வலோதிமிர் செலேன்சுக்கி
வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி (Volodymyr Oleksandrovych Zelenskyy; உக்ரைனியன்: Володимир Олександрович Зеленський; பிறப்பு: 25 சனவரி 1978)[1] உக்ரைனிய நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2019 மே 20 முதல் உக்ரைனின் 6-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.
வலோதிமிர் செலேன்ஸ்கி Volodymyr Zelensky | |
---|---|
Володимир Зеленський | |
2019 இல் செலேன்சுக்கி | |
உக்ரைனின் 6-வது அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2019 | |
முன்னையவர் | பெத்ரோ பொரொசென்கோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி 25 சனவரி 1978 கிரிவோய் ரோக், உக்ரைன், சோவியத் ஒன்றியம் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் சேவகன் (2018 முதல்) |
துணைவர் | அலேனா கியாசுக்கோ (2003) |
பிள்ளைகள் |
|
கல்வி | லீவ் தேசிய தொருளியல் பல்கலைக்கழகம் |
வேலை | நகைச்சுவை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
கையெழுத்து | |
செலேன்சுக்கி கீவ் தேசிய பொருளியல் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். திரைப்படத்துறையில் சேர்ந்து குவார்த்தால் 95 என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, திரைப்படங்கள் தயாரித்தது மட்டுமல்லாமல், அவற்றில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துப் பிரபலமானார். இவர் நடிப்பிலும் தயாரிப்பிலும் 2015 முதல் 2019 வரை ஒளிபரப்பான மக்கள் சேவகன் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் செலேன்சுக்கி உக்ரைன் அரசுத்தலைவராக நடித்திருந்தார்.[2]
குவார்த்தால் 95 நிறுவன ஊழியர்களால் "மக்கள் சேவகன்" என்ற அரசியல் கட்சி 2018 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டது.[3][4] 2019 அரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக செலேன்சுக்கி 2018 திசம்பர் 31 அன்று அறிவித்தார். செலேன்சுக்கி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73.2% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோவைத் தோற்கடித்தார்.[5]
ஒரு மக்கள்மயப் படுத்தப்பட்டவராக அடையாளம் காணப்பட்ட செலேன்சுக்கியின் சாதனைகளாக, அரசுத்தலைவராகப் பதவியேற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார மந்தநிலையை திறம்பட நிர்வகித்தமை, ஊழலைக் கையாண்டமை ஆகியவை அடங்கும். அண்மைய ஆண்டுகளில், செலேன்சுக்கியின் அரசாங்கம் ஒரு சர்வாதிகாரத் திருப்பத்தை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.[6]
2021 நவம்பர் 26 இல், உக்ரைனிய மற்றும் உருசியக் குழு ஒன்று தமது அரசாங்கத்திற்கு எதிராக திசம்பர் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக செலேன்சுக்கி அறிவித்திருந்தார்.[7] ஆயினும், உக்ரைனியத் தொழிலதிபர் ரினாட் அகமேத்தொவுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்ட அரசுத்தலைவர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.[8]