2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்
2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் என்பது பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் மார்ச் 22, 2016 அன்று நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டனர்[3]. 261 பேர் காயமடைந்தனர். பிரசெல்சில் உள்ள சாவெந்தெம் வானூர்தி நிலையத்தில் 2 குண்டுகளும் (7.00 ஒ.ச.நே (GMT)) நகரின் மத்தியிலுள்ள மால்பீக் பகுதியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் (9.11 ஒ.ச.நே ) வெடித்தன.
2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் | |
---|---|
குண்டு வெடித்த இடங்களைக் குறிக்கும் நிலப்படம் (1) 08:00 : பிரசெல்சு வானூர்தி நிலையத்தின் முனையம் பி (2) 09:11 : பிரசெல்சு மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம் | |
இடம் | சாவெந்தெமிலுள்ள பிரசெல்சு வானூர்தி நிலையம் மற்றும் மால்பீக் விரைவுப்போக்குவரத்து தொடர்வண்டி நிலையம், பிரசெல்சு, பெல்ஜியம் |
ஆள்கூறுகள் | வானூர்தி நிலையத்தில் முதல் வெடிப்பு: 50°53′52″N 4°29′00″E / 50.8977754°N 4.4833392°E[1] |
நாள் | 22 மார்ச் 2016 அண். 08:00–09:11 (UTC+1) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | குடிமக்கள், போக்குவரத்து அச்சுகள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு, திரள் கொலை |
ஆயுதம் | டிஏடிபி வெடிகுண்டுகள்; ஏகே-47 தாக்குதல் நீள் துப்பாக்கி |
இறப்பு(கள்) | 33+ (31+ பாதிப்படைந்தோர், 2 தாக்கியோர்) |
காயமடைந்தோர் | 261 |
தாக்கியோர் | இசுலாமிய அரசு[2] |
தாக்கியோரின் எண்ணிக்கை | 3+ |
இசுலாமிய நாடு என்னும் தீவிரவாத அமைப்பு இக்குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது.
பின்னணி
பெல்ஜியம் தற்போது ஈராக்கில் இசுலாமிய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்று வருகின்றது.[4] தன்நாட்டு மக்கள்தொகையில் வேறெந்த ஐரோப்பிய நாட்டைக் காட்டிலும் கூடுதலான வெளிநாட்டுப் போராளிகளைக் கொண்டுள்ள நாடாக பெல்ஜியம் விளங்குகின்றது; சனவரி 2015 நிலவரப்படி சிரியாவிலும் ஈராக்கிலும் போராட 500 பேர் சென்றுள்ளனர்.[5][6] இந்த படைவீரர்கள் பெரும்பாலும் வந்தேறிகளின் வம்சாவழியினர் ஆவர். இதனால் பெல்ஜியத்தை "ஜிகாதிகளின் வளர்ப்புக்குடில்",[5] "ஜிகாதிக்கு ஆளெடுக்கும் அச்சு"[7] எனவும் அழைக்கின்றனர்.
குண்டு வைத்தவர்கள்
இத் தாக்குதலில் இருவர் தற்கொலை போராளிகளாக செயல்பட்டுள்ளனர் என்றும் பெல்ஜிய குடிமக்களான அவர்கள் பெயர் பரகிம், காலித்-இல்-பக்ரௌயி என்றும் தெரியவந்துள்ளது. பரகிம் என்பவன் வானூர்தி நிலையத்திலும், காலித் என்பவன் ரயில் நிலையத்திலும் குண்டுவைத்தவர்கள் என அரசு வழக்கறிஞர் கூறினார். காலித்தும் பரகிமும் சகோதரர்கள். இத்தாக்குதலில் தொடர்புடைய மற்ற இருவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லையென்றும் அதில் ஒருவன் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் மற்றவன் தப்பிவிட்டதாகவும் அரசு தெரிவிக்கிறது. காலித், பரகிம் வீட்டை சோதனையிட்டதில் 15 கிலோ வெடிமருந்துகள் சிக்கின. தப்பிச்சென்றவனின் பெயர் நசிம் லாசரௌயி என்று பெல்ஜிய செய்திஇதழ் லா டெமிரே கூறுகிறது.[8]