குசானப் பேரரசு

நடு மற்றும் தெற்கு ஆசியப் பேரரசு (பொ. ஊ. 30-375)

குசானப் பேரரசு (ஆங்கிலம்: Kushan Empire; பண்டைக் கிரேக்கம்Βασιλεία Κοσσανῶν; பாக்திரியம்: Κοϸανο, கொசானோ; சமக்கிருதம்: कुषाणः, கு-சா-னா; பிராமி எழுத்துமுறை: , கு-சா-னா; பௌத்த சமக்கிருதம்: குசான-வம்சம்; பார்த்தியம்: 𐭊𐭅𐭔𐭍 𐭇𐭔𐭕𐭓, Kušan-xšaθr; மரபுவழிச் சீனம்: 貴霜பின்யின்: குயிசுவாங்[16]) என்பது பல சமய நம்பிக்கைகளை உடைய மக்களை ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். இது முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாக்திரிய நிலப்பரப்புகளில் உயேசி பழங்குடியினத்தவரால் உருவாக்கப்பட்டது. தற்போதைய உசுபெக்கிசுத்தான், ஆப்கானித்தான், பாக்கித்தான், மற்றும் வட இந்தியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இது விரிவடைந்தது.[17][18][19] இது சாகேதம் மற்றும் சாரநாத் ஆகியவற்றுடன் வாரணாசிக்கு அருகிலான நிலப்பரப்பு வரையிலும் கூட விரிவடைந்திருந்தது. குசானப் பேரரசர் கனிஷ்கரின் சகாப்தத்திற்குக் காலமிடப்பட்ட கல்வெட்டுகள் வாரணாசியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[note 4]

குசானப் பேரரசு
Κοϸανο (பாக்திரியம்)
Βασιλεία Κοσσανῶν (பண்டைக் கிரேக்க மொழி)
कुषाणसाम्राज्यम् (சமசுகிருதம்)
30–375
கனிஷ்கருக்குக் கீழ் குசான நிலப்பரப்புகள் மற்றும் குசான கட்டுப்பாட்டின் அதிகபட்ச விரிவு.[1] குசான கட்டுப்பாட்டின் விரிவானது குறிப்பிடத்தக்க வகையில் இரபதக் கல்வெட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2][3][note 1][4] தாரிம் வடிநிலம் வரை வடக்கு நோக்கி விரிவடைந்துள்ளதானது நாணயக் கண்டுபிடிப்புகள் மற்றும் சீன நூல்களினால் முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[5][6]
கனிஷ்கருக்குக் கீழ் குசான நிலப்பரப்புகள் மற்றும் குசான கட்டுப்பாட்டின் அதிகபட்ச விரிவு.[1] குசான கட்டுப்பாட்டின் விரிவானது குறிப்பிடத்தக்க வகையில் இரபதக் கல்வெட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2][3][note 1][4] தாரிம் வடிநிலம் வரை வடக்கு நோக்கி விரிவடைந்துள்ளதானது நாணயக் கண்டுபிடிப்புகள் மற்றும் சீன நூல்களினால் முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[5][6]
தலைநகரம்பெசாவர் (புருசபுரம்)
தக்சசீலா
மதுரா
பேசப்படும் மொழிகள்கொயினே கிரேக்கம் (அண். 127 வரை அலுவல் மொழி)[note 2]
பாக்திரியம்[note 2] (அண். 127 முதல் அலுவல் மொழி)[note 3]
காந்தாரப் பிராகிருதம்[9]
கலப்பு சமசுகிருதம்[9]
சமயம்
பௌத்தம்[10]
இந்து சமயம்[11]
சரதுசம்[12]
மக்கள்குசானர்கள் (உயேசி)
அரசாங்கம்முடியரசு
பேரரசர் 
• 30–80
குஜுலா கத்பிசசு
• 350–375
கிபுனாடா
வரலாற்று சகாப்தம்பாரம்பரிய பண்டைக் காலம்
• குசலா கத்பிசசு உயேசி பழங்குடியினங்களை ஒரு கூட்டமைப்பாக இணைக்கிறார்
30
• சாசானியர்கள், குப்தர்கள், மற்றும் ஹெப்தலைட்டுகளால் அடி பணிய வைக்கப்படுகின்றனர்[13]
375
பரப்பு
70ஆம் ஆண்டு மதிப்பீடு[14]2,000,000 km2 (770,000 sq mi)
200ஆம் ஆண்டு மதிப்பீடு[15]2,500,000 km2 (970,000 sq mi)
நாணயம்குசான திரச்மா
முந்தையது
பின்னையது
இந்தோ கிரேக்க நாடு
இந்தோ-பார்த்தியப் பேரரசு
இந்தோ சிதியன் பேரரசு
வடக்கு சத்திரபதிகள்
மேற்கு சத்ரபதிகள்
மகாமேகவாகன வம்சம்
சாசானியப் பேரரசு
குசான-சாசானிய இராச்சியம்
குப்தப் பேரரசு
கிடாரைட்டுகள்
பத்மாவதி நாகர்கள்
விந்தியதபியின் நாகர்கள்
தற்போதைய பகுதிகள்

குசானர்கள் உயேசி கூட்டமைப்பின் ஐந்து பிரிவுகளில் ஒருவராக அநேகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[23][24] உயேசி கூட்டமைப்பு என்பது அநேகமாக தொச்சாரியப் பூர்வீகத்தைக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய நாடோடி மக்களின் கூட்டமைப்பு ஆகும்.[25][26][27][28][29] வடமேற்கு சீனாவின் சிஞ்சியாங் மற்றும் கான்சு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து பண்டைக் கால பாக்திரியாவில் இவர்கள் குடியமர்ந்தனர்.[24] இந்த அரசமரபைத் தோற்றுவித்த குஜுலா கத்பிசசு கிரேக்கப் பண்பாட்டு யோசனைகளையும், உருவ அச்சசிடுதலையும் கிரேக்க பாக்திரியா பேரரசின் பாரம்பரியத்தைப் பின்பற்றிப் பயன்படுத்தினார். இந்து சமயத்தின் சைவப் பிரிவை சேர்ந்தவராக இவர் இருந்தார்.[30] இரண்டு பிந்தைய குசான மன்னர்களான வீமா காட்பீசஸ் மற்றும் இரண்டாம் வாசுதேவன் ஆகியோரும் இந்து சமயத்திற்குப் புரவலர்களாக விளங்கினர். பொதுவாக குசானர்கள் பௌத்தத்திற்கும் சிறந்த புரவலர்களாக விளங்கினர். பேரரசர் கனிஷ்கரில் தொடங்கி சரதுசத்தின் காரணிகளையும் தங்களது ஆட்சியில் பயன்படுத்தினர்.[31] நடு ஆசியா மற்றும் சீனாவுக்குப் பௌத்தம் பரவியதில் இவர்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினர். ஒப்பீட்டளவில் 200 ஆண்டு கால அமைதியான காலத்தைத் தொடங்கி வைத்தனர். இது சில நேரங்களில் "பாக்ஸ் குசானா" (குசான அமைதி) என்று குறிப்பிடப்படுகிறது.[32]

தொடக்கத்தில் நிர்வாகப் பயன்பாடுகளுக்காகக் குசானர்கள் அநேகமாகக் கிரேக்க மொழியைப் பயன்படுத்தினர் என்று கருதப்படுகிறது. ஆனால் பிறகு பாக்திரிய மொழியைப் பயன்படுத்தத் தொடங்கினர். வடக்கே காரகோரம் மலைகளைத் தாண்டி தனது இராணுவங்களை கனிஷ்கர் அனுப்பினார். காந்தார தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற ஒரு நேரடிச் சாலையானது குசானர்களின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தது. காரகோரத்தின் வழியாகப் பயணத்தை ஊக்குவித்தது. சீனாவுக்கு மகாயான பௌத்தத்தின் பரவலை இது எளிதாக்கியது. உரோமைப் பேரரசு, சசானியப் பாரசீகம், அக்சும் பேரரசு மற்றும் சீனாவின் ஆன் அரசமரபு ஆகியவற்றுடன் தூதரக உறவுகளைக் குசான அரசமரபானது கொண்டிருந்தது. உரோமைப் பேரரசு மற்றும் சீனாவுக்கு இடையிலான வணிக உறவுகளின் மையத்தில் குசானப் பேரரசு அமைந்திருந்தது. அலைன் தேனியலோ என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "ஒரு காலத்திற்கு, முதன்மையான நாகரிங்களின் மையப் பகுதியாக குசானப் பேரரசு திகழ்ந்தது".[33] பெரும்பாலான தத்துவம், கலை மற்றும் அறிவியலானது இதன் எல்லைகளுக்குள் உருவாக்கப்பட்ட அதே நேரத்தில், பேரரசின் வரலாறு குறித்து தற்காலத்தில் கிடைக்கப் பெறும் ஒரே நூல் பதிவுகளானவை கல்வெட்டுக்கள் மற்றும் பிற மொழிகளில், குறிப்பாக சீன மொழியில், உள்ள நூல்களில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.[34]

குசானப் பேரரசானது பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டில் பகுதியளவு-சுதந்திரமுடைய இராச்சியங்களாகச் சிதறுண்டது. இவை மேற்கிலிருந்து படையெடுத்து வந்த சாசானியர்களிடம் வீழ்ந்தன. சோக்தியானா, பாக்திரியா மற்றும் காந்தாரம் ஆகிய பகுதிகளில் குசான-சாசானிய இராச்சியத்தை இவர்கள் நிறுவினர். 4ஆம் நூற்றாண்டில் இந்திய அரசமரபான குப்தர்கள் கிழக்கில் இருந்து அழுத்தம் கொடுத்தனர். கடைசி குசான மற்றும் குசான-சாசானிய இராச்சியங்கள் இறுதியாக வடக்கிலிருந்து வந்த கிடாரைட்டு, பிறகு ஹெப்தலைட்டு படையெடுப்பாளர்களால் திணறடிக்கப்பட்டன.[13]

பூர்வீகம்

வடக்கு மங்கோலியாவின் நோயின்-உலா எனும் இடத்தில் உள்ள ஓவியம். இதில் உயேசி உயர்குடியினர் ஒருவரும், ஒரு பூசாரியும் ஒரு நெருப்பு பீடத்தின் அருகில் நிற்கின்றனர்.[35][36]

சீன நூல்கள் குயிசுவாங் (貴霜, பண்டைய சீனம்: *குஜ்-ஸ் [ஸ்]ரான், அதாவது குசானர்கள்), என்பவர்களை உயேசியின் ஐந்து உயர் குடியினப் பழங்குடியினங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.[37] பல அறிஞர்கள் உயேசி இந்தோ-ஐரோப்பியப் பூர்வீகத்தையுடைய ஒரு மக்கள் என்று நம்புகின்றனர்.[25][38] குறிப்பாக தொச்சாரியப் பூர்வீகத்தை உடையவர்கள் என்பது அடிக்கடிப் பரிந்துரைக்கப்படுகிறது.[25][26][27][28][29][39] ஓர் ஈரானிய, குறிப்பாக சகர்கள்,[40] பூர்வீகத்திலிருந்து இவர்கள் தோன்றியிருக்கலாம் என்பதற்கும் அறிஞர்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது.[41] பிறர் உயேசி உண்மையில் நாடோடி ஈரானிய மக்களாக இருந்திருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர். குடியமர்ந்த தொச்சாரியர்களால் பகுதியளவு இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்றும் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறாக ஈரானியர் மற்றும் தொச்சாரியர் ஆகிய இரு மக்களின் அம்சங்களையும் இவர்கள் கொண்டுள்ளனர் என்று பரிந்துரைக்கின்றனர்.[42]

மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் மற்றும் ஆனின் நூல் ஆகியவற்றில் நவீன கால சீனாவின் வடமேற்கில் கிழக்கு சிஞ்சியாங் மற்றும் கான்சுவின் வடமேற்குப் பகுதியில் இருந்த புல்வெளிகளில் உயேசி வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடனும் போரில் இருந்த சியோங்னுவால் உயேசியின் மன்னர் சிரச்சேதம் செய்யப்படும் வரை இவர்கள் அங்கு வாழ்ந்தனர். சிரச்சேதம் காரணமாக பொ. ஊ. மு. 176 மற்றும் பொ. ஊ. மு.160 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் இறுதியாக மேற்கு நோக்கி இடம் பெயரும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.[43] உயேசி உள்ளடக்கியிருந்த ஐந்து பழங்குடியினங்களாக சீன வரலாற்றில் சியூமி (休密), குயிசுவாங் (貴霜), சுவாங்மி (雙靡), சிதுன் (肸頓), மற்றும் துமி (都密) ஆகிய பழங்குடியினங்கள் குறிப்பிடப்படுகின்றன.

பொ. ஊ. முதலாம் நூற்றாண்டின் முதன் முதலில் அறியப்பட்ட குசான ஆட்சியரான எரையோசின் நாணயத்தில் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன இனப் பெயரான "KOϷϷANO" (கொஷ்ஷானோ, "குசான்") (Ϸ, "ஷ்" என்ற எழுத்தின் இணைப்பு).

உயேசி மக்கள் கிரேக்க பாக்திரியா பேரரசின் எலனிய இராச்சியத்தை (வடக்கு ஆப்கானித்தான் மற்றும் உசுப்பெக்கிசுத்தானில்) சுமார் பொ. ஊ. மு. 135இல் அடைந்தனர். இடம் மாற்றப்பட்ட கிரேக்க அரசமரபுகள் தென் கிழக்கில் இந்து குஃசு பகுதிகளிலும் (தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில்), சிந்து வடி நிலத்திலும் (தற்கால பாக்கித்தான் மற்றும் இந்தியாவில்) குடியமர்ந்தனர். இந்தோ-கிரேக்க இராச்சியத்தின் மேற்குப் பகுதியை ஆக்கிரமித்தனர்.

தெற்காசியாவில் தங்களது நாணயங்களில் குசானப் பேரரசர்கள் வழக்கமாக ΚΟϷΑΝΟ ("கோசனோ") என்ற அரசமரபின் பெயரைப் பயன்படுத்தினர்.[16] வீமா காட்பீசஸின் சிலையின் மதுரா கல்வெட்டு போன்ற பிராமி எழுத்து முறையில் சமக்கிருதத்தில் எழுதப்பட்ட பல கல்வெட்டுகள் குசானப் பேரரசரை , கு-சா-னா ("குசானா") குசானா என்று குறிப்பிடுகின்றன.[16][44] சில பிந்தைய இந்திய இலக்கிய நூல்கள் குசானர்களை துருஷ்கா என்று குறிப்பிட்டன. பிந்தைய சமக்கிருத நூல்கள்[note 5] துருஷ்கா என்ற பெயரை துருக்கிய இனத்தவருடன் குழப்பிக் கொள்கின்றன. "ஏழாம் நூற்றாண்டில் மேற்கு துருக்கியர்களின் கைகளில் துக்கரிஸ்தான் வந்த நிகழ்வால் இது அநேகமாக நிகழ்ந்திருக்கலாம்" என்று கருதப்படுகிறது.[45][46] யோவான் மேக்சு ரோசன்பீல்டு என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி, துருஷ்கா மற்றும் துக்கரா இவை அனைத்தும் தொக்காரி என்ற சொல்லின் வேறுபட்ட வடிவங்களாக இந்திய நூல்களில் உள்ளவையாகும்.[47] இருந்த போதிலும், விங் என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "குசானர்கள் நடு ஆசியப் பூர்வீகத்தைக் கொண்டிருந்தவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லாதிருந்த போதிலும் தற்காலத்தில் எந்த ஒரு வரலாற்றாளரும் இவர்களை துருக்கிய-மங்கோலியராகவோ அல்லது "ஊணர்களாகவோ" கருதுவதில்லை".[45]

தொடக்க கால குசானர்கள்

குசான உருவப் படங்கள்
ஓர் உயேசி இளவரசனின் தலை (கலச்சயன் அரண்மனை, உசுபெக்கிசுத்தான்)[48]
தனது நாணயங்களில் "குசானன்" என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட முதல் மன்னன்: எரையோசு (பொ. ஊ. 1–30)
குசான பக்தன் (பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டு). பெருநகரக் கலை அருங்காட்சியகம்
குசானப் பேரரசன் வீமா காட்பீசஸின் உருவப் படம், பொ. ஊ. 100-127

பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டு வரையில் பாக்திரியா மற்றும் சோக்தியானா ஆகிய பகுதிகளில் குசானர்கள் வாழ்ந்ததற்கான சில தடயங்கள் எஞ்சியுள்ளன. அங்கு இவர்கள் சகர்களை இடம் மாற்றினர். சகர்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.[49] தக்தி சங்கின், சுரக் கோதல் (ஒரு நினைவுச்சின்ன கோயில்) மற்றும் கலச்சயன் அரண்மனை ஆகிய இடங்களில் தொல்லியல் கட்டடங்கள் அறியப்பட்டுள்ளன. ஐ கனௌம் போன்ற பண்டைய எலனிய நகரங்களின் சிதிலங்களில் குசானர்கள் கோட்டைகளைக் கட்டியதற்காக அறியப்படுகின்றனர். இக்காலத்தைச் சேர்ந்த பல்வேறு சிற்பங்களும், தூண் தலை பட்டைகளும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் குதிரைகளில் சவாரி செய்யும் வில்லாளர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.[50] செயற்கையாக வடிவம் மாற்றப்பட்ட மண்டை ஓடுகளையுடைய கலச்சயனைச் சேர்ந்த குசான இளவரசன் போன்ற மனிதர்களையும் இவை முக்கியமாகச் சித்தரித்துள்ளன. செயற்கையாக மண்டை ஓட்டினுடைய வடிவத்தை மாற்றும் பழக்கமானது நாடோடிகளின் நடு ஆசியாவில் நன்றாக அறியப்பட்ட ஒரு பழக்கமாக இருந்தது.[51][52] சில கலச்சயன் சிற்ப சித்தரிப்புகள் சகர்களுக்கு எதிராகச் சண்டையிடும் குசானர்களைச் சித்தரித்துள்ளதாகவும் கூட கருதப்படுகிறது.[53] இந்தச் சித்தரிப்புகளில் உயேசி பழங்குடியினத்தவர் கம்பீரமான பாவனையுடனும், அதே நேரத்தில், சகர்கள் பொதுவாக கிருதாக்களையுடையவர்களாகவும், விசித்திரமான முக பாவனைகளை உடையவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.[53]

சீனர்கள் முதன் முதலில் இம்மக்களை உயேசி என்று குறிப்பிட்டுள்ளனர். உயேசி மற்றும் குசானர்களுக்கு இடையிலான உறவு முறையானது இன்னும் தெளிவாகத் தெரியாத போதிலும், இவர்கள் குசானப் பேரரசை நிறுவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பான் கூ என்பவரின் ஆனின் நூலானது பொ. ஊ. மு. 128இல் பாக்திரியாவை குசானர்கள் (குயே-சுவாங்) பிரித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது. பான் யே என்பவரின் பிந்தைய ஆனின் நூலானது "குசானர்களின் தலைவனான சியூ-சியூ-சுவே (நாணயங்களின் குஜுலா கத்பிசசு) எவ்வாறு குசானப் பேரரசின் பிற உயேசிப் பழங்குடியினங்களை அடி பணிய வைத்ததன் மூலம் இந்தப் பேரரசை நிறுவினான்" என்று குறிப்பிடுகிறது.[49]

முதன் முதலில் ஆவணப்படுத்தப்பட்ட, முதன் முதலில் தன்னைத் தானே ஒரு குசான ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டவர் எரையோசு ஆவார். தன்னுடைய நாணயங்களில் கிரேக்க மொழியில் இவர் தன்னைத் தானே "ஏதேச்சதிகாரி" என்று அழைத்துக் கொள்கிறார். மேலும் இவர் வடிவம் மாற்றப்பட்ட மண்டை ஓட்டையும் கூட கொண்டவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் கிரேக்கர்களின் ஒரு கூட்டாளியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. கிரேக்க பாணியிலான நாணயங்களை இவர் அச்சிட்டார். முதல் குசானப் பேரரசன் குஜுலா கத்பிசசின் தந்தையாக இந்த எரையோசு இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது.[சான்று தேவை]

சீன நூலான பிந்தைய ஆனின் நூலானது, அண். பொ. ஊ. 125இல் சீனப் பேரரசருக்கு சீனத் தளபதி பான் யோங் அனுப்பிய ஓர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குசானப் பேரரசின் உருவாக்குதல் குறித்த தகவல்களைப் பின்வருமாறு அளிக்கிறது:

[உயேசி பாக்திரியாவை வென்று] 100 ஆண்டுகளுக்கும் மேல் கழித்து குயிசுவாங்கின் (பதக்சான்) இளவரசன் [சிகோவு] தன்னைத் தானே மன்னனாக நிறுவிக் கொண்டான், மற்றும் இவனது அரசமரபானது குயிசுவாங் (குசான) மன்னனின் அரசமரபு என்று அழைக்கப்படுகிறது. இவன் அன்சி (இந்தோ-பார்த்தியா) மீது படையெடுத்தான். கவோபு (காபுல்) பகுதியை வென்றான். புதா (பக்தியா) மற்றும் சிபின் (கபிசா மற்றும் காந்தாரம்) ஆகியவற்றின் ஒட்டு மொத்த இராச்சியங்களையும் கூட இவன் தோற்கடித்தான். சியுசியுகுவே (குசலா கத்பிசசு) இறக்கும் போது அவனுக்கு 80 வயதுக்கும் மேல் ஆகி இருந்தது. இவனது மகன் எங்கவோசன் [அநேகமாக வேமா தக் (து) அல்லது ஒரு வேளை இவனது சகோதரன் சதஷ்கனன்] இவனது இடத்தில் மன்னனாக வந்தான். இவன் தியான்சுவைத் [வடமேற்கு இந்தியா] தோற்கடித்தான். அப்பகுதியை மேற்பார்வையிடவும், தலைமை தாங்குவதற்கும் தளபதிகளை அமர்த்தினான். இதற்குப் பிறகு உயேசி மட்டு மீறிய அளவுக்கு செல்வம் படைத்தவர்களாக உருவாயினர். அனைத்து இராச்சியங்களும் [தங்களது மன்னனை] குயிசுவாங் [குசான] மன்னன் என்று அழைக்கின்றன. ஆனால் ஆன் இவர்களின் உண்மையான பெயரான தா உயேசி என்ற பெயரிலேயே அழைக்கின்றனர்.

பிந்தைய ஆனின் நூல்.[54][55]

வேறுபட்ட பண்பாட்டுத் தாக்கங்கள்

பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டில் குயிசுவாங் (சீனம்: 貴霜) பிற உயேசிப் பழங்குடியினங்கள் மீது முக்கியத்துவத்தைப் பெற்றனர். தளபதி குஜுலா கத்பிசசின் தலைமைக்குக் கீழ் ஓர் இறுக்கமான கூட்டமைப்பாக அவர்களை ஒன்றிணைத்தனர்.[56] மேற்குலகில் குயிசுவாங் என்ற பெயரானது கூட்டமைப்பை குறிப்பிடுவதற்காக குசான் என்று மாற்றம் செய்யப்பட்டு பின்பற்றப்படுகிறது. எனினும் சீனர்கள் தொடர்ந்து இவர்களை உயேசி என்றே அழைக்கின்றனர்.

