத்துடனான தொடர்பைக் குறைக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எச் ஐ வி க்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவல்லது.கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்புக் கண் அணிகள் மற்றும் மூடிகள், அங்கிகள் அல்லது மேலாடைகள் போன்றவை தோல் அல்லது படர்சவ்வுப் படலத்திற்கு இரத்தத்தின் நோய்க்காரணிகளுடனான நேரடி தொடர்பை ரத்து செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். கிருமிபாதித்த இரத்தத்துடனோ அல்லது உடல் திரவங்களுடனோ ஏற்பட்ட தொடர்புக்குப் பின்னர் தோலை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நோய்த்தொற்று நிகழும் வாய்ப்பைக் குறைக்கவல்லது. இறுதியாக ஊசிகள், அறுவை கிழி கத்திகள், கண்ணாடிகள் போன்றவைகளை, கிருமிபாதித்தவைகளால் ஏற்படும் ஊசிகுத்து காயங்கள் நிகழாவண்ணம் கவனமாக நீக்கி விடுதல் அவசியமானதாகும்.[83] எச் ஐ வி நோய்ப்பரவல் பெரும்பாலும் சிரை வழி மருந்து செலுத்துவதன் மூலம் ஏற்படுவதால் வளர்ந்த நாடுகளில் நடத்தப்பெறும், தீங்கு குறைப்பு யுத்திகளான, ஊசி பரிமாற்ற நிகழ்ச்சி போன்றவை தவறான மருந்து பிரயோகத்தினால் விளையும் நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகின்றன.[84][85]

தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல்

ஏற்றுக்கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக்கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான, மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் சிசுவிற்குத் தாய்ப்பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறு இயலாதப்பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்திவிடுதலும் சிறந்தது[86]. தங்களது சொந்த குழந்தைகளல்லாத அந்நிய குழந்தைகளுக்கும் பெண்கள் பாலூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது; பார்க்க செவிலித்தாய்

சிகிச்சை

அபாகாவிர் – தலைகீஷ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருளின் நியுகிளியோசைட் ஒத்த அமைப்பு செயலி (NARTI or NRTI)
அபாகாவிர் இன் வேதியியல் அமைப்பு

எச் ஐ வி அல்லது எயிட்ஸுக்கான தடுப்பூசியோ அல்லது தீர்வோ தற்சமயம் இல்லை. வைரஸுடனானத் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் அது இயலாத பட்சத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புக்குப் பின்னர் தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)என்றழைக்கப்படும் ரெட்ரோவைரல் எதிர்மருந்து சிகிச்சைக்கு உட்படுவதன் மூலமுமே இந்நோயைப் பரப்புதலைக் கட்டுப்படுத்த முடியும். [215] தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)க்கு மிக அத்தியாவசியமான நான்கு வார வைத்திய கால அட்டவணை உள்ளது. விரும்பத்தகாத பக்க விளைவுகளான வயிற்றுப்போக்கு, தேக அசௌகரியம், வாந்தி எடுக்கவேண்டுமென்ற உணர்வு மற்றும் களைப்பு ஆகியனவற்றை இது ஏற்படுத்தவல்லது[87].

வைரசுக்கெதிரான சிகிச்சை

எச் ஐ வி நோய்க்கான தற்போதைய வைத்தியம் அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து அல்லது மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைக் கொண்டது.[88] புரத நொதி வினைத் தடுப்புப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் 1996 ஆம் ஆண்டு அறிமுகத்திற்குப் பிறகு, இது பல எச் ஐ வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது.[11] தற்போதைய அனுகூலமான மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் தேர்வுகள் குறைந்தது மூன்று மருந்துகளை உள்ளடக்கிய, இரண்டு வித ரெட்ரோ வைரல் எதிர்மருந்துகளின் சேர்வுகளைக் கொண்டிருக்கும். இது காக்டெயில்கள் (கலப்பு பானங்கள்)என்று குறிக்கப்படுகிறது.பிரத்தியேக மருத்துவ நியமங்கள், இரு நியுக்ளியோசைடு ஒத்தஅமைப்புச்செயலி தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையும் (NARTI அல்லது NRTI) மற்றும் புரத நொதி எதிர்வினைப் பொருட்களையோ அல்லது நியுக்ளியோசைடு அல்லாத தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையோ கொண்டிருக்கும். எச் ஐ வி நோயின் வளர்ச்சிப் போக்கு வயது வந்தவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாலும்,குறிப்பாக இளம் சிசுக்களுக்கு ஆய்வக சோதனைக் குறியீடுகள் நம்பத்தகுந்தவையாயில்லாததாலும், சிகிச்சை பரிந்துரைகள் வயதுக்கு வந்தவர்களை விட குழந்தைகளுக்கு மிக வன்மையாக உள்ளன.[89] மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் மருந்து இருப்பில் இருக்கும் வளர்ந்த நாடுகளில்,நச்சுயிரி சுமை, CD 4 இன் சரிவு, மற்றும் நோயாளியின் ஆயத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தொடக்க சிகிச்சையைப் பரிந்துரைக்கின்றனர்.[90]

மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நோய் சிக்கல்களைக் குறைப்பது இரத்தத்தின் எச் ஐ வி அளவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குறைப்பது. ஆனால் இது எச் ஐ வி யை குணமாக்கவோ சிகிச்சையை நிறுத்தியவுடன் இரத்தத்தில்ஹார்ட் எதிர்ப்பு சக்தியுள்ள எச் ஐ வி அளவு அதிகமாவதைத் தடுக்கவோ இயலாததாய் இருக்கிறது.[91][92] மேலும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பயன்படுத்தி எச் ஐ வி யிலிருந்து விடுபடுவதற்கு ஒருவருக்கு அவரது வாழ்நாள் காலமே போதுவதில்லை[93]. இருந்தும், பல எச் ஐ வி நோயாளிகள் தங்கள் பொதுவான உடல்நலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து எச் ஐ வி யின் இறப்பு விகிதமும், நோயுற்ற விகிதமும் சரிவதற்குக் காரணமாயிருந்திருக்கின்றனர்.[94][95][96] மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை இல்லாத பொழுது எச் ஐ வி நோய்த்தாக்கம் எயிட்சு ஆக வளர்ச்சியடைவதற்கு ஒன்பது முதல் பத்து வருடங்கள் கால இடைநிலையும் எயிட்சு ஆக மாறியபிறகு உயிர் வாழும் காலத்திற்குரிய கால இடைநிலை 9.2 மாதங்களேயாகவும் இருக்கிறது[32]. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை உயிர்வாழும் கால இடைநிலையை 4 முதல் 12 வருடங்கள் அதிகப்படுத்தும் என எண்ணப்படுகிறது[97][98].

ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளில் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அனுகூலமான பலனை அளிப்பதில்லை. காரணம் மருந்துகளின் ஒவ்வாமை, பக்கவிளைவுகள், முந்தைய பலனற்ற ரெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை, மருந்து எதிர்ப்பு சக்தியுடைய எச் ஐ வி மாதிரிகள் போன்றவை. சிகிச்சை பின்பற்றாமை, மற்றும் சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் போன்றவைகளே மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை சில மக்களில் பலனளிக்காமல் இருப்பதற்கு காரணம்.[99] சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் மற்றும் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்கள் பலவாகும். மருத்துவ வசதியின்மை, சமூக உதவியின்மை, மனநல வியாதி மற்றும் போதை பழக்கம் போன்றவையே சமூக நல பிரச்சினைகள் ஆகும். அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் அடிக்கடி சாப்பிட வேண்டியிருப்பதால் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை நியமம் சிக்கலானதாகவும் பின்பற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கிறது.[100][101][102]கொழுப்புத் திசு இறப்பு இரத்தத்தின் கொழுப்படர்த்தியில் ஏற்படும் மாறுபாடு, வயிற்றுப்போக்கு, இன்சுலின் எதிர்ப்பு இதய மற்றும் இரத்தக் குழாய் அபாயம், பிறப்புக் குறைபாடுகள் போன்ற பக்க விளைவுகளும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பின்பற்றுவதில் சிரமத்தை விளைவிக்கின்றன.[103] மீளூட்டு நச்சுயிரி (Retrovirus) எதிர் மருந்து விலையுயர்ந்ததாகவும் இருப்பதால் உலகத்தின் பெருவாரியான நோய் தொற்றிய மக்களுக்கு இவை கிடைப்பதில்லை.

ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்

தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி-1 தடுப்பூசி தயாரிப்பதற்கு கடினமான இலக்காகவே இருக்கிறது.[104]

தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல் எச் ஐ வி நோய்த்தாக்கிய அல்லது எயிட்சு நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் அழற்சி "எ" மற்றும் "பி" க்கான நச்சுயிரிகளினால் தொற்றப்படாதவர்களுக்கு, தொற்றும் அபாயத்தைக் குறைக்க இந்நோய்களுக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.[105] குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு அடக்குதலைப் பெற்றவர்கலுக்கு, நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் ஏற்படும் நுரையீரலழற்சி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் கிரிப்டோகாக்கஸ் மூளையுறையழற்சி (மெனிஞ்சைடிஸ்) போன்ற நோய்களுக்கும் நோய்க்கட்டுப்பாடு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது[106].

கிளைக்கோப்புரதம் 120 (ஜி.பி.120) எனும் "சி.டி.4" பிணையும் இடத்துக்கான புரதத்தை அளிக்கவல்ல ஒரு எதிர்க்காரணி நொதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து எச் ஐ வி மாதிரிகளுக்கும் பொதுவான இப்புரதம் "பி" நிண செல்களும் இணையும் இடமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை விட்டுவிடுகிறது[107].

ஜெர்மனியின் பெர்லினில் பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த ஒரு 42 வயதான இரத்தப்புற்று நோயாளிக்கு CCR5 செல் மேற்பரப்பு ஏற்புணர்வியின் அசாதாரண இயற்கை மாதிரியைக் கொண்ட செல்களாலான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. INTHACCR5-Δ32 மாதிரியானது தன்னை இயல்பாகக் பெற்றிருக்கும் மக்களின் சில அணுக்களை, குறிப்பிட்ட வகை எச் ஐ வி கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி உடையவையக்குகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நோயாளி ரெட்ரோ வைரல் எதிர்மருந்து உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னரும் அவரது இரத்தத்தில் எச் ஐ வி நோய்க் கிருமி காணப்படவில்லை.[108]

மாற்று வைத்திய முறைகள்

நோய் அறிகுறிகளை குணமாக்கவும் நோயின் போக்கைக் கட்டுப்படுத்தவும் பல விதமான மாற்று வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[109] நோயுற்ற விகிதத்தையும், இறப்பு விகிதத்தையும் மாற்றுமருந்துகளால் கட்டுப்படுத்துவது இயலாது என்றும் எயிட்சு நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் ஒருவேளை இவற்றின் உபயோகத்தால் மேம்படலாம் எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை வைத்திய முறைகளின் மனோதத்துவ விளைவுகளே மிகுந்த நன்மை பயப்பதாகும்.[109] அக்குபங்க்சர் இந்நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும், எச் ஐ வி நோயைக் குணப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது[110]. மூலிகை மருந்துகளின் விளைவுகளைக் கண்டறியும் பல சுற்றுமாதிரி நோய் சோதனைகள் இம்மூலிகைகளுக்கு நோயின் வளர்ச்சிப் போக்கில் எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றன[111].

போதுமான உணவு உட்கொள்ளுதலைக் கொண்ட எச் ஐ வி நோய்த்தாக்கிய வயதுவந்தவர்களுக்கு பல்லுயிர்ச்சத்து உபபொருட்களால் நோய்த்தாக்கு விகிதத்திலும் இறப்பு விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை. நோயெதிர்ப்பிலும் ஊட்டச்சத்திலும் கீழ்மட்டத்திலுள்ள கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தினசரி பல்லுயிர்ச்சத்து உபபொருட்கள் அளிப்பதால் தாய் சேய் இருவருக்கும் அதிக பலன் கிட்டியதென்று ஒரு பெரிய தான்சானிய ஆய்வு தெரிவிக்கிறது[112]. எச் ஐ வி நோயாளிகள் RDA அளவுகளில் உணவு நுண்சதது உட்கொள்ளுதல் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது[113]. குழந்தைகளில் A உயிர்ச்சத்து சேர்த்துக்கொள்ளுதல் இறப்பு விகிதத்தைக் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது.[112] செலீனியத்தின் அன்றாட உட்கொள்ளுதல் எச் ஐ வி நச்சுயிரி சுமையைக் குறைத்து "சி.டி.4" எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வைரசு எதிர் சிகிச்சைக்கு சேர்வைப் பொருளாக செலீனியம் பயன்படும் போதிலும் அது தனியாக இறப்புவிகிதத்தையும் நோய்பாதிப்பு விகிதத்தையும் குறைக்க இயலாது.[114].

முடிவு

ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி கிருமி வகையைப் பொறுத்து மொத்த உயிர்வாழும் கால இடைநிலை 9 முதல் 11 வருடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது.[7] எயிட்சு நோய்க் கண்டறித லுக்குப் பிறகு போதிய வசதிகளற்ற மருத்துவ வசதியில்லாத இடங்களில் உயிர்வாழும் கால இடைநிலை 6 முதல் 19 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன[115]. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சைக் கிடைக்கும் இடங்களில் எச் ஐ வி நோய்தாக்கத்திற்கும் எயிட்ஸுக்கும், சக்தி வாய்ந்த அதனை உபயோகிக்கும் பொழுது இறப்பு விகிதம் 80 சதவிகிதம் வரைக் குறைக்கப்படுகிறது. மேலும் எச் ஐ வி நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் உயிரோடிருக்கும் காலம் 20 வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது[116].

புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தாலும் எச் ஐ வி சிகிச்சைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதால் உயிர் வாழும் காலத்தின் கணிப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இல்லாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள் பொதுவாக மரணம் நிகழ்ந்து விடுகிறது[32]. பெரும்பாலான நோயாளிகள் சந்தர்ப்பவாத தொற்றுக்களினாலோ அல்லது ஆபத்தான புற்றுக்களினாலோ ஏற்படும் படிப்படியான நோயெதிர்ப்பு மண்டல செயலிழப்பால் மரணமடைகின்றனர்.[117] நோய் வளர்ச்சிப் போக்கு ஊட்டுயிரியின் நோய் பாதிப்பு வாய்ப்பு, நோயெதிர்ப்பு செயல்பாடு,[30][31][35] மருத்துவ வசதி, சக தொற்றுக்கள்,[32][117] மற்றும் நச்சுயிரியின் வகை[37][118][119] என்பதைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கணிசமான அளவு மாறுபடுகிறது.

நோய் பரவல்

2005 ஆம் ஆண்டின் இறுதியில், இளைஞர்களைத் (15 -49) தாக்கும் என்று கணிக்கப்பட்ட நாடுவாரிய நோய்ப்பரவல்

எயிட்சு நோய்ப்பரவலானது வேறுபட்ட உள்வகைகளின் பல்வேறு பரவல்களாகவும் காணப்படுகிறது.இந்நோயின் பரவலில் முக்கிய பங்காற்றுபவை உடலுறவு மூலம் பரவுதல் மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு பிறப்பின் போதும்,பாலூட்டும் போதும் நிகழும் செங்குத்துப் பரவல் முறை ஆகியன[6]. தற்போது ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இருப்பும் கவனிப்பும் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ள போதிலும் எயிட்சு நோய்ப்பரவல் 2007 ஆம் ஆண்டு 2 .1 மில்லியன் மக்களை (இடைவெளி) 1.9 -2.4 மில்லியன்) உயிரிழக்கச் செய்திருக்கிறது.இவர்களில் 330,000 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்[7]. உலகம் முழுவதிலும் 2.5 மில்லியன் குழந்தைகள் உட்பட 33.2 மில்லியன் மக்கள் 2007-ல், எயிட்ஸுடன் வாழ்ந்திருக்கின்றனர். 2007-ல், 420,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன்(இடைவெளி 1.8–4.1 million) புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது.[7]

ஆப்பிரிக்காவின் சகாராவை ஒட்டிய பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.2007-ல் அப்பகுதி எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 சதவிகிதத்தையும், எயிட்சினால் மரணமடைந்தவர்களில் 76 சதவிகிதத்தையும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பிறகு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் கண்டிருக்கிறது. ஏனையப் பகுதிகளைப் போலல்லாமல் சகாராவையொட்டிய பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61 சதவிகிதம் பெண்களாவர். 2007 ஆம் ஆண்டு வயது வந்தோரில் நோய் நிலவு விகிதம் 5.0 சதவிகிதமாகவும், இப்பகுதி இறப்புவிகிதத்தின் தனிப்பெரும் காரணம் எயிட்சு ஆகவும் இருக்கிறது [300]. தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன [302]. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இரண்டாவதாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2007 இல் எயிட்சுடன் வாழும் மக்களில் 18 சதவிகிதம் பேர் இப்பகுதியில் இருந்தனர். 300,000 மரணங்கள் எயிட்சினால் நிகழ்ந்தன [303]. இந்தியாவில் 2.5 மில்லியன் நோய்த்தொற்றுக்களும், வயது வந்தோரில் நோய்த்தாக்கம் 0.36 சதவிகிதமாக உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது [304]. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சராசரி வாழ்நாள் காலம் வேகமாகச் சரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2006 இல் போட்ஸ்வானாவில் இது 65 வருடங்களிலிருந்து 35 வருடங்களாகச் சரிந்துள்ளது [306].

வரலாறு

எயிட்சு முதன்முதலாக ஜூன் 5, 1981 இல் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையங்களில் (CDC) கண்டறியப்பட்டது. இம்மையங்கள் (CDC) லாஸ் ஏஞ்சல்ஸின் 5 ஒரினச்சேர்க்கையாளர்களிடையே நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியாவைக கண்டுபிடித்தது[120]. இப்பொழுதும் PCP என்றே வகைப்படுத்தப்பட்டு நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் உண்டாவதாகக் கருதப்படுகிறது)ஆரம்பத்தில் இந்நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் CDC யிடம் இல்லாத காரணத்தால் இதனுடன் தொடர்புடைய நோய்களின் பெயரை வைத்து (எடுத்துக்காட்டாக நிணநீர்ச்சுரப்பிநோயான லிம்படினோபதி) இந்நச்சுயிரிக்குப் பெயரிட்டனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள்.[121][122] காபோசியின் சதைப்புற்று மற்றும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்கள் என்ற பெயரும் இதற்கிடப்பட்டு 1981 இல் அப்பெயரில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது.[123] பத்திரிகையாளர்களிடையே GRID (ஓரினச்சேர்கையாளர்களோடு தொடர்புடைய நோயெதிர்ப்புக் குறைபாடு) என்று பெயரிடப்பட்டது.[124] CDC பெயர் தேடி அலைந்த பின்னர் நோயுற்ற சமுதாயங்களைப் பார்த்து "4H நோய்"(ஹைதியைச் சேர்ந்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், இரத்தம் உரையாமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹெராயின் பயன்படுத்துபவர்கள்)என்று பெயரிட்டது.[125] எனினும் எயிட்சு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டும் உரியதல்ல எனக் கண்டறிந்த பின்னர் "கிரிட்" (GRID) என்ற சொல் பொருத்தமானதாகத் தோன்றாத காரணத்தால் 1982 ஜூலையில் எயிட்சு என்ற சொல் அறிமுகப்பட்டது.[126] செப்டம்பர் 1982 க்குள் CDC எயிட்சு என்ற பெயரை உபயோகப்படுத்த ஆரம்பித்து இந்நோய்க்கு சரியான விரிவாக்கத்தை அளித்தது.[127].

எயிட்சு நோய் பரவல் பிந்தைய 1950 களில், பெல்ஜியத்தின் காங்கோவில், ஹிலாரி கோப்ரொவ்ஸ்கியின் போலியோமையலைடிஸ் தடுப்பூசிக்கான அசட்டையான ஆய்வின் பொழுது ஆரம்பித்துவைக்கப்பட்டதாகும் என பலத்த சர்ச்சைக்குள்ளான தேற்றமான OPV எயிட்சு கருதுகோள் தெரிவிக்கிறது[128][129]. விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவரம் கிடைக்கும் ஆதாரங்களால் உறுதிசெய்யப்படவில்லை.[130][131][132]

எச் ஐ வி ஆப்பிரிக்காவிலிருந்து ஹைதிக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருக்கலாம் என்று அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.[133]எச் ஐ வி கிருமி கமரூன் நாட்டில் இருந்த சிம்பன்சியை மனிதன் வேட்டையாடி அதை வெட்டும் போது சிம்பன்சியின் இரத்தம் அதை இறைச்சிக்காக வெட்டிய மனிதனின் கையில் இருந்த காயம் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது[134].

எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர்[135].

சமுதாயமும் கலாச்சாரமும்

களங்கம்

ரியான் வைட் தனது எச் ஐ வி நோய்த் தாக்கத்தால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு சுவரொட்டி குழந்தையாக ஆனார்

எயிட்சு நிந்தையானது உலகம் முழுவதிலும் பல விதங்களில் காணப்படுகிறது. சமுதாயத்தில் இருந்து தள்ளிவைத்தல், விலக்குதல், பாகுபாடு , எச் ஐ வி தாக்கப்பட்ட மக்களைத் தவிர்த்தல், நோயாளியின் விருப்பமின்றி அவரை கட்டாயப்படுத்தி எச் ஐ வி சோதனைக்கு உட்படுத்தி நோயாளி பற்றிய இரகசியங்களை வெளியிடுதல், எச் ஐ வி நோய்த்தாக்கியவர்கள் அல்லது நோய்தாக்கியவர்கள் என்று எண்ணப்பட்டவர்களுக்கெதிரான வன்முறை, மற்றும் எச் ஐ வி நோயாளிகளை நோய் பாதிப்பறிய தனிமைப்படுத்துதல் போன்றவையே இவை [136]. இந்நிந்தையுடன் கூடிய வன்முறை அல்லது வன்முறையைப் பற்றிய பயம் போன்றவை அநேக மக்கள் எச் ஐ வி சோதனையை நாடுவதிலிருந்தும், முடிவுகளை அறிய திரும்பிவருவதிலிருந்தும், சிகிச்சை பெற்றுக்கொள்வதிலிருந்தும் தடுப்பதால் சமாளிக்கவல்ல நாள்பட்ட வியாதி நிலையிலிருந்து இந்நோய் மரணதண்டனையாக உருவெடுத்து எச் ஐ வி பரவலை நிரந்தரமாக்குகிறது[137].

எயிட்சு நிந்தை கீழ்க்கண்ட மூன்று பிரிவினைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

  • விளைவுக்கு பயந்த எயிட்சு நிந்தை -சாவை ஏற்படுத்தவல்ல தொற்று வியாதியுடனான பயம் மற்றும் பீதியின் பிரதிபலிப்பு.[138]
  • அடையாளப்படுத்தும் எயிட்சு நிந்தை —நோயின் காரணங்களாகக் கருதப்படும் கூடி வாழும் சகவாச பிரியர்களையும்,வாழ்க்கை முறைகளையும் பற்றிய நிந்தை[138]
  • விரும்பத்தகாத அடைமொழியுடனான எயிட்சு நிந்தை —எச் ஐ வி/எயிட்சு அல்லது எச் ஐ வி நேர்மறை மக்களுக்குத் தரப்படும் நிந்தையான அடைமொழி[139]

பெரும்பாலும் எயிட்சு நிந்தையானது ஒன்றோ பலதோ ஆன பிற நிந்தைகளுடன் கூட்டாகப் பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை, ஈரினச்சேர்க்கை, ஒழுக்கமின்மை, விபச்சாரம் மற்றும் சிறை வழி போதைமருந்து போடுதல் போன்றவையே இவை.

வளர்ந்த நாடுகள் பலவற்றில் எயட்சுக்கும் ஓரின மற்றும் ஈரின சேர்க்கையுடன் இருக்கும் தொடர்பு பாலுறவில் வெறுப்பையும் ஒரினசேர்க்கைக்கெதிரான கருத்துகளையும் ஏற்படுத்துகிறது.[140] அனைத்து ஆண் உடலுறவிலும், நோய்த்தாக்கம் இல்லாத ஆண்களுக்கிடையேயான உடலுறவிலும் கூட எயிட்சு வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுகிறது.[138]

பொருளாதார பாதிப்பு

கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் மனிதர்களின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பில் ஏற்படும் மாற்றம் [348][349][350][351][352]

எச் ஐ வி மற்றும் எயிட்சு மனித மூலதன இருப்பைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது[141]. மனித மூலதனம்பொருளாதார வளர்ச்சி<CITE class=goog-gtc-mediawiki-ref gtc:inserted gtc:temp gtc:prefix='[141]வளர்ந்த நாடுகளைப் போலல்லாது, சரியான <A title=nutrition gtc:link="http://en.wikipedia.org/wiki/nutrition" gtc:attrs="title:399,">போஷாக்கு</A>, உடல் பராமரிப்பு மற்றும் மருந்துகளின்றி எயிட்சு தொடர்பான சிக்கல்களினால் பலர் அவதிப்பட்டு மரிக்கின்றனர். வேலைசெய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு தகுந்த மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க எயிட்சு மக்கள்தொகை உடைய நாடுகளில் இது சமூக பொருளாதாரங்களின் சரிவை ஏற்படுத்தும் என்பதே இத்தகைய நோய்த்தாக்கத்தின் முன்னறிவிப்பாகும். நோய்ப்பாதிப்பு கடுமையாக உள்ள சில பகுதிகளில் இந்நோய்பரவல் வயதான தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படும் நிலையிலுள்ள பல அனாதைகளை விட்டுச் சென்றிருக்கிறது[142].

இப்பகுதிகளின் அதிகரித்திருக்கும் இறப்புவிகிதம் பணியாளர் சமுதாயத்திலும் தொழில் அனுபவமுடையோர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது. இங்ஙனம் சரிவடைந்த பணியாளர் சமுதாயமும் பெருமளவில் குறைந்த ஞானமும் பணி அனுபவமும் உடைய இளைஞர்களைக் கொண்டிருப்பதால் இது குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும். நோயுற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளவோ, தான் நோயுற்றிருக்கும் நிமித்தமாகவோ பணியாளர்களால் அனுபவிக்கப்படும் மருத்துவ விடுப்பும் உற்பத்தியைக் குறைக்க வல்லது. வருமான இழப்பு மற்றும் பெற்றோரின் மரணம் மூலம் மனித முதலீட்டையும், மக்களின் பேரில் முதலீடு செய்வதையும், பெருக்குவதற்கான நுட்பங்களை அதிகரிக்கப்பட்ட இறப்புவிகிதம் பலவீனப்படுகிறது. இளைஞர்களை பெருமளவில் கொல்வதன் மூலம் வருமான வரி செலுத்தும் மக்கள் தொகையை கணிசமாகக் குறைத்து கல்வி மற்றும் நல பணி எயிட்சு அல்லாத பொது செலவினங்களுக்கான ஆதாரத்தைக் குறைத்து நாட்டில் நிதி நெருக்கடியையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. இது வரியாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடல்லாமல் நோயாளிகளுக்கான சிகிச்சை, நோய்ப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக பணியமர்த்தியிருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ விடுப்பூதியம் மற்றும் எயிட்சு அனாதைகள் பராமரிப்பு போன்ற அதீத செலவுகளால் வரியாதார வளர்ச்சிப் பின்னடைதலை அதிகரிக்கிறது. வயது வந்தோர்களின் இறப்பு விகித அதிகரிப்பினால், அநாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், நிந்தனையும் குடும்பத்திலிருந்து அரசுக்கு மாற்றப்படும் பொழுது இத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுகிறது[142].

வீட்டளவில் எயிட்சு நோய் வருமான இழப்பையும் உடல்நல பேணுதலில் செலவு அதிகரிப்பையும் விளைவிக்கறது. இத்தகைய வருமான இழப்புகள், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும், படிப்பிற்கு பதிலாக உடல் நலம் பேணுதல் மற்றும் மயான செலவுகளில் ஈடுபடும் மாற்று விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எச் ஐ வி /எயிட்சு நோயாளி இருக்கும் இல்லங்கள் மற்றவைகளை விட இருமடங்கு மருத்துவச் செலவுகளுக்காளாவதாக, கோட் டி ஐவாய்ர் ஆய்வு தெரிவிக்கிறது.[143]

எயிட்சும் மதமும்

மத தலைவர்களில் பலர் விஞ்ஞானிகளால் நோய்ப்பரவலைத் தடுக்க ஒரே வழியெனக் கருதப்படும் கருத்தடை சாதனங்கள் உபயோகத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிக்கும் காரணத்தால் மதமும் எயிட்சும் என்ற தலைப்பு கடந்த இருபத்து ஆண்டுகளாக பெறும் விவாதத்திற்குள்ளானதாகும். உலகளாவிய நல பணிகளிலும், மதசார்பற்ற நிறுவனங்களான UNAIDS மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடனான ஒத்துழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மதங்களின் பங்கேற்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எயிட்சு மறுதலிப்பு

சில சீர்திருத்தவாதிகள் எச் ஐ விக்கும் எயட்சுக்குமான தொடர்பையும் [144] எச் ஐ வி என்ற ஒன்று உள்ளதா எனவும் [145] தற்போதைய சிகிச்சை முறைகளின் நம்பகத்தன்மையையும் குறித்தும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மருத்துவ சிகிச்சையே எயிட்சு மரணங்களுக்குக் காரணம் என்றும் கொக்கரிக்கின்றனர். இத்தகைய பறைசாற்றல்கள் விஞ்ஞானிகளால் விரிவாக சோதிக்கப்பட்டு முழுமையாக நிராகரிகப்பட்டுள்ள போதிலும் எச் ஐ வி யே எயிட்சு நோய்க்குக் காரணம் என்பதற்கான விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆதாரத்தைப் பின்வரும் குறிப்புகளில் காணவும்[146],[147],[148],[149],[150],[151] அவை இணையதளத்தின் மூலம் பரப்பப்பட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.[152]தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் தபோ ம்பெகி யின் எயிட்சு மறுதலிக்கும் போக்கு எயிட்சு நோய் பரவலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் பலனற்று போகக் காரணமாய் இருந்ததோடல்லாமல் ஆயிரக்கணக்கான எயிட்சுமரணங்களையும் ஏற்படுத்திற்று[153][154].

எச் ஐ வி நோய் வேட்டை

ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒரு பிரிவினர் எச் ஐ வி நேர்மறையான கூட்டாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டு நோய்த்தொற்றை சுறுசுறுப்பாகப் பின்தொடர்கின்றனர். நோய்த்தொற்றை பின்தொடர்பவர்கள் பூச்சிவிரட்டுபவர்கள் எனவும் அவர்களுக்கு நோயைக் கொடுப்பவர்கள் பரிசளிப்பவர்கள் எனவும் கொச்சையான அடைமொழிகளால் இது அழைக்கப்படுகிறது.[155] எச் ஐ வி நோய்த்தொற்றை பெற்றுக் கொள்வதில் எந்த நாட்டமும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவைத் தேர்ந்துகொள்பவர்களைக் குறிக்கும் அடைமொழியான பேர்பேக்கிங் எனப்படும் சேணமற்ற குதிரை போன்ற என்ற வார்த்தையிலிருந்து இத்தகைய எயிட்சு பின்தொடரும் நிலை வித்தியாசப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

இத்தகைய பழக்கத்தின் உண்மையான விரிவு அறியப்படாததாகவே இருக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தின் அங்கத்தினர்கள் என தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் எச் ஐ வி பரப்புதலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல[156]. சில பக் சேசர்கள் இணையதளத்தின் மூலம் கிப்ட் கிவர்களோடு தொடர்பு கொள்ள முற்படுகின்றனர்[157]. வேறு சில நோய்க்கிருமியைப் பின்தொடர்வோர் எச் ஐ வி நேர்மறையாளர்கள், எச் ஐ வி எதிர்மறையாளர்களோடு நோய்தொற்றை அடையவேண்டும் என்ற நோக்குடன் ("பரிசு பெறுவது") பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் நோய்க்கிருமி கேளிக்கைகளில் நிலைமாற்ற விருந்துகளை ஏற்பாடுசெய்து அதில் கலந்து கொள்கின்றனர்.[158]

தவறான கருத்துக்கள்

எச்.ஐ.வி குறித்தும் எயிட்சு குறித்தும் பல தவறான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. மிகவும் பரவலான பிழையான கருத்துக்களாக இருப்பவை:

  1. எயிட்சு சாதாரணத் தொடுதல் மூலம் பரவுகின்றது;
  2. கன்னியருடன் பாலுறவு கொள்வது எயிட்சு நோயைக் குணமாக்கும்;[159][160][161]
  3. எச்.ஐ.வி தீநுண்மம் தற்பால் சேர்க்கையாளர்களையும் போதைப்பொருள் பயன்படுத்துவோரையும் மட்டுமே தாக்குகின்றது;
  4. தொற்றில்லாத இரு ஆண்மக்களிடையே குதவழிப் பாலுறவு எச்.ஐ.வி தொற்றுக்கு வழி வகுக்கும்;
  5. பள்ளிச்சாலைகளில் எச்.ஐ.வி குறித்தும் தற்பால் சேர்க்கை குறித்தும் அறியத்தருதல் எயிட்சு நோய் தாக்குவீதம் கூட வழிவகுக்கும்

[162][163] என்பனவாகும்.

சிலர் எச்.ஐ.வி தீநுண்மத்திற்கும் எயிட்சிற்கும் தொடர்பில்லை எனக் கருதுகின்றனர்.[144] வேறு சிலர் எச்.ஐ.வி. தீநுண்மம் இருப்பதையும் அதற்கான சோதனைகளின் செல்லுந்தன்மை குறித்தும் ஐயமுறுகின்றனர்.[164][165] எயிட்சு மறுப்பாளர்கள் எனப்படும் இவர்களது கூற்றுக்கள் அறிவியல் குமுகத்தால் ஆயப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.[166] இருப்பினும், இவர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்; தென்னாபிரிக்காவில் 1999-2005 காலகட்டத்தில் எயிட்சு மறுப்புவாதத்திற்கு அரசாதரவு இருந்தது. இதனால் அந்நாட்டில் எயிட்சு நோய்ப்பரவல் தடுக்கப்படாது தவிர்த்திருக்கக்கூடிய பல்லாயிர உயிரிழப்புக்களும் எச்.ஐ.வி தீநுண்மத்தொற்றுக்களும் ஏற்பட்டன.[154][167][168]

எச்.ஐ.வி என்பது அறிவியலாளர்களால் தவறாகவோ விருப்பத்துடனோ உருவாக்கப்பட்ட பொய்மை என பல சதிக் கொள்கைகள் பரவியுள்ளன. சோவியத் நாட்டில் எச்ஐவி/எயிட்சு ஐக்கிய அமெரிக்காவால் பரப்பப்பட்ட பொய்மை என பரப்புரை செய்யப்பட்டது. இதனை பல மக்கள் நம்புவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.[169]

குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள்

கூடுதல் வாசிப்பு

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எயிட்சு&oldid=3820463" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை