^#ஜன கண மன என்னும் பாடலானது தேசிய கீதம், "தமிழ்த்தாய் வாழ்த்து" என்பது மாநில பாடல்/கீதம். ^† 1773-இல் நிறுவப்பட்டது; மதராசு மாநிலம் 1950-இல் உருவானது மற்றும் 14 சனவரி 1969-இல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது[10]
தமிழகம் ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" (Madras State) என்றும், தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் 'தமிழ்நாடு' என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அதற்காக, சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.[11] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் பத்தாவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.[12] 2006-ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில், (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள் தொகையைக் கொண்டிருந்தும், மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%), மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது[15].
பொ.ஊ.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16][சான்று தேவை] தொன்கதை பாரம்பரியத்தின் படி, தமிழ் மொழியானது, சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[17][18][19][20][21][22][23][24] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; மூன்று உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26]
பெயர்
தமிழின் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தற்போதைய தமிழ்நாடு, கேரளம் ஆகிவற்றின் முழு பகுதிகளையும், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் தென் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்க தமிழகம் என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற பெயர் காணப்படுகிறது.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர்"நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்" என்று குறிப்பிடுகிறார்.[30]கம்பர் தன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30 இல் தமிழ்நாட்டை அடையாளப்படுத்தியுள்ளார். அதில் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறான்.
வரலாறு
தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது.
என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு, தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம், மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.
மேலே குறிப்பிடப்பட்ட மதுரை, தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து, பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு, கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
சங்க காலம் (பொ.ஊ.மு. 500–பொ.ஊ. 300)
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மன்னர்களின் ஆரம்பகால வரலாறானது சங்க இலக்கியம் மூலம் அறியப்படுவதால். அக்காலம் சங்க காலம் என்று அறியப்படுகிறது. சங்க காலம் பொ.ஊ.மு. 500 முதல் பொ.ஊ. 300 வரை சுமார் எட்டு நூற்றாண்டுகள் நீடித்தது என்பதை நாணயவியல், தொல்பொருள் மற்றும் இலக்கிய சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் அண்மைய அகழ்வாய்வுகள் சங்க காலத்தின் முக்கியமான வர்த்தக மையங்கள் அல்லது துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தெரியவருகிறது.[31]
பண்டைய தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளும் பகுதிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஆங்காங்கே பல பழங்குடித் தலைவர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டுவந்தனர். அவர்கள் வேள் அல்லது வேளிர் என்று அழைக்கப்பட்டனர். உள்ளூர் அளவில் இன்னும் கீழ்நிலையில் கிழார் அல்லது மன்னர் என்று அழைக்கப்படும் குலத்தலைவர்கள் இருந்தனர்.[32] அரசர்கள் மூவேந்தர் என்று அழைக்கப்பட்டனர். மூன்று முடிசூடிய மன்னர்களாக சேரர், சோழர், பாண்டியர் ஆண்டுவந்தனர்.சேரர்களில்செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில்நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் ஆண்ட தமிழகத்தின் மேற்குப் பகுதி, தற்கால கேரளம் மற்றும் மேற்கு தமிழ்நாடு என்று உள்ளது. சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி வடிநிலப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் வட பகுதியையும் ஆண்டனர். பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம், வடதிசை மவுரிய குப்தப் பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து, தனியரசுகளாக விளங்கின. இந்த தனியரசுகள் வெளி சக்திகளால் ஒருபோதும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், அவர்களுக்கும் வடக்கே உள்ள அரசுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க இராஜதந்திர தொடர்புகள் இருந்தன. அசோகரின் தூண்களில் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.[33] இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.
இந்த ஆட்சியாளர்கள் சில ஆரம்பகால தமிழ் இலக்கியங்களுக்கு பொருளுதவி செய்தனர். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தான் நாம் அறிந்த மிகப் பழமையான சங்கப் படைப்பாகும். பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காதல் மற்றும் போரை கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இச்செய்யுள்களின் வழியாக அன்றைய தமிழ்ச் சமூகத்தை அறிய முடிகிறது. நிலம் வளமானதாக இருந்தது, மேலும் மக்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு தொழில்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கடவுள்களில் சேயோன் மற்றும் கொற்றவை போன்றவர்கள் அடங்குவர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வணங்கப்பட்டனர்.[34] ஆட்சியாளர்கள் பௌத்தம் மற்றும் ஜைன சமயத்தையும் ஆதரித்தனர், மேலும் பொது ஊழிக்குப் பிறகான காலத்தில் தொடங்கி வேத வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் வளரத் தொடங்கின.[35]
கடல்கடந்த நாடுகளுடன் குறிப்பிடத்தக்க வர்த்தகமும் மேற்கொள்ளப்பட்டது. உரோமானியர்கள் மற்றும் ஹான் சீனாவில் இருந்து மிகுதியான வர்த்தகம் தமிழகத்தில் ஒன்றிணைந்தது, மேலும் முசிரி மற்றும் கொற்கை துறைமுகங்கள் மிகவும் பிரபலமான இடங்களாக இருந்தன.[36] தமிழகத்தின் மிகவும் விலையுயர்ந்த பொருட்களில் ஒன்று கருப்பு மிளகு போன்ற மசாலாக்கள், மற்ற வாசனைப் பொருட்கள், முத்துக்கள் மற்றும் பட்டு ஆகியவையும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டன.[37]
300-இல் தொடங்கி, சங்க கால மேன்மையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. இது சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய ஒரு வம்சமான களப்பிரர் ஆவர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களில் சமணர் மரபுகள் பெரிதும் காணப்பட்டன. எழுத்தறிவு பரவலாக இருந்தது, சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் எழுதப்பட்டன. இந்த படைப்புகளில் மிகவும் முக்கியமானது வள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆகும். இது வாழ்வியல் நெறிமுறைகள் முதல் காதல் வரை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நூலாகும். இந்த நூல் தற்காலத்தில் உள்ளவர்களாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகின்றது.[38]பொ.ஊ. 7-ஆம் நூற்றாண்டில், களப்பிரர்கள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களால் வீழ்த்தப்பட்டனர்.[39] தமிழ் வேந்தர்கள் பக்தி இயக்க காலத்தில் சைவ மற்றும் வைணவ மறுமலர்ச்சிக்கும், அதற்கு முன்னர் பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களுக்கும் ஆதரவளித்தனர்.[40]
பொ.ஊ. 4 தொடக்கம் 9-ஆம் நூற்றாண்டுவரை
பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால், அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால், அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள், பொ.ஊ. 4 தொடக்கம் 6-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன், பல்லவராட்சி, தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலகட்டத்தில் (பொ.ஊ. 300–600) பௌத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[41]
பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316-இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும், பாண்டியர்களையும், ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அம்பியைத் தலைநகராகக் கொண்டிருந்த விசயநகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
மதுரை மீனாட்சி கோயிலின், தெற்கு கோபுரத்தின் உச்சியில் இருந்து, வடக்கு நோக்கி வான்வழி காட்சி ஆகும். இக்கோயில் விசயநகரப் பேரரசால், திருப்பணி செய்யப்பட்டது.
ஆனால், 1565-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலைக்கோட்டைப் போரில், தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும், நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு, கிராம சுய ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு, பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும், மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி, ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேயப் படையெடுப்பு நிகழும் வரை, சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி, பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
1947-இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948-ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென்மேற்கு கருநாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953-இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும், தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டன. 1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டன. 1969-இல், மதராசு மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில், தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956-இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
பாரம்பரியம்
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ. (50,216 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது மற்றும் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும், வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளன. தீபகற்ப இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை தமிழகம் பரவியுள்ளது. ஒன்றிய பகுதி, புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது.
மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளன. தமிழகத்தின் இயற்கையமைப்பு, பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது. இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன.
நாட்டின் மூன்றாவது மிக நீளமான கடற்கரையை, தமிழகம் 906.9 கி.மீ. (563.5 மைல்) கொண்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால், தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதிகள் பாதிக்கப்பட்டு, 2,758 மரணங்களை ஏற்படுத்தியது.
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போல் அன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு, வடக்கே கருநாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி,தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.
ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராகவும், முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மதராசு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதித்துறையின் தலைவராக உள்ளார். தற்போதைய ஆளுநராக ஆர். என். ரவி, முதல்வராக மு. க. ஸ்டாலின் மற்றும் தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி ஆகியோர் உள்ளனர். நிர்வாக ரீதியாக இம்மாநிலம், 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். மேலும் இது இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இம்மாநிலத்தில் 39 மக்களவைத் தொகுதிகளும், 234 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. 1986-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஈரவை சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது, பின்னர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே, ஓரவை சட்டமன்றமாக மாற்றப்பட்டது. அரசாங்கத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போதைய அரசாங்கம் 2021-இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) கட்சியின், மு.க. ஸ்டாலின் தலைமையில் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. மாநிலத்தில் நான்கு முறை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வந்தது - முதலில் 1976 முதல் 1977 வரை, அடுத்து 1980-இல் சிறிது காலம், பின்னர் 1988 முதல் 1989 வரை மற்றும் 1991-இல் சமீபத்தியது.
தமிழ்நாடு, இந்தியாவில் மின் ஆளுமை முயற்சிகளின் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. நில உடைமை பதிவுகள் போன்ற அரசுப் பதிவுகளில் பெரும் பகுதி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற மாநில அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்கள் - அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலக நடவடிக்கைகள் - வருவாய் சேகரிப்பு, நிலப் பதிவு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு வெற்றிகரமாகப் பராமரிக்கப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு காவல்துறை 140 ஆண்டுகளுக்கும் மேலானது. இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநில காவல்துறை ஆகும். (2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்த காவல் படை 1,11,448) மற்றும் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெண் காவல்துறையினர் உள்ளனர் (தமிழகத்தின் மொத்த பெண் காவல் பணியாளர்கள் 13,842 (12.42%) ஆகும்).
அரசியல்
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஓர் அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
1967 முதல் 2021-இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை, தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன.
மாநில நிர்வாகப் பிரிவுகள்
தமிழ்நாடு, நிர்வாக வசதிகளுக்காக, பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[42]
மாவட்டங்கள்
வருவாய் கோட்டங்கள்
வட்டங்கள்
குறுவட்டங்கள்
வருவாய் கிராமங்கள்
மாநகராட்சிகள்
நகராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள்
பேரூராட்சிகள்
கிராமப் பஞ்சாயத்துகள்
மக்களவைத் தொகுதிகள்
சட்டமன்றத் தொகுதிகள்
38
87
313
1,349
17,680
21
142
385
487
12,618
39
234
பெரிய நகரங்கள்
இம்மாநிலத்தின் தலைநகரமான சென்னை, அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு 8,900,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கோயம்புத்தூர் ஆகும். தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக மதுரை விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து நான்காவது நகரமாக, திருச்சிராப்பள்ளி, அதற்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன.[43] 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னை அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது நகரமாகும்.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே, பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாகப் பெயர் மாற்றம் பெற்று வந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில், மாவட்டங்களின் பெயர்களுடன், காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 38 மாவட்டங்களில் 310 வருவாய் வட்டங்கள் உள்ளன.
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72,147,030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36,137,975 மற்றும் பெண்கள் 36,009,055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3,820,276 ஆகவும்: சிறுமிகள் 3,603,556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28,040,491 (86.77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23,797,016 (73.44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48.40% மக்களும், கிராமப்புறங்களில் 51.60 % மக்களும் வாழ்கின்றனர்.[45]
தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 6,31,88,168 (87.58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 42,29,479 (5.86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 44,18,331 (6.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14,601 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89,265 (0.12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11,186 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,414 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 1,88,586 (0.26 %) ஆகவும் உள்ளன.
89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.
பழங்குடிகள்
தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், இருளர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பளியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.
தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் உற்பத்தி, போர்வைகள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழம், பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும், கனரக தொழிற்சாலைகளுக்கும், மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், திண்டுக்கல் நூற்பாலைகள், பூட்டு ,மலர் உற்பத்தி,காய்கறி உற்பத்தி மற்றும் சுற்றுலாவுக்கு நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும், கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், காஞ்சிபுரம் பட்டு உற்பத்திக்கும், ஆரணி பட்டு மற்றும் பொன்னி எனும் ஒரு வகை அரிசி உற்பத்திக்கும், ஓசூர் வாகன உற்பத்தி மற்றும் பல தொழிற்சாலைகளும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஆலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர்[48].
இந்தியாவில், தொழிற்சாலைகள் எண்ணிக்கையில், தமிழ்நாடு முதலிடம் – 26,122[49].
மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டில், இந்தியாவில், முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.
இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 %.
சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000. வர்த்தக வாகனங்கள்: 3,61,000. எசுயுவி: 1,50,000.
இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது[50].
இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது[50].
மின்சாரம்: 18,083 மெகா வாட் (இரண்டாவது பெரியது).
சிறப்புப் பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19[50].
அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது).
சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம்.
இரகுராம் ராசன் அறிக்கையின் படி, தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்.[51]
தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
'இரகுராம் ராசன் அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு.[52]
2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[53] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி, 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[54]
கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் – பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.
தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை.
மொழியும் இலக்கியமும்
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, தமிழ் மொழி ஆகும். ஆங்கிலமும், அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில், தமிழ், முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி, மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும், செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே, இலக்கியம் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி, தமிழ் மொழியாகும்.
திருக்குறள் என்ற அறநூல், தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால், திருக்குறள் 'உலகப் பொதுமறை'யெனப் போற்றப்படுகிறது.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
(திருக்குறள் 400)
தமிழின் இலக்கியங்களிலிருந்து, அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறிய முடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள், தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம், புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[56] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும், சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில், மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.
போக்குவரத்து
சாலை
தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் போக்குவரத்து முறையை தமிழகம் கொண்டுள்ளது. மாநிலத்தில் 29 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன, மொத்தம் 5,006.14 கி.மீ (3,110.67 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. புது தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற இந்திய பெருநகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டத்திற்கான ஒரு முனையமும் இந்த மாநிலமாகும். மாநிலத்தின் மொத்த சாலை நீளம் 167,000 கி.மீ (104,000 மைல்), இதில் 60,628 கிமீ (37,672 மைல்) நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், கும்பகோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை முக்கிய சாலை சந்திப்புகள் ஆகும். சாலை போக்குவரத்திற்கு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்குகின்றன. மாநிலத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் 24 மணி நேரமும் பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2013 ஆம் கணக்கெடுப்பின் படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களுக்கு தமிழகம் காரணமாக இருந்தாலும், விபத்துக்குள்ளாகும் பகுதிகளில் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது. இறப்பு எண்ணிக்கை 2011இல் 1,053 ஆக இருந்தது, 2012இல் 881 ஆகவும், 2013இல் 867 ஆகவும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்களும், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு சிறு துறைமுகங்களும் உள்ளன. சென்னைத் துறைமுகம்கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு செயற்கை துறைமுகமாகும், மேலும் கொள்கலன்களைக் கையாளும் நாட்டின் இரண்டாவது முக்கிய துறைமுகமாகும். எண்ணூர் துறைமுகம் தமிழ்நாட்டின் அனைத்து நிலக்கரி மற்றும் தாது போக்குவரத்தையும் கையாளுகிறது. 2005 ஆம் ஆண்டில் துறைமுகங்களில் சரக்குகளின் அளவு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு மற்றும் அகலப்பட்டைஇணைய இணைப்புகள் அளிக்கின்றன. ஆக்ட் பிராட்பேண்ட், ஹாத்வே, யூ பிராட்பேண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அல்லாத அகலப்பட்டை இணைய இணைப்புகள் மட்டும் அளிக்கின்றன. பெரும்பாலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் குறைந்தது 100mbps வேகத்தில் அளிக்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்புகள் அளிக்கின்றன. ஏர்டெல், ஜியோ, வோடபோன்நகர்பேசி நிறுவனங்கள் 2G, 3G, 4G அலைக்கற்றை சேவைகளையும், பி.எஸ்.என்.எல். 2G, 3G அலைக்கற்றை சேவைகளையும் அளிக்கின்றன.
மாநிலம் முழுவதும் 55,000 கி.மீ ஒளிவடம் மூலம், 1 ஜி.பி வரை அதிவேக இணையத்தை வழங்கவும், அனைத்து நிறுவனங்கள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கவும் .தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு அனைத்து அரசு துறைகள், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட வீடுகளுக்கும் பயனளிக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14) மற்றும்
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
விளையாட்டு
சடுகுடு என்று அழைக்கப்படும் கபாடி, தமிழ்நாட்டில் மாநில விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு சிலம்பம் ஆகும். சேவல் சண்டை, சல்லிக்கட்டு, திருவிழா நேரங்களில் பிரபலமான ஒரு காளை அடக்கும் விளையாட்டு, ரெக்கலா என அழைக்கப்படும் எருது-ஓட்ட பந்தயம், காற்றில் பட்டம் விடுதல், கோலி, பளிங்குகளுடன் கூடிய விளையாட்டு, ஆடு புலி ஆட்டம், "ஆடு மற்றும் புலி" விளையாட்டு போன்றவை ஆகும். இந்த பாரம்பரிய விளையாட்டுகளில் பெரும்பாலானவை தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளுடன் தொடர்புடையவை மற்றும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் விளையாடப்படுகின்றன. செ. இளவழகி, 2002 முதல் 2016 வரை கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர்.
1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து, மொழிவாரி அடிப்படையில் கருநாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்கள், பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இந்நாளை 63 ஆண்டுகள் கொண்டாடாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும், தமிழ்நாடு நாள் நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.[57][58]