சிதியப் பழங்குடியினங்களிடமிருந்து இப்பகுதியின் கட்டுப்பாட்டைப் படிப்படியாக எடுத்த குசானர்கள் தெற்கு நோக்கி காந்தாரதேசம் (பாக்கித்தானின் போதோவார் மற்றும் கைபர் பக்துன்வா பகுதியில் இப்பகுதி முதன்மையாக அமைந்துள்ளது) என்று பாரம்பரியமாக அறியப்பட்ட பகுதிக்குள் விரிவடைந்தனர். இவர்கள் பாக்ராம்[57] மற்றும் சரசத்தாவில் இரட்டைத் தலை நகரங்களை நிறுவினர். இந்த இடங்கள் அந்நேரத்தில் கபிசா மற்றும் புஷ்கலவதி என்று முறையே அழைக்கப்பட்டன.[56]

குசான எழுத்துக்களுடன் (அகன்ற செங்குத்து பகுதிகள்) கிரேக்க எழுத்துக்கள் (குறுகிய செங்குத்துப் பகுதிகள்)

குசானர்கள் பாக்திரியாவின் எலனியப் பண்பாட்டின் காரணிகளைப் பின்பற்றி நடந்தனர். தங்களது சொந்த மொழிக்கு ஏற்றதாக இருக்குமாறு ("குஷான்" என்ற பெயரில் உள்ளது போல மேற்கொண்ட எழுத்தான Þ "ஷ்"ஐச் சேர்த்துக் கொண்டனர்.) கிரேக்க எழுத்துக்களைப் பின்பற்றினர். கிரேக்க வடிவத்தில் நாணயங்களை சீக்கிரமே அச்சிடத் தொடங்கினர். இவர்களது நாணயங்களில் கிரேக்க மொழி மரபுகளுடன், பாளி மரபுகளையும் (கரோஷ்டி எழுத்துமுறை) கனிஷ்கரின் ஆட்சியின் முதல் சில ஆண்டுகள் வரை பயன்படுத்தினர். கனிஷ்கரின் ஆட்சியின் நடுக் காலத்திற்குப் பிறகு குசான மொழி மரபுகளுடன் (பின்பற்றப்பட்ட கிரேக்க எழுத்துமுறையில்), கிரேக்கத்தில் உள்ள மரபுகள் (கிரேக்க எழுத்துமுறை) மற்றும் பிராகிருத (கரோஷ்டி எழுத்துமுறை) மரபுகளையும் சேர்த்துப் பயன்படுத்தினர்.

முதலாம் கனிஷ்கரின் தொடக்க கால தங்க நாணயம். இதில் கிரேக்க மொழி மரபும், எலனிய தெய்வமான ஈளியோசும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆண்டு அண். பொ. ஊ. 120.
முன்புறம்: கனிஷ்கர் கனமான குசான மேலங்கி மற்றும் நீண்ட காலணிகளுடன் உள்ளார். அவரது தோள் பட்டையில் இருந்து தீ சுவாலைகள் வெளிப்படுகின்றன. இடது கையில் ஓர் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். ஒரு பீடத்தின் மீது ஒரு பழியிடலைக் கொடுக்கிறார். கிரேக்க மரபு:
ΒΑΣΙΛΕΥΣ ΒΑΣΙΛΕΩΝ ΚΑΝΗϷΚΟΥ
பாசிலேயுசு பாசிலியோன் கனிஷ்கோய்
"மன்னர்களின் மன்னனான கனிஷ்கனின் [நாணயம்]".
பின்புறம்: எலனிய பாணியில் நின்று கொண்டிருக்கும் ஈளியோசு வலது கையில் ஆசீர்வதிக்கிறார். கிரேக்க எழுத்துமுறையில் உள்ள மரபு:
ΗΛΙΟΣ ஈளியோசு
இடது புறத்தில் கனிஷ்கரின் முத்திரை (தம்கா) காணப்படுகிறது.

"சரதுசம் மற்றும் அப்பகுதியில் வளர்ந்து வந்த இரண்டு சமயங்களான கிரேக்க வழிபாடுகள் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட பல உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை" குசானர்கள் பின்பற்றினர்.[57] வீமா தக்தோவின் காலம் முதல் பல குசானர்கள் பௌத்தப் பண்பாட்டின் காரணிகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர். எகிப்தியர்களைப் போலவே எலனிய இராச்சியங்களின் கிரேக்கப் பண்பாட்டின் எஞ்சியிருந்த வலிமையான பண்புகளையும் பின்பற்ற ஆரம்பித்தனர். குறைந்தது பகுதியளவாவது எலனிய மயமாக்கப்பட்டனர். கனிஷ்கரின் தந்தையான மகா குசானப் பேரரசரான வீமா காட்பீசஸ் இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைத் தழுவினார். இக்காலத்தின் போது அச்சிடப்பட்ட நாணயங்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது என நம்பப்படுகிறது.[11] தொடர்ந்து வந்த குசானப் பேரரசர்கள் பௌத்தம், சரதுசம் மற்றும் இந்து சமய சைவப் பிரிவு உள்ளிட்ட ஒரு பரவலான வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

குசானர்களின் ஆட்சியானது இந்தியப் பெருங்கடலின் கடல் வணிகத்தை, பட்டுப் பாதையின் வணிகத்துடன் நீண்ட காலமாக நாகரீகப்படுத்தப்பட்ட சிந்து சமவெளியின் வழியாக இணைத்தது. இந்த அரச மரபின் உச்ச நிலையின் போது இவர்கள் தோராயமாக தற்போதைய உசுபெக்கிசுத்தான், ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் வட இந்தியா என ஏரல் கடல் வரை பரவியிருந்த ஒரு நிலப்பரப்பை கட்டிறுக்கமற்ற முறையில் ஆட்சி நடத்தினர்.[56]

இத்தகைய ஒரு பரந்த நிலப்பரப்பில் கட்டிறுக்குமற்ற ஒற்றுமை மற்றும் ஒப்பீட்டளவிலான அமைதியான நிலையானது நீண்ட தூர வணிகத்தை ஊக்குவித்தது. சீனா பட்டுகளை உரோமுக்குக் கொண்டு வந்தது. செழித்து வந்த நகர மையங்களை சரம் போன்ற அமைப்பில் உருவாக்கியது.[56]

நிலப்பரப்பு விரிவாக்கம்

சுரக் கோதல், குசானர்களின் கோடை கால தலைநகரான பாக்ராம், முதலாம் கனிஷ்கரின் கீழான தலை நகரமான பெசாவர், தக்சசீலா மற்றும் குசானர்களின் குளிர் கால தலைநகரான மதுரா என விரிவடைந்த பகுதியில் நீண்ட காலத்திற்கு ஒரு குசான ஆட்சி இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன என வரலாற்றாளர் ரோசன்பீல்டு குறிப்பிடுகிறார்.[58] சத்ரப்பாக்கள் (பிராமி எழுத்துமுறை: , க்சத்ரப்பா, "சத்ரப்புகள்") மற்றும் மகாசத்ரப்பாக்கள் (பிராமி எழுத்துமுறை: , மகாசத்ரப்பா, "மகா சத்ரப்புகள்")ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அரசாங்க வடிவத்தை முதன் முதலாகக் குசானர்கள் அறிமுகப்படுத்தினர்.[59]

குவாரசமியா, அதன் தலைநகரமான தோப்ரக்-கலா,[58][60] கோசாம்பி (அலகாபாத் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுகளின் படி),[58] சாஞ்சி மற்றும் சாரநாத் (குசான மன்னர்களின் பெயர்கள் மற்றும் காலங்களையுடைய கல்வெட்டுகள்),[58] மால்வா, மகாராட்டிரம்,[61] மற்றும் ஒடிசா (குசான நாணயங்களின் மாதிரிகள் மற்றும் பெரிய குசான நாணயக் குவியல்கள் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன) உள்ளிட்ட அநேகமாக இவர்கள் ஆட்சியில் இருந்ததாகக் குறிப்பிடப்படும் பிற பகுதிகளும் உள்ளன.[58]

பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டில் ஐரோவாசியாவின் நான்கு பேரரசுகளைக் காட்டும் வரைபடம். "ஒரு காலத்திற்கு குசானப் பேரரசானது முதன்மையான நாகரிகங்களின் மையப் பகுதியாகத் திகழ்ந்தது.[33]

20ஆம் நூற்றாண்டு இந்தியத் தேசியவாதத்தால் குறிப்பிடப்படும் ஒரு மகா இந்திய கோட்பாடு என்பதன் படி தென்கிழக்கு ஆசியாவை நோக்கி இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இந்தியர்கள் இடம் பெயர்ந்ததற்கான ஒரு விளக்கமாக பொ. ஊ. முதலாம் நூற்றாண்டில் நடைபெற்ற குசானப் படையெடுப்புகள் குறிப்பிடப்படுகின்றன. எனினும், இந்த கருது கோளுக்கு ஆதரவளிக்க எந்த ஆதாரமும் இல்லை.[62]

இரபதக் கல்வெட்டின் 4 முதல் 7 வரையிலான வரிகள், கனிஷ்கரின் ஆட்சியின் கீழ் இருந்த நகரங்களைக் குறிப்பிடுகின்றன.[note 6] இதில் ஆறு பெயர்கள் அடையாளப்படுத்தக் கூடியவையாக உள்ளன. அவை உஜ்ஜைன், குந்தினா, சாகேதம், கோசாம்பி, பாடலிபுத்திரம், மற்றும் சம்பா (எனினும் எழுத்துக்களானவை சம்பா கனிஷ்கரின் கட்டுப்பாட்டில் இருந்ததா அல்லது அவரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்பது குறித்து தெளிவான தகவலைத் தரவில்லை) ஆகியவையாகும்.[63][note 1][64][65] பௌத்த நூலான சிறீதர்மபீடகநிதனசூத்திரமானது பாடலிபுத்திரத்தை கனிஷ்கர் வென்றதைக் குறிப்பிடுகிறது. இது அந்நூலின் பொ. ஊ. 472ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சீன மொழி பெயர்ப்பின் மூலம் அறியப்படுகிறது.[66] நருமதைக்குத் தெற்கே பௌனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உருபியம்மா என்ற ஒரு மகா சத்ரப்பின் ஓர் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டானது குசான கட்டுப்பாடானது இந்த இடம் வரை தெற்கே விரிவடைந்திருந்தது என்று பரிந்துரைக்கிறது. எனினும், மாறாக இப்பகுதிகள் மேற்கு சத்ரபதிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவும் வாய்ப்பிருந்துள்ளது.[67]

வங்காளம் வரையிலான கிழக்கு நோக்கிய விரிவு: சமதாத இராச்சியத்தின் மன்னன் வீர சதமரனின் நாணயம். கனிஷ்கரின் குசான நாணயத்தின் நகலாக இது உள்ளது. இதிலுள்ள எழுத்துக்கள் பொருளற்றவையாக உள்ளன. இடம்: வங்காளம், ஆண்டு: அண். பொ. ஊ. 2ஆம் - 3ஆம் நூற்றாண்டு.[68]

கிழக்கில் பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட புத்தரின் "ஞான அரியணைக்குக்" கீழ் பிற தங்க படையல்களுடன் புத்தகயையில் குவிஷ்கரின் அலங்கரிக்கப்பட்ட நாணயங்கள் அர்ப்பணிக்கப்பட்டன. இக்காலத்தின் போது அப்பகுதியில் இருந்த நேரடி குசான செல்வாக்கை இது பரிந்துரைக்கிறது.[69] வங்காளம் வரையிலும் ஏராளமான அளவில் குசானர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய வங்காள அரசான சமதாத இராச்சியமானது முதலாம் கனிஷ்கரின் நாணயத்தின் நகல் நாணயங்களை வெளியிட்டது. எனினும், வணிக தாக்கத்தின் ஒரு விளைவாக மட்டுமே இது ஒரு வேளை நடைபெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[70][68][71] ஒடிசாவிலும் கூட ஏராளமான அளவில் குசான நாணயங்களின் நகல் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[72]

மேற்கே குசான அரசானது பலூசிஸ்தானின் பரத அரசு, மேற்கு பாக்கித்தான், ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான், உசுபெக்கிசுத்தான், மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. துருக்மெனிஸ்தான் அதன் குசான பௌத்த நகரான மெர்வுக்காக அறியப்படுகிறது.[58]

வடக்கு நோக்கி, பொ. ஊ. முதலாம் நூற்றாண்டில், குச்சா நகர அரசுக்கு ஆதரவளிப்பதற்காக தாரிம் வடிநிலத்திற்கு குஜுலா கத்பிசசு ஓர் இராணுவத்தை அனுப்பினார். குச்சாவானது அப்பகுதி மீதான சீன படையெடுப்பை எதிர்த்து வந்தது. ஆனால், கத்பிசசின் இராணுவமானது சிறிய சண்டைகளுக்குப் பிறகு பின் வாங்கியது.[73] பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டில் கனிஷ்கரின் தலைமையிலான குசானர்கள் தாரி வடிநிலத்திற்குள் பல்வேறு ஊடுருவல்களை நடத்தினர். அங்கு இவர்கள் சீனர்களுடன் பல்வேறு வகையான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். கனிஷ்கர் தாரிம் வடிநிலத்தின் பகுதிகளை கட்டுபாட்டில் வைத்திருந்தார். பொதுவாகத் தெரிந்த வரையில் ஒரு வேளை குசானர்களின் மூதாதையர்களாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ள உயேசியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பண்டைய பகுதிகளை ஒத்ததாக இது இருந்தது. கஷ்கர், எர்கந்து, மற்றும் கோத்தன் ஆகிய பகுதிகளின் நாணயங்கள் மீது குசான தாக்கமானது இருந்தது.[5] சீன நூல்களின் படி, குசானர்கள் (இவர்கள் சீன நூல்களில் உயேசி என்று குறிப்பிடப்படுகின்றனர்) ஓர் ஆன் இன இளவரசியை வேண்டினர். சீன அரசவைக்கு இவர்கள் பரிசுப் பொருட்களை அனுப்பியிருந்த போதும் கூட இவர்களது வேண்டுதல் நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக பொ. ஊ. 90இல் 70,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் பான் சாவோ என்ற தளபதிக்கு எதிராகக் குசானர்கள் அணி வகுத்தனர். ஆனால் சிறிய சீனப் படையால் தோற்கடிக்கப்பட்டனர். குசானர்கள் மற்றும் சீனத் தளபதி பான் சாவோவுக்கு இடையிலான யுத்தங்களைப் பற்றி சீன நூல்கள் குறிப்பிடுகின்றன.[65] உயேசி பின் வாங்கினர். சீனப் பேரரசுக்கு திறை செலுத்தினர். தாரிம் வடிநிலத்தின் அனைத்து பகுதிகளும் இறுதியாக பான் சாவோவால் வெல்லப்பட்டன. பின்னர், யுவான்சு (பொ. ஊ. 114-120) காலத்தின் போது கஷ்கரின் மன்னனாக தங்களிடம் ஓர் அகதியாக வந்திருந்த சென்பனை பதவியில் அமர்த்த ஓர் இராணுவப் படையைக் குசானர்கள் அனுப்பினர்.[74]

குசானர் கோட்டைகள்

குசானர்களின் ஏராளமான கோட்டைகள், குறிப்பாக பாக்திரியாவில், அறியப்பட்டுள்ளன. கம்பிர் தேபே என்ற இடத்தில் உள்ளதைப் போல எலனியக் கால அரண்களின் மீது இவை பெரும்பாலும் மீண்டும் கட்டமைக்கப்பட்டன.[75] இவை பொதுவாக வில்லாளர்களுக்கென அம்பு வடிவிலான ஓட்டைகளை உடையவையாக உள்ளன.[75]

வரலாறு

அண். பொ. ஊ. 30 முதல் அண். பொ. ஊ. 375 வரை சுமார் மூன்று நூற்றாண்டுகள் கொண்ட ஒரு காலத்திற்கு, கிடாரிகளின் படையெடுப்புகள் வரை குசான ஆட்சியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தோராயமாக மேற்கு சத்ரபதிகள், சாதவாகனர், மற்றும் குப்தப் பேரரசின் முதலாம் ஆட்சியாளர்களின் அதே காலத்தில் இவர்கள் ஆட்சி செய்தனர்.[சான்று தேவை]

குஜுலா கத்பிசசு (அண். 30 – அண். 80)

...திலக் [குஜுலா கத்பிசசு] என்று பெயரிடப்பட்டிருந்த குயிசுவாங்கின் இளவரசன் [எலவூர்] பிற நான்கு சிகோவு பழங்குடியினங்களைத் தாக்கி அழித்தான். தன்னைத் தானே மன்னனாக நிறுவிக் கொண்டான், மற்றும் இவனது அரசமரபானது குயிசுவாங் [குசான] மன்னனின் அரசமரபு என்று அழைக்கப்படுகிறது. இவன் அன்சி [இந்தோ-பார்த்தியா] மீது படையெடுத்தான். கவோபு [காபுல்] பகுதியை வென்றான். புதா [பக்தியா] மற்றும் சிபின் [கபிசா மற்றும் காந்தாரம்] ஆகியவற்றின் ஒட்டு மொத்த இராச்சியங்களையும் கூட இவன் தோற்கடித்தான். சியுசியுகுவே [குஜுலா கத்பிசசு] இறக்கும் போது அவனுக்கு 80 வயதுக்கும் மேல் ஆகி இருந்தது."

—கோவு அன்சு; நூல்: பிந்தைய ஆனின் நூல்.[54]

குஜுலா கத்பிசசின் இந்தப் படையெடுப்புகள் அநேகமாக பொ. ஊ. 45 மற்றும் 60க்கு இடைப்பட்ட ஒரு காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. குசானப் பேரரசுக்கான அடித் தளத்தை இது அமைத்தது. இவரது வழித் தோன்றல்களால் இது வேகமாக விரிவாக்கப்பட்டது.[சான்று தேவை]

குஜுலா நாணயங்களின் ஒரு விரிவான தொடர்ச்சியை வெளியிட்டார். குறைந்தது இரு மகன்களுக்குத் தந்தையானார். முதலாம் மகன் சதஷ்கனன் ஆவான். இவன் இரண்டு கல்வெட்டுகளின் மூலம் மட்டுமே அறியப்படுகிறான். இதில் குறிப்பானது இரபதக் கல்வெட்டு ஆகும். பொதுவாகத் தெரிந்த வரையில் இவன் என்றுமே ஆட்சி செய்யவில்லை. இரண்டாவது மகன் பொதுவாகத் தெரிகின்ற வீமா தக்தோ ஆவான்.[சான்று தேவை]

குஜுலா கத்பிசசு கனிஷ்கரின் கொள்ளுத் தாத்தா ஆவார்.[சான்று தேவை]

வீமா தக்து அல்லது சதஷ்கனன் (அண். 80 – அண். 95)

வீமா தக்தோ (பண்டைய சீனம்: 閻膏珍 எங்கவோசன்) இரபதக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். மற்றொரு மகனான சதஷ்கனன் ஓடியின் மன்னனான சேனவர்மனின் ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். வீமா தக்தோ வீமா கத்பிசசு மற்றும் முதலாம் கனிஷ்கருக்கு முன் ஆட்சியில் இருந்தவர் ஆவார். தெற்காசியாவின் வடமேற்குப் பகுதிக்குள் குசானப் பேரரசை இவர் விரிவுபடுத்தினார். கோவு அன்சு குறிப்பிடுவதாவது:

"இவனது மகன் எங்கவோசன் [அநேகமாக வேமா தக் (து) அல்லது, ஒரு வேளை, இவனது சகோதரன் சதஷ்கனன்] இவனது இடத்தில் மன்னனாக வந்தான். இவன் தியான்சுவைத் [வடமேற்கு இந்தியா] தோற்கடித்தான். அப்பகுதியை மேற்பார்வையிடவும், தலைமை தாங்குவதற்கும் தளபதிகளை அமர்த்தினான். இதற்குப் பிறகு உயேசி மட்டு மீறிய அளவுக்கு செல்வம் படைத்தவர்களாக உருவாயினர். அனைத்து இராச்சியங்களும் [தங்களது மன்னனை] குயிசுவாங் [குசான] மன்னன் என்று அழைக்கின்றன. ஆனால் ஆன் இவர்களின் உண்மையான பெயரான தா உயேசி என்ற பெயரிலேயே அழைக்கின்றனர்."

—கோவு அன்சு[54]

வீமா கத்பிசசு (அண். 95 – அண். 127)

வீமா கத்பிசசு (குசான மொழி: Οοημο Καδφισης) என்பவர் தோராயமாக பொ. ஊ. 95 முதல் 127 வரை ஆட்சி புரிந்த ஒரு குசானப் பேரரசன் ஆவார். இவர் சதஷ்கனனின் மகன் மற்றும் குஜுலா கத்பிசசின் பேரன் ஆவார். முதலாம் கனிஷ்கரின் தந்தை இவர் தான். இக்குறிப்புகள் இரபதக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.[சான்று தேவை]

வீமா கத்பிசசு பாக்திரியாவில் தனது வெற்றிகளின் மூலம் குசான நிலப்பரப்பை விரிவாக்கினார். நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக்களின் ஒரு விரிவான தொடர்ச்சியை இவர் வெளியிட்டார். ஏற்கனவே இருந்த தாமிர மற்றும் வெள்ளி நாணயங்களுடன் சேர்த்து இவர் தங்க நாணயங்களையும் வெளியிட்டார்.[சான்று தேவை]

முதலாம் கனிஷ்கர் (அண். 127 – அண். 150)

மதுராவின் கனிஷ்கர் சிலை
நீண்ட மேலங்கியுடனும், காலணிகளுடனும் உள்ள கனிஷ்கரின் சிலை. ஒரு கதாயுதத்தையும், ஒரு வாளையும் கொண்டுள்ளார். இடம் மதுராவின் அரசு அருங்காட்சியகம். மேலங்கிக்குக் கீழ் ஒரு கல்வெட்டானது பொறிக்கப்பட்டுள்ளது.
நடு பிராமி எழுத்துமுறையில் உள்ள கல்வெட்டு:

மகாராசா இராசாதிராசா தேவபுத்திரன் கனிஷ்கர்
"மகா மன்னன், மன்னர்களின் மன்னர், கடவுளின் மகன், கனிஷ்கர்".[77]
மதுரா கலை, அரசு அருங்காட்சியகம், மதுரா

நான்காவது குசான மன்னனான மகா கனிஷ்கரின் ஆட்சியானது சுமார் 23 ஆண்டுகளுக்கு அண். பொ. ஊ. 127இல் இருந்து நீடித்தது.[78] இவர் அரியணைக்கு வந்த போது, கனிஷ்கர் ஒரு பெரும் நிலப்பரப்பை (கிட்டத் தட்ட ஒட்டு மொத்த வட இந்தியாவையும்), தெற்கே உஜ்ஜைன் மற்றும் குந்தினா வரையிலும், கிழக்கே பாடலிபுத்திரத்தைத் தாண்டியும் ஆண்டார். இரபதக் கல்வெட்டின் படி:

ஒன்றாம் ஆண்டில், கூனதீனோ (கெளந்தினி, குந்தினா) மற்றும் ஓசனோ நகரம் (ஓசனே, உஜ்ஜைன்) மற்றும் சகேதா நகரம் (சாகேதம்) மற்றும் கொசம்போ நகரம் (கோசாம்பி) மற்றும் பாலபோத்ரோ நகரம் (பாடலிபுத்திரம்) மற்றும் சிறீ-தம்போ நகரம் (சிறீ-சாம்பா) வரையிலும் உள்ளிட்ட இந்தியாவிலும், ஆளும் வர்க்கத்தினரின் ஒட்டு மொத்த நாட்டிலும் இருந்த எந்த ஓர் ஆட்சியாளர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் (இவரது) எண்ணத்திற்கு அடி பணிந்தனர் மற்றும் இவர் ஒட்டு மொத்த இந்தியாவையும் (இவரது) எண்ணத்திற்கு அடி பணிய வைத்தார் என்று அறிவிக்கப்படுகிறது.

—இரபதக் கல்வெட்டு, வரிகள் 4 - 8

இவரது நிலப்பரப்பானது இரண்டு தலைநகரங்களில் இருந்து நிர்வகிக்கப்பட்டது: அவை புருசபுரம் (வடமேற்கு பாக்கித்தானில் உள்ள தற்போதைய பெசாவர்) மற்றும் வட இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா. (இராசா தாப்புடன் சேர்த்து) இவர் பெரிய, பண்டைய பட்டிண்டா கோட்டையை (கிலா முபாரக்) இந்திய பஞ்சாபின் நவீன நகரமான பட்டிண்டாவில் கட்டியதற்காகவும் கூட குறிப்பிடப்படுகிறார்.[சான்று தேவை]

குசானர்கள் பாக்ராம் என்ற இடத்தில் ஒரு கோடை கால தலைநகரையும் கூட கொண்டிருந்தனர். இந்த இடம் அக்காலத்தில் கபிசா என்று அறியப்பட்டது. இங்கு கிரேக்கம் முதல் சீனா வரையிலும் இருந்து பெற்ற கலை வேலைப்பாடுகளை உள்ளடக்கிய "பாக்ராம் பொக்கிசமானது" கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரபதக் கல்வெட்டின் படி, கனிஷ்கர் வீமா கத்பிசசின் மகனும், சதஷ்கனனின் பேரனும், குஜுலா கட்பிசசின் கொள்ளுப் பேரனும் ஆவார். ஆரி பால்கின் சிறந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு கனிஷ்கரின் சகாப்தமானது பொதுவாக 127இல் தொடங்கியது என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[20][21] கனிஷ்கரின் சகாப்தமானது சுமார் ஒரு நூற்றாண்டுக்கு குசானர்களால் ஒரு நாட்காட்டி போல குறிப்பெடுக்கப் பயன்படுத்தப்பட்டது. குசானப் பேரரசின் வீழ்ச்சி வரை இந்நிலை தொடர்ந்தது.[சான்று தேவை]

குவிஷ்கன் (அண். 150 – அண். 180)

கனிஷ்கரின் இறப்பில் இருந்து முதலாம் வாசுதேவனின் ஆட்சி தொடங்கும் வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒரு குசானப் பேரரசராகக் குவிஷ்கன் (குசான மொழி: Οοηϸκι, "ஊயிஷ்கி") திகழ்ந்தார். கிடைக்கப் பெறுகின்ற சிறந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பொ. ஊ. 150ஆம் ஆண்டு இவர் ஆட்சியைத் தொடங்கினார் என்று கருதப்படுகிறது. இவரது ஆட்சிக் காலமானது செலவீனங்களைக் குறைத்து, பேரரசை நிலை நிறுத்தும் ஒரு காலமாகத் திகழ்ந்தது. குறிப்பாக மதுரா நகரத்தின் மீது முனைப்புடன் கட்டுப்பாட்டை செலுத்துவதற்காக இவரது ஆட்சிக் காலத்தின் தொடக்க காலத்தில் இவர் நேரத்தையும், ஆற்றலையும் ஒதுக்கினார்.[சான்று தேவை]

முதலாம் வாசுதேவன் (அண். 190 – அண். 230)

"பெரும் குசானர்களில்" கடைசியானவர் முதலாம் வாசுதேவன் (குசான மொழி: Βαζοδηο "பசோதியோ", சீன மொழி: 波調 "போதியாவோ") ஆவார். கனிஷ்கரின் சகாப்தத்தின் போது ஆண்டு 64 முதல் 98 வரையிலான காலமிடப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆட்சிக் காலமானது குறைந்தது பொ. ஊ. 191 முதல் 225 வரை நீடித்தது என்பதைப் பரிந்துரைக்கின்றன. இவர் தான் கடைசி பெரும் குசானப் பேரரசர் ஆவார். இவரது ஆட்சியின் முடிவானது வடமேற்கு இந்தியா வரையிலான சாசானியர்களின் படையெடுப்பு மற்றும் தற்போதைய ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் பொ. ஊ. 240 வாக்கில் குசான-சாசானிய இராச்சியம் அலல்து குசான்ஷாக்கள் நிறுவப்பட்டதுடன் ஒத்துப் போகிறது.[சான்று தேவை]

பொ. ஊ. 350இல்
தெற்கு ஆசியா
மாளவர்கள்
சாசானிய
இந்த்
தவகர்
அபிரர்
சகத்தான்
துரான்
மக்ரான்
 
துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் சிறு குசானர்களின் அமைவிடம் மற்றும் சம கால தெற்காசிய அரசியல் அமைப்புகள் அண். பொ. ஊ. 350இல்.[79]

வசிஷ்கன் (அண். 247 – அண். 267)

வசிஷ்கன் என்பவன் இரண்டாம் கனிஷ்கனைத் தொடர்ந்து ஒரு 20 ஆண்டு ஆட்சிக் காலத்தைக் கொண்டிருந்ததாகத் தோன்றுகிற ஒரு குசானப் பேரரசன் ஆவான். இவனது ஆட்சியானது மதுராவிலும், காந்தார தேசத்திலும், தெற்கே சாஞ்சி (விதிசாவுக்கு அருகில்) வரையிலும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இவனது பெயரையுடைய பல கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவை ஒரு சாத்தியத்திற்குரிய வகையியே இரண்டாம் கனிஷ்கனின் சகாப்தத்தின் ஆண்டு 22 ("வக்சுசனனின்" சாஞ்சி கல்வெட்டு - அதாவது வசிஷ்க குசானன்) மற்றும் ஆண்டு 28 (வசஸ்கனின் சாஞ்சி கல்வெட்டு - அதாவது வசிஷ்கன்) ஆகியவற்றுக்குக் காலமிடப்படுகின்றன.[80][81]

சிறு குசானர்கள் (பொ. ஊ. 270 – 350)

மேற்கு (குசான-சாசானிய இராச்சியத்திடம் பாக்திரியாவை இழந்தது) மற்றும் கிழக்கில் (குப்தப் பேரரசிடம் மதுராவை இழந்தது) ஆகிய நிலப்பரப்பு இழப்புகளைத் தொடர்ந்து பல்வேறு சிறு குசானர்கள் அறியப்படுகின்றனர். தக்சசீலத்தைத் தங்களது தலைநகராகக் கொண்டு பஞ்சாப் பகுதியை உள்ளூர் அளவில் இவர்கள் ஆண்டனர். இம்மன்னர்கள் இரண்டாம் வாசுதேவன் (270 – 300), மாகி (300 – 305), சாகா (305 – 335) மற்றும் கிபுனாடா (335 – 350) ஆகியோராவர்.[80] இவர்கள் அநேகமாகக் குப்தப் பேரரசுக்கு திறை செலுத்தியவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது. குசான ஆட்சியின் கடைசி எஞ்சியவற்றை கிடாரிகள் படையெடுப்பின் மூலம் அழித்தது வரை இந்நிலை தொடர்ந்தது.[80]

குசான தெய்வங்கள்

ஒரு குசான பக்தனுடன் குமரன்/கார்த்திகேயன், பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டு
ஒரு போதிசத்துவரிடம் காணிக்கை அளிக்கும் குவிஷ்கன் என்று கூறப்படும் குசான இளவரசன்.[82]
குசான பக்தர்களால் வழிபடப்படும் சிவலிங்கம், அண். பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டு

குசான சமய வழிபாடானது மட்டு மீறிய அளவுக்கு வேறுபட்ட கடவுள்களைக் கொண்டிருந்தது. தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட இவர்களது நாணயங்களின் மூலம் இது தெரிய வருகிறது. இந்த நாணயங்கள் 30க்கும் மேற்பட்ட வேறுபட்ட கடவுள்களைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் இவர்களின் சொந்த ஈரானிய, மேலும் கிரேக்க மற்றும் இந்தியக் கடவுள்களையும் கொண்டிருந்தன. குசான நாணயங்கள் குசான மன்னர்கள், புத்தர் மற்றும் இந்தோ-ஆரிய மற்றும் ஈரானியக்[83] கடவுள்களின் உருவங்களைக் கொண்டிருந்தன. கிரேக்கப் பெயர்களுடன் கிரேக்க தெய்வங்கள் தொடக்க கால நாணயங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. கனிஷ்கரின் ஆட்சியின் போது நாணயங்களில் பயன்படுத்தப்பட்ட மொழியானது பாக்திரியமானது. எனினும், அனைத்து மன்னர்களுக்கும் கிரேக்க எழுத்து முறையே பின்பற்றப்பட்டது. குவிஷ்கருக்குப் பிறகு இரண்டு தெய்வங்கள் மட்டுமே நாணயங்களின் தோன்றுகின்றனர்: அவர்கள் அர்தோக்சோ மற்றும் ஒயேசோ ஆவர்.[84][85]

நாணயங்களில் காட்டப்பட்டுள்ள ஈரானிய தெய்வங்கள்:

  • அர்தோக்சோ (Αρδοχþο): அசி வங்குகி
  • அசேயிக்சோ (Aþαειχþo, "சிறந்த நன்னடத்தை"): அசா வகிஷ்டா
  • அத்சோ (Αθþο, "அரச நெருப்பு"): அதர்[84]
  • பர்ரோ (Φαρρο, "அரசப் பேரழகு"): குவரேனா
  • இலரூவஸ்பா (Λροοασπο): திரவஸ்பா
  • மனவோபகோ (Μαναοβαγο): வோகு மனா[86]
  • மாவோ (Μαο, சந்திர தெய்வம்): மா
  • மித்ரோ மற்றும் வேறுபட்ட கடவுள்கள் (Μιθρο, Μιιρο, Μιορο, Μιυρο): மித்திரன்
  • மோசுதூவனோ (Μοζδοοανο, "வெற்றியாளர் மஸ்தா?"): மஸ்தா *வனா[84][87]
  • நனா (Νανα, Ναναια, Ναναϸαο): ஆசிய நனா, சோக்திய நினி, அனகிதா ஆகியவற்றின் வேறுபாடுகள்[84]
  • ஓவதோ (Οαδο): வதா
  • ஓவக்சோ (Oαxþo): "ஆக்சசு"
  • ஊரோமோஸ்தோ (Οορομοζδο): அகுரா மஸ்தா
  • ஓர்லக்னோ (Οραλαγνο): வேரேத்ரக்னா, ஈரானியப் போர்க் கடவுள்
  • ரிஷ்தி (Ριϸτι, "மதிப்பிற்குரிய"): அர்ஷ்தத்[84]
  • சவோரியோரோ (Ϸαορηορο, "சிறந்த அரச சக்தி", மாதிரி ஆட்சியாளர்): க்சத்ர வைர்யா[84]
  • தியேரோ (Τιερο): திர்

கிரேக்கப் புராணங்கள் மற்றும் எலனிய கூட்டு வழிபாட்டைச் சேர்ந்த தெய்வங்களின் பிரதிநிதித்துவம்:

  • சவூ (Ζαοου):[88] சியுசு
  • எளியோசு (Ηλιος): ஈளியோசு
  • எபேசுதோசு (Ηφαηστος): எப்பெசுடசு
  • ஓ நெந்தோ (Οα νηνδο): நைக்கே
  • சளீன் (Ϲαληνη):[89][90][91][92] செளீன்
  • அனேமோசு (Ανημος): அனேமோசு
  • எராகிளோ (Ηρακιλο): ஹெராக்கிள்ஸ்
  • சரபோ (Ϲαραπο): கிரேக்க-எகிப்தியக் கடவுள் சரபிசு

நாணயங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள இந்திய தெய்வங்கள்:[93]

  • போத்தோ (Βοδδο): புத்தர்
  • சாகமனோ போத்தோ (Ϸακαμανο Βοδδο): சாக்கியமுனி புத்தர்
  • மெத்ரகோ போத்தோ (Μετραγο Βοδδο): போதிசத்துவர் மைத்திரேயர்
  • மாசேனோ (Μαασηνο): மகாசேனன்
  • ஸ்கந்தோ-கொமாரோ (Σκανδο-kομαρο): ஸ்கந்தன்-குமரன்
  • பிசாகோ: விசாகா[93]
  • உமோ: உமா, சிவனின் மனைவி.[93]
  • ஒயேசோ (Οηϸο): நீண்ட காலமாக சிவனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்பட்டது,[94][95][96] ஆனால் சிவனுடன் இணைக்கப்பட்ட அவெஸ்தா வாயுவாகவும் கூட அடையாளப்படுத்தப்படுகிறது.[97][98]
  • குவிஷ்கனின் இரண்டு தாமிர நாணயங்கள் "கணேசா" என்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளன. எனினும், தும்பிக்கையுடைய கணேசரின் பொதுவான வடிவத்தைச் சித்தரிப்பதற்குப் பதிலாக பின் புறமாக இழுக்கப்பட்ட ஒரு முழு நீள வில்லை அம்புடன் வைத்திருக்கும் ஒரு வில்லாளரின் உருவத்தைக் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. இது உருத்திரனின் ஒரு பொதுவான சித்தரிப்பாகும். ஆனால், இந்த இரு நாணயங்களையும் ஒப்பிடும் போது இவர் பொதுவாக சிவனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

குசானர்களும், பௌத்தமும்

அகின் போசு தூபியானது பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டில் குசானர்களுக்குக் கீழ் அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது குசான மற்றும் உரோமைப் பேரரசர்களின் நாணயங்களைக் கொண்டுள்ளது.
தொடக்க கால மகாயன பௌத்தத்தின் மூவர். இடது புறமிருந்து வலது புறம், ஒரு குசான பக்தன், மைத்திரேயர், புத்தர் அவலோகிதர், மற்றும் ஒரு பௌத்தத் துறவி. ஆண்டு 2ஆம்-3ஆம் நூற்றாண்டு, இடம் சோதோரக்.[105]

தாங்கள் இடம் மாற்றிய இந்தோ-கிரேக்க இராச்சியத்தின் கிரேக்க-பௌத்தப் பாரம்பரியங்களைக் குசானர்கள் பெற்றனர். பௌத்த நிலையங்களுக்கு இவர்களின் புரவலமானது ஒரு வணிக சக்தியாக இவர்கள் வளர்வதற்கு அனுமதியளித்தது.[106] முதலாம் நூற்றாண்டின் நடுப் பகுதி மற்றும் 3ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு இடையில் குசானர்களால் புரவலத் தன்மை பெற்ற பௌத்தமானது சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்குப் பட்டுப் பாதை வழியாக விரிவடைந்தது.[சான்று தேவை]

காஷ்மீரில் ஒரு மகா பௌத்த மாநாட்டைக் கூட்டியதற்காகப் பௌத்தப் பாரம்பரியத்தில் கனிஷ்கர் புகழ் பெற்றுள்ளார். இப்பகுதியில் இவரது முந்தைய ஆட்சியாளர்களுடன், இந்தோ-கிரேக்க மன்னன் மெனாந்தர் (மிலிந்தன்) மற்றும் இந்தியப் பேரரசர்களான அசோகர் மற்றும் ஹர்ஷவர்தனர் ஆகியோருடன் பௌத்ததால் அதன் மகா கொடையாளர்களில் ஒருவராகக் கனிஷ்கர் கருதப்படுகிறார்.[சான்று தேவை]

பொ. ஊ. முதலாம் நூற்றாண்டின் போது பௌத்த நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு, துறவிகள் மற்றும் அவர்களது வணிகப் புலவர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், சீனா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து சென்ற இந்த நில வழிகளின் பக்கவாட்டில் மடாலயங்களும் நிறுவப்பட்டன. பௌத்த நூல்களின் முன்னேற்றத்துடன் இது ஒரு புதிய எழுத்து மொழியான காந்தாரம் உருவாகக் காரணமானது. காந்தாரமானது கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் வடக்கு பாக்கித்தானை உள்ளடக்கியிருந்தது. காந்தாரி மொழியை உள்ளடக்கிய பல பௌத்த நீண்ட தாள் சுருள்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.[107]

குவிஷ்கரின் ஆட்சிக் காலமானது அமிதாப புத்தர் குறித்து முதன் முதலாக அறியப்பட்ட கல்வெட்டு ஆதாரத்துடன் ஒத்துப் போகிறது. ஓர் 2ஆம் நூற்றாண்டு சிலையின் அடிப் பகுதியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிலை கோவிந்தோ நகரில் கண்டெடுக்கப்பட்டது. இது தற்போது மதுரா அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்சிலையானது "குவிஷ்கரின் ஆட்சியின் 28ஆம் ஆண்டிற்குக்" காலமிடப்பட்டுள்ளது. ஒரு வணிகர்களின் குடும்பத்தால் "அமிதாப புத்தருக்காக" அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குவிஷ்கரே மகாயன பௌத்தத்தைப் பின்பற்றினார் என்பதற்கு சில ஆதாரங்களும் கூட உள்ளன. ஆசுலோ மற்றும் இலண்டனில் வைக்கப்பட்டுள்ள தனியார் கையெழுத்துப் பிரதி சேகரிப்பான சோயேன் சேகரிப்பில் உள்ள ஒரு சமசுகிருத கையெழுத்துப் பிரதியின் துணுக்கில் "மகாயன பௌத்தத்தை நேர் வழியில்" செலுத்தியவர் குவிஷ்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[108]

12ஆம் நூற்றாண்டு வரலாற்று நூலான இராஜதரங்கிணி குசான மன்னர்களின் ஆட்சி மற்றும் பௌத்தத்திற்கு அவர்களது கொடை ஆகியவற்றை விளக்கமாகக் குறிப்பிடுகிறது:[109][110]

தங்களது சொந்த பட்டங்களால் பெயரிடப்பட்ட நகரங்களை நிறுவிய ஹுஸ்கா, ஜுஸ்கா மற்றும் கனிஷ்கா என்ற பெயரிடப்பட்ட மூன்று மன்னர்கள் இதே நிலத்தை ஒருகாலத்தில் ஆண்டு வந்தனர் (...) துருக்கிய இனத்தை சேர்ந்தவர்களாக இந்த மன்னர்கள் இருந்த போதிலும் இறையுணர்வுச் செயல்களில் இவர்கள் தஞ்சமடைந்தனர்; இவர்கள் சுஸ்கலேத்ரா மற்றும் பிற இடங்களில் மடாலயங்களையும், சைத்தியங்களையும் மற்றும் இதே போன்ற பெரும் கட்டடங்களையும் கட்டினர். இவர்களது ஆட்சியின் புகழ் பெற்ற காலத்தின் போது காஷ்மீர் இராச்சியமானது பெரும்பாலான காலத்திற்கு துறவு மூலம் ஒளி பெற்ற பௌத்தர்களின் ஒட்டு நிலமாகத் திகழ்ந்தது, ஆசிர்வதிக்கப்பட்ட சாக்கிய சிம்மர் நிர்வாணத்தை அடைந்தது முதல் இக்காலம் வரை இந்த நிலவுலகத்தில் 150 ஆண்டுகள் கடந்து விட்டன என்று கூறப்படுகிறது. இந்த நாட்டின் நிலத்தில் ஒரே உச்ச பட்ச ஆட்சியாளராக ஒரு போதிசத்துவர் உள்ளார்; சதரத்வனத்தில் வாழும் சிறப்பு வாய்ந்த நாகார்ச்சுனர் அவர்.

இராஜதரங்கிணி (வரிகள் 168-173)[110][111]

குசானக் கலை

கலச்சயனைச் சேர்ந்த ஒரு குசான இளவரசனின் உருவம் (இடது) மற்றும் ஒரு காந்தார போதிசத்துவரின் தலை (வலது) ஆகியவை ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது (பிலதெல்பியா கலை அருங்காட்சியகம்).[112]

காந்தாரக் கலை மற்றும் பண்பாடானது குசான மேலாதிக்கப் பகுதிகளின் சந்திப்பில் அமைந்திருந்தன. கிரேக்க-பௌத்த கலையின் பாரம்பரியங்களை இவை முன்னேற்றின. மேற்குலகத்தவர்கள் சிறந்த முறையில் அறிந்த குசான தாக்கங்களின் உணர்ச்சிகளாக இவை உள்ளன. காந்தாரத்திலிருந்து குசானர்களின் ஏராளமான நேரடிச் சித்தரிப்புகள் அறியப்பட்டுள்ளன. அங்கு இவர்கள் ஒரு தளர்வான மேலாடை, இடுப்புப் பட்டை மற்றும் கால் சட்டைகளுடன், புத்தர், மேலும் போதிசத்துவர் மற்றும் எதிர் கால புத்தரான மைத்ரேயரின் பக்தர்களாக தங்களது பங்கை ஆற்றியுள்ளதாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளனர்.[112]

பெஞ்சமின் ரோலண்ட் என்பவரின் கூற்றுப் படி பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டின் முடிவில் கலச்சயன் என்ற இடத்தில் குசானக் கலையின் முதல் உணர்ச்சியானது தோன்றுகிறது.[112] இது எலனியக் கலையில் இருந்து பெறப்பட்டதாகும். ஐ கனௌம் மற்றும் நியாசா ஆகிய நகரங்களின் கலையிலிருந்து இது அநேகமாக பெறப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிந்தைய காந்தாரக் கலையுடன் இது ஒற்றுமைகளை தெளிவாகக் கொண்டுள்ளது. குசானக் கலையின் உருவாக்கத்தின் தொடக்கத்தில் காந்தரக் கலை இருந்திருக்கலாம் என்றும் கூட கருதப்படுகிறது.[112] கலச்சயன் மற்றும் காந்தாரக் கலையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள இன வகைகளின் ஒற்றுமையை நோக்கி ரோலாண்ட் குறிப்பாக நமது கவனத்தை ஈர்க்கிறார். உருவப் படங்களின் பாணியிலும் கூட ஒற்றுமைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.[112] எடுத்துக்காட்டாக, கலச்சயனைச் சேர்ந்த ஓர் உயேசி இளவரசனின் பிரபலமான தலை மற்றும் காந்தார போதிசத்துவரின் தலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு பெரும் அளவிலான ஒற்றுமையை ரோலண்ட் காண்கிறார். பிலாதெல்பியா கலை அருங்காட்சியத்தில் உள்ள ஒரு காந்தார போதிசத்துவரின் தலையின் எடுத்துக்காட்டை இவர் குறிப்பிடுகிறார்.[112] காந்தார போதிசத்துவர் மற்றும் குசான ஆட்சியாளர் எரையோசின் உருவ சித்தரிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமையும் கூட கவனிக்கத்தக்கதாக உள்ளது.[112] ரோலண்ட்டின் கூற்றுப் படி காந்தாரக் கலை மீதான தனது தாக்கத்தின் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு கலச்சயனைச் சேர்ந்த பாக்திரிய கலையானது இவ்வாறாக எஞ்சியிருந்தது என்று குறிப்பிடுகிறார். இதற்குக் குசானர்களின் புரவலத் தன்மைக்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும் என்கிறார்.[112]

குசானப் பேரரசின் காலத்தின் போது காந்தார தேசத்தின் பல உருவச் சித்தரிப்புகள் கிரேக்க, சிரிய, பாரசீக மற்றும் இந்திய உருவச் சித்தரிப்புகளின் அம்சங்களுடன் ஒரு வலிமையான ஒத்த தன்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த மேற்குலக பாணியிலான சித்தரிப்புகள் பெரும்பாலும் அதிகப்படியான மடிப்பு உடைகள் மற்றும் சுருள் முடிகளை உடையவையாக உள்ளன.[113] இவை கலைகளின் கலப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, கிரேக்கர்கள் பெரும்பாலும் சுருள் முடியை உடையவர்களாக இருந்தனர்.[சான்று தேவை]

குசானர்கள் மதுரா பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்ற போது மதுரா கலையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது. இந்நேரத்தின் போது கௌதம புத்தரின் தனியாக நிற்கும் சிலைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டின் முடிவு முதல் மதுரா, பர்குட் அல்லது சாஞ்சி ஆகிய இடங்களில் பயன்பாட்டில் இருந்த புத்த சிற்பங்களில் உள்ளதன் படியான அருவ வழிபாட்டிலிருந்து மாற்றமடைவதற்கு, பௌத்தத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களும் ஒரு வேளை ஊக்குவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[114] குசானர்களின் கலை பண்பாட்டு தாக்கமானது எலனிய கிரேக்கம் மற்றும் இந்திய தாக்கங்களின் காரணமாக மெதுவாக வீழ்ச்சியடைந்தது.[115]

குசான நிதி அமைப்பு

பொ. ஊ. முதலாம் நூற்றாண்டின் தல்வேர்சின் தீபே பொக்கிஷத்தைச் சேர்ந்த குசான தங்க வார்ப்புக் கட்டிகள்

தங்களுடைய நிதி அமைப்பின் ஒரு பகுதியாக குசானர்கள் தங்க வார்ப்புக் கட்டிகளைப் பயன்படுத்தினர். 1972ஆம் ஆண்டில் உசுபெக்கிசுதானின் தல்வேர்சின் தீபே என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க பொக்கிஷத்தின் மூலம் இது நமக்கு தெரிகிறது.[122] பொக்கிஷத்தை சேர்ந்த முதன்மையான பொருட்களாக வட்ட வடிவ மற்றும் இணைகரத்திண்ம வடிவ வார்ப்புக் கட்டிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு அலங்காரப் பொருட்களும், ஆபரண பொருட்களும் உள்ளன.[122] வட்ட வார்ப்புக் கட்டிகள் ஒரு வணிக செயல்பாட்டுக்கு தேவைப்படும் நிதியின் அளவைப் பொறுத்து தேவைக்கேற்றவாறு வெட்டிப் பயன்படுத்தப்பட்டன.[122] மாறாக, இணைகரத்திண்ம வார்ப்புக் கட்டிகள் பிரிக்க இயலாத வடிவத்தில் செல்வத்தைச் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இந்த வார்ப்புக் கட்டிகள் கரோஷ்டி எழுத்து முறையிலுள்ள பொறிப்புகளில் அவற்றின் எடை மற்றும் கடவுள் மித்திரனைக் (ஒப்பந்த உறவு முறைகளின் காப்பாளர்) கொண்டிருந்தன.[122] குசானப் பேரரசின் நிதி அமைப்புக்கு இத்தகைய அனைத்து வார்ப்புக் கட்டிகளும் பங்களித்தன.[122]

குசானர்களின் நாணயங்கள் ஏராளமான அளவில் கிடைக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு குசான ஆட்சியாளர்களுக்கும் அவரது புகழை ஊக்குவிக்க, பரப்புரையின் ஒரு முக்கியமான கருவியாக நாணயங்கள் பயன்பட்டன.[123] குசான நாணயங்களின் பெயர்களில் ஒன்று தினாரா ஆகும். இது உரோமைப் பெயரான தெனாரியசு ஔரேயசிலிருந்து பெறப்பட்டது.[123][124] [125]மேற்கே குசான-சாசானிய இராச்சியம் முதல் கிழக்கே வங்காளத்தின் சமதாத இராச்சியம் வரையிலும் குசானர்களின் நாணய வடிவங்கள் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. குப்தப் பேரரசின் நாணய முறையும் கூட தொடக்கத்தில் குசானப் பேரரசின் நாணயங்களிலிருந்த அம்சங்களைப் பயன்படுத்தியது. குசான நாணயங்களின் எடைத் தரம், தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஆகியவற்றைப் பின்பற்றியது. வடமேற்கில் சமுத்திரகுப்தரின் வெற்றிகளைத் தொடர்ந்து இவ்வாறு பின்பற்றப்பட்டது.[126][127][128] தொடக்க கால அரச மரபுகள் கிரேக்க-உரோமை மற்றும் பாரசீகப் பாணிகளை பெரும்பாலும் பின்பற்றின. இவற்றுடன் ஒப்பிடும் போது பாணி மற்றும் பொருளடக்கம் ஆகிய இரண்டிலுமே அதிகப் படியான இந்திய தன்மையுடன் குப்த நாணயங்களின் உருவங்கள் இருந்தன.[127][129]

குசான நாணயங்களில் இருந்த தங்கமானது உரோமைப் பூர்வீகத்தைக் கொண்டது என்று நீண்ட காலமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. வணிகத்தின் விளைவாக உரோமை நாணயங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் உருக்கப்பட்டு, குசான நாணயங்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று பரிந்துரைக்கப்பட்டது. புரோட்டான் செயல்பாட்டு ஆய்வின் வழியான தடைய தனிமங்களின் ஒரு சமீபத்திய தொல்லியல் உலோக ஆய்வானது, குசான நாணயங்கள் அதிகப்படியான பிளாட்டினம் மற்றும் பலேடியத்தைக் கொண்டுள்ளன என்று காட்டுகிறது. உரோமைத் தங்கத்தை இவை பயன்படுத்தின என்ற கருது கோளை இது நிராகரிப்பதாக உள்ளது. இன்று வரை குசான தங்கங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது அறியப்படாமலேயே உள்ளது.[130]

உரோமுடனான தொடர்புகள்

குசானர்களிடையே உரோமை நாணய முறை
உரோமைப் பேரரசர் திராயானின் நாணயம், இது அகின் போசு மடாலயத்தில் மகா கனிஷ்கரின் நாணயங்களுடன் சேர்த்துக் கண்டெடுக்கப்பட்டது
உரோமை ஆட்சியாளர்கள் செப்திமசு செவரசு மற்றும் சூலியா தோம்னாவின் உருவங்களுடன், பிராமி எழுத்துமுறை பொறிப்புடன் குசான மோதிரம்
செப்திமசு செவரசின் ஒரு நாணயத்தின் இந்திய நகல். பொ. ஊ. 193-211

2ஆம் நூற்றாண்டின் போது, பாக்திரியா மற்றும் இந்தியாவின் மன்னர்களிடமிருந்து வருகை புரிந்த தூதுவர்களை ஏராளமான உரோமானிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை அனேகமாக குசானர்களையே குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.[131]

பேரரசர் அத்ரியனைப் (117-138) பற்றி குறிப்பிடும் போது இசுதோரியா அகத்தா என்ற நூலானது பின்வருமாறு குறிப்பிடுகிறது:[131]

2ஆம் நூற்றாண்டில் குசான தலைநகர் பெக்ரமைச் சேர்ந்த ஒரு கண்ணாடிக் குடுவையில் கிரேக்க-உரோமானிய கிளாடியேட்டர் உருவம்

"பாக்திரியர்களின் மன்னர்கள் ஏராளமான தூதுவர்களை இவரிடம் நட்புறவு வேண்டுவதற்காக அனுப்பினர்."[131]

மேலும், பொ. ஊ. 138ஆம் ஆண்டு அரேலியசு விக்டர் மற்றும் அப்பியன் ஆகியோரின் கூற்றுப் படி, அத்ரியனுக்குப் பின் வந்த உரோமைப் பேரரசரான அந்தோணியசு பையசு சில இந்திய, பாக்திரிய, மற்றும் இர்கானிய தூதுவர்களைப் பெற்றார்.[131]

சில குசான நாணயங்கள் "உரோமா" என்பவரின் உருவத்தைக் கொண்டுள்ளன. இவை உரோமுடனான புரிந்துணர்வின் ஒரு வலிமையான நிலை மற்றும் தூதரக உறவுகளின் ஓரளவுக்கான நிலையைப் பரிந்துரைக்கிறது.[131]

குசானப் பேரரசின் கோடைக் கால தலைநகரான பெக்ரமானது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொருட்களை உரோமைப் பேரரசில் இருந்து இறக்குமதி செய்தது. குறிப்பாக பல்வேறு வகையான கண்ணாடி பொருட்களை இறக்குமதி செய்தது. குசானப் பகுதியில் உரோமைப் பொருட்களின் இருப்பை சீனர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்:

"தா சின்னைச் [உரோமைப் பேரரசு] சேர்ந்த பெரு மதிப்பு வாய்ந்த பொருட்கள் [தியான்சு அல்லது வடமேற்கு இந்தியாவில்] காணப்படுகின்றன. மேலும், நல்ல பருத்தி ஆடைகள், நல்ல கம்பளி தரை விரிப்புகள், அனைத்து வகையான வாசனைத் திரவியங்கள், இனிப்பு மிட்டாய், மிளகு, இஞ்சி மற்றும் கருப்பு உப்பு ஆகியவை காணப்படுகின்றன."

—கோவு அன்சு[132]

உரோமின் ஒரு வாடிக்கையாளரும், மெசபத்தோமியாவின் ஓசுரியோன் இராச்சியத்தின் மன்னருமான பார்த்தியாவின் பார்த்தமசுபதேசு குசானப் பேரரசுடன் வணிகம் செய்ததற்காக அறியப்படுகிறார். கடல் மூலமாகவும், சிந்து ஆறு வழியாகவும் இவர் பொருட்களை அனுப்பினார்.[133]

சீனாவுடனான தொடர்புகள்

100
சபேயர்
சர்கத்
சுலே
மேரோ
குச்சா
ஊசுன்
சுஷி
லௌலர்
ஓர்தோசு
பண்பாடு
தோங்கு
தசுதிக்
கோகேல்
பண்பாடு
கங்சு
கோத்தான்
திங்லிங்
சர்மாதியர்
ஆசியாவில் அண். பொ. ஊ. 100இல் முதன்மையான அரசியல் அமைப்புகள்.[134][135][136]

பொ. ஊ. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளின் போது குசானப் பேரரசானது வடக்கு நோக்கி இராணுவ ரீதியாக விரிவடைந்தது. வருவாய் ஈட்டக் கூடிய நடு ஆசிய வணிகத்தின் மையத்தில் இது இவர்களை அமர்த்தியது. நாடோடி ஊடுருவலுக்கு எதிராக சீனர்களுடன் இராணுவ ரீதியாக இவர்கள் இணைந்து செயல்பட்டனர் என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக பொ. ஊ. 84இல் சோக்தியர்களுக்கு எதிராக ஆன் தளபதியான பான் சாவோவுடன் இவர்கள் கூட்டணி வைத்தனர். கஷ்கரின் மன்னரின் ஒரு கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க சோக்தியர்கள் அப்போது முயற்சித்தனர்.[137] பொ. ஊ. 85 வாக்கில் தாரிம் வடி நிலத்திற்கு கிழக்கே துர்பான் மீதான ஒரு தாக்குதலுக்கும் சீன தளபதிக்கு இவர்கள் ஆதரவளித்தனர்.

சீனாவில் குசான நாணய முறை
தாரிம் வடிநிலத்தின் கோத்தானில் கண்டெடுக்கப்பட்ட மகா கனிஷ்கரின் ஒரு வெண்கல நாணயம்.
ஈய வார்ப்புக் கட்டியில் கிழக்கு ஆன் பொறிப்புகள். குசானர்களின் பாணியில் தொடக்க கால கிரேக்க எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சென்சியில் அகழ்வாய்வு செய்து கண்டெடுக்கப்பட்டன. பொ. ஊ. 1ஆம்–2ஆம் நூற்றாண்டு. கான்சு மாகாண அருங்காட்சியகம்.[138][139]

சீனர்களுக்கான தங்களது ஆதரவினை அங்கீகரிப்பதற்காக குசானர்கள் ஓர் ஆன் இளவரசியை வேண்டினர். சீன அரசவைக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பியதற்குப் பிறகும் கூட இவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.[137][140] பதிலடியாக, 86இல் 70,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் பான் சாவோவிற்கு எதிராக இவர்கள் அணி வகுப்பு நடத்தினர். ஆனால் ஒரு சிறிய சீனப் படையால் தோற்கடிக்கப்பட்டனர்.[137][140] உயேசி பின் வாங்கினர். ஆன் பேரரசர் ஹீயின் (89-106) ஆட்சிக் காலத்தின் போது சீனப் பேரரசுக்கு திறை செலுத்தினர்.

158-159இல் ஆன் பேரரசர் குவானின் ஆட்சிக் காலத்தின் போது சீன அரசவைக்குப் பரிசுப் பொருட்களை குசானர்கள் மீண்டும் அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தொடர்புகளைத் தொடர்ந்து, பண்பாட்டுப் பரிமாற்றமானது மேலும் அதிகரித்தது. லோகக்சேமர் போன்ற குசான பௌத்தத் தூதுவர்கள் சீனத் தலைநகரான இலுவோயங் மற்றும் சில நேரங்களில் நாஞ்சிங் ஆகிய இடங்களில் செயல்பட்டனர். மொழி பெயர்ப்பு வேலைப்பாடுகளின் மூலம் குறிப்பாக இவர்கள் தங்களைத் தனித்துக் காட்டினர். சீனாவில் ஹீனயான மற்றும் மகாயான புனித நூல்களை ஊக்குவித்ததாக முதன் முதலில் பதிவு செய்யப்பட்டவர்கள் இவர்கள் தான். பட்டுப் பாதை வழியாக பௌத்தம் பரவியதற்கு இது பெருமளவுக்குப் பங்களித்தது.

வீழ்ச்சி

குசானோ-சாசானியர்கள்

மேற்கு குசானர்களைச் சாசானியர் கட்டுப்படுத்துதல்
இந்தோ-சாசானிய மன்னனான முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (பொ. ஊ. 277–286) வடமேற்கின் முந்தைய குசான நிலப் பரப்புகளில் சாசானிய ஆட்சியைப் பேணினான். இடம் நக்ஸ்-இ ரோஸ்டம், இரண்டாம் பக்ரமின் துணுக்கு.
தங்களது சில பாக்திரிய நாணய முறையில் குசானோ-சாசானியர்கள் குசான நாணயங்களை நகலெடுத்துப் பின்பற்றினர். "மகா குசான மன்னன் பெரோசு" என்பதைச் சுற்றி பாக்திரிய எழுத்துக்களுடன் கூடிய சாசானிய ஆட்சியாளர் முதலாம் பெரோசு குசான்ஷாவின் நாணயம்

225இல் முதலாம் வாசுதேவனின் இறப்புக்குப் பிறகு குசானப் பேரரசானது மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளாகப் பிரிந்தது. ஆப்கானித்தானில் மேற்கு குசானர்கள் சீக்கிரமே பாரசீக சாசானியப் பேரரசால் அடி பணிய வைக்கப்பட்டனர். சோக்தியானா, பாக்திரியா, மற்றும் காந்தாரதேசம் ஆகிய பகுதிகளை அவர்களிடம் இழந்தனர். சாசானிய மன்னரான முதலாம் சாபுர் (240–270) தன்னுடைய நக்ஸ்-இ ரோஸ்டம் கல்வெட்டில் "புருசபுரம்" (பெசாவர்) வரையிலான குசானர்களின் (குசான் சாகர்) நிலப்பரப்பைத் தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். பாக்திரியா மற்றும் இந்து குஃசு வரையிலான பகுதிகள் அல்லது அதற்குத் தெற்கில் உள்ள பகுதிகளையும் கூட இவர் கட்டுப்படுத்தியதாக இது பரிந்துரைக்கிறது:[141]

மஸ்தாவை வழிபடும் பிரபுவும், ஈரான் மற்றும் அன்-ஈரானின் மன்னர்களின் மன்னனான சாபுர் எனும் நான்... ஈரானின் (எரான் சாகர்) நிலப்பரப்பின் எசமானன் நான் ஆவேன் மற்றும் பெர்சிசு, பார்த்தியம்... ஹிந்தேஸ்தான், பஸ்கபூரின் எல்லைகள் வரையிலான குசான நிலப்பரப்பு மற்றும் கஷ், சுக்து மற்றும் சச்சேசுதான் வரையிலான பகுதிகளை நான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.

—கபாயே சர்தோஸ்தில் உள்ள முதலாம் சாபுரின் கல்வெட்டு, நக்ஸ்-இ ரோஸ்டம்[141]

நவீன ஆப்கானித்தானில் உள்ள ரகி பீபி கல்வெட்டின் மூலமும் கூட இது உறுதிப்படுத்தப்படுகிறது.[141]

மேற்கு அரசமரபை சாசானியர்கள் அகற்றினர். அதற்குப் பதிலாக குசான்ஷாக்கள் (தங்கள் நாணய முறையில் பாக்திரியத்தில்: KΟÞANΟ ÞAΟ கொஷானோ ஷாவோ)[142] என்று அறியப்பட்ட பாரசீகத்திற்கு திறை செலுத்தியவர்களை அமர வைத்தனர். இவர்கள் இந்தோ-சாசானியர் அல்லது குசானோ-சாசானியர் என்றும் கூட அழைக்கப்படுகின்றனர். முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷாவிற்குக் (277–286) கீழ் குசானர்கள் இறுதியாக மிக சக்தி வாய்ந்தவர்களாக உருவாயினர். சாசானியப் பேரரசுக்கு எதிராகப் புரட்சி செய்தனர். அதே நேரத்தில், குசானப் பண்பாட்டின் பல அம்சங்களைத் தொடர்ந்தனர். குறிப்பாக, இவர்களது பட்டங்கள் மற்றும் இவர்களது நாணய முறையின் மூலம் இது தெரிகிறது.[143]

"சிறு குசானர்களும்", குப்த மேலாதிக்கமும்

கிழக்கு குசானர்கள் மீதான குப்த கட்டுப்பாடு

அலகாபாத் தூணில் (வரி 23) நடு பிராமி எழுத்துமுறையில் தேவபுத்திர ஷாகி ஷாகானு ஷாகி என சமுத்திரகுப்தரால் தன் மேலாட்சிக்குக் கீழ் என கோரப்பட்டுள்ளது.[144]
பஞ்சாப் பகுதியில் "சமுத்ரா" ( ச-மு-த்ரா) என்ற பெயருடன் அச்சிடப்பட்ட நாணயம். இது குப்த ஆட்சியாளர் சமுத்திரகுப்தரைக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. கடைசி குசான ஆட்சியாளரான கிபுனாடாவின் நாணயங்களை இந்த நாணயங்கள் நகலாகக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் முதல் கிடாரி ஊணர்களின் நாணய முறைக்கு முந்தியதாக இது உள்ளது. அண். 350-375.[145][146]

"சிறு குசானர்கள்" என்றும் அறியப்பட்ட கிழக்கு குசான இராச்சியமானது பஞ்சாபை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 270 வாக்கில் கங்கைச் சமவெளியில் இருந்த இவர்களது நிலப்பரப்புகள் யௌதேயர் போன்ற உள்ளூர் அரசமரபுகளின் கீழ் சுதந்திரமானவையாக உருவாயின. பிறகு 4ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமுத்திரகுப்தரின் கீழான குப்தப் பேரரசால் இவர்கள் அடிபணிய வைக்கப்பட்டனர்.[147] அலகாபாத் தூணில் தன்னுடைய கல்வெட்டில் சமுத்திரகுப்தர் தேவபுத்திர ஷாகி ஷாகானுஷாகி (இது கடைசி குசான ஆட்சியாளர்களைக் குறிக்கிறது. குசானர்களின் அரச பட்டங்களான தேவபுத்திர, ஷாவோ மற்றும் ஷாவானனோஷாவோ: "கடவுளின் மகன், மன்னன், மன்னர்களின் மன்னன்" ஆகியவற்றின் ஒரு சிதைந்த வடிவம் இதுவாகும்) என்போர் தற்போது தனது மேலாட்சியின் கீழ் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் "சுய-சரணடைவுக்கும், அவர்களது (சொந்த மகள்களைத்) திருமண உறவுக்கு அளிப்பதற்கும், அவர்களது சொந்த மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களை நிர்வகிக்க ஒரு வேண்டுதலையும்" அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[148][147][149] அலகாபாத் கல்வெட்டின் காலத்தில் குசானர்கள் இன்னும் பஞ்சாப் பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர் எனவும், ஆனால் குப்தப் பேரரசின் மேலாட்சியின் கீழ் ஆண்டு வந்தனர் என்பதையும் இது பரிந்துரைக்கிறது.[147]

கல்வெட்டு ஆதாரங்கள் கிழக்கு குசானர்களின் நாணய முறையானது மிகப் பலவீனமாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. வெள்ளி நாணய முறையானது ஒட்டு மொத்தமாகக் கைவிடப்பட்டது. தங்க நாணய முறையானது தரம் குறைக்கப்பட்டது. தங்களுக்கு ஆடம்பர பொருட்கள் மற்றும் தங்கத்தை வழங்கிய வணிக வழிகளின் மீதான தங்களது மைய வணிகப் பங்கை கிழக்குக் குசானர்கள் இழந்தனர் என்பதை இது பரிந்துரைக்கிறது.[147] காந்தார பௌத்தக் கலையானது தொடர்ந்து செழித்தது, தக்சசீலத்துக்கு அருகில் சிர்சுக் போன்ற நகரங்கள் நிறுவப்பட்டன.[147]

சாசானிய, கிடாரி மற்றும் அல்சோன் படையெடுப்புகள்

கிழக்கில் 350 வாக்கில் குசானோ-சாசானிய இராச்சியத்திற்கு எதிராக இரண்டாம் சாபுரின் கை ஓங்கியது. தற்போதைய ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் என்று அழைக்கப்படும் பகுதிகளில் பெரும் நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டை அவர் பெற்றார். குசான-சாசானியர்களை சியோனியர்கள் அழித்ததன் ஒரு விளைவாக இது அநேகமாக நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[150] வடக்கே சாசானியர்கள் இன்னும் ஆண்டு கொண்டிருந்தனர். தக்சசீல நகரத்தில் சிந்து ஆற்றைத் தாண்டி சாசானிய நாணய முறையின் முக்கிய கண்டெடுப்புகளானவை இரண்டாம் சாபுர் (ஆட்சி. 309-379) மற்றும் மூன்றாம் சாபுரின் (ஆட்சி. 383-388) ஆட்சிக் காலங்களின் போது மட்டுமே தொடங்குகின்றன. அம்மியனுசு மார்செல்லினசால் குறிப்பிடப்பட்டுள்ள படி, 350-358ஆம் ஆண்டு "சியோனியர்கள் மற்றும் குசானர்களுடனான" இரண்டாம் சாபுரின் போர்களின் விளைவாகவே சிந்து ஆற்றைத் தாண்டி சாசானிய கட்டுப்பாடானது விரிவானது என்பதை இது பரிந்துரைக்கிறது.[151] தங்களது ஆட்சியாளர் முதலாம் கிடாரனின் கீழ் கிடாரிகளின் எழுச்சி வரை அநேகமாக இவர்கள் கட்டுப்பாட்டைப் பேணி வந்தனர் என்று கருதப்படுகிறது.[151]

360இல் கிடாரன் என்ற பெயருடைய ஒரு கிடாரி ஊணன் குசானோ-சாசானிய இராச்சியம் மற்றும் பழைய குசான அரசமரபின் எஞ்சியோரைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தான். கிடாரி இராச்சியத்தை நிறுவினான். குசான பாணியிலான கிடாரி நாணயங்கள் அவர்கள் குசானப் பாரம்பரியத்தைக் கோரினர் என்பதைக் காட்டுகின்றன. கிடாரிகள் மாறாக செல்வச் செழிப்புடன் இருந்ததாகத் தோன்றுகிறது. எனினும், தங்களுக்கு முந்தையோரான குசானரை ஒப்பிடும் போது சிறிய அளவிலேயே செழிப்புடன் இருந்தனர். பஞ்சாபுக்குக் கிழக்கே குசானர்களின் முந்தைய கிழக்கு நிலப்பரப்புகள் வலிமையான குப்தப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.[சான்று தேவை]

அல்சோன் ஊணர்கள் (இவர்கள் ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினராகச் சில நேரங்களில் கருதப்படுகின்றனர்) மற்றும் பிறகு நெசக் ஊணர்கள் ஆகியோரின் படையெடுப்புகளால் 5ஆம் நூற்றாண்டின் முடிவில் வடமேற்கில் இருந்த கிடாரிகளுக்குக் கீழான குசானப் பண்பாட்டின் எஞ்சிய கூறுகள் இறுதியாக அழிக்கப்பட்டன.[சான்று தேவை]

ஆட்சியாளர்கள்

ஆண்டுகளுடன் கூடிய ஆட்சியாளர்களின் சமீபத்திய பட்டியல்:[152]

  • எரையோசு (அண். 1 – 30), தன் நாணயங்களில் தன்னைத் தானே "குசானன்" என்று அழைத்துக் கொண்ட முதல் மன்னன்
"பெரும் குசானர்கள்";
"சிறு குசானர்கள்";

மேலும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

மேலும் படிக்க

  • "A Partial Decipherment of the Unknown Kushan Script". Transactions of the Philological Society 121 (2): 293–329. 12 July 2023. doi:10.1111/1467-968X.12269. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kushan Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குசானப்_பேரரசு&oldid=3937480" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